கோவை மாநகராட்சி ஒரே போடு.. ரோட்டு சைடுல வண்டிய பார்க் செய்தால் கட்டணம்!! கிளம்பிய விமர்சனம்
கோவை: கோவை மாநகரில் சாலையோரம் நிறுத்தப்படும் வாகனங்களுக்கு பார்க்கிங் கட்டணம் வசூலிக்க மாநகராட்சி நிர்வாகம் சார்பில் முடிவு செய்யப்பட்டுள்ள நிலையில், இதனால் பல்வேறு முறைகேடுகள் நடக்க வாய்ப்புள்ளதாகவும், ஒப்பந்ததாரர்கள் மட்டுமே இதன் மூலம் பயனடைவார்கள் என்றும் சமூக ஆர்வலர்கள் குற்றம்சாட்டி வருகின்றனர்.
கோவை மாநகரில் பணக்காரி வீதி, ராஜவீதி, பெரியகடை வீதி காந்திபுரம்,கிராஸ்கட் சாலை உள்ளிட்ட பகுதிகளில் அதிக அளவில் வணிகக் கடைகள் உள்ளன. தீபாவளி, பொங்கல், உள்ளிட்ட பண்டிகை காலங்களிலும், ஆடி மாதத்திலும், இப்பகுதிகளில் மக்கள் கூட்டம் அலைமோதும்.
வணிக வளாகங்கள் அதிகமுள்ள இப்பகுதிகளில் உள்ள அனைத்து சாலைகளிலும், வாகனங்கள் சாலைகளிலேயே நிறுத்தப்பட்டு வருகின்றன. கோவை மாநகராட்சி சார்பில் பல்வேறு பகுதிகளில் பார்க்கிங் வசதி ஏற்படுத்தப்பட்டு ஒப்பந்ததாரர்கள் மூலம் பராமரிக்கப்பட்டு வந்தாலும், தொடர்ந்து சாலைகளில் வாகனங்கள் நிறுத்தப்படுவது தொடர்கதையாகவே உள்ளது.

இந்நிலையில், ராஜவீதி, பெரியகடை வீதி, ரேஸ்கோர்ஸ், கிராஸ்கட் சாலை, வெரைட்டிஹால் சாலை, பாரதிபார்க் சாலை, என்.எஸ்.ஆர். சாலை உள்ளிட்ட மக்கள் அதிகளவில் கூடும் பகுதிகள், கடைகள் அதிகம் உள்ள சாலைகளில் நிறுத்தப்படும் வாகனங்களுக்கு பார்க்கிங் கட்டணம் வசூலிக்க மாநகராட்சி நிர்வாகம் சார்பில் முடிவு செய்யப்பட்டுள்ளது.
இந்த சாலைகளில் நிறுத்தப்படும் இருசக்கர, நான்கு சக்கர வாகனங்களுக்கான கட்டணம் ஒப்பந்ததாரர்கள் மூலம் வசூலிக்கப்படும். இதன் மூலம் வணிக வளாகங்கள், மக்கள் அதிகம் கூடும் சாலைகளில் கூடுதல் போக்குவரத்து நெரிசலும், கட்டணக் கொள்ளையும் மட்டுமே நடைபெறும் என்றும், இதன் மூலம் ஒப்பந்ததாரர்கள் மட்டுமே பயனடைவார்கள் இதன் மூலம் மக்களுக்கு எந்தப் பயனும் இல்லை என்றும் சமூக ஆர்வலர்கள் குற்றம்சாட்டி வருகின்றனர்.
இதுகுறித்து, "சிட்டிசன்ஸ் வாய்ஸ்" கோயம்புத்தூர் அமைப்பின் தலைவர் சி.எம்.ஜெயராமன் "ஒன்இந்தியாவிடம்" கூறுகையில், "ஏற்கனவே ராஜவீதி, மணிக்கூண்டு, காந்திபுரம் உள்ளிட்ட பொதுமக்கள் அதிகம் கூடும் பகுதிகளில் மாநகராட்சி சார்பில் கட்டணத்துடன் கூடிய பார்க்கிங் வசதி செய்து தரப்பட்டுள்ளது. இருந்தாலும், அதில் நிர்ணயிக்கப்பட்ட கட்டணம் பொதுமக்களிடம் இருந்து வசூலிக்கப்படுவதில்லை. கூடுதலாக 20 முதல் 30 ரூபாய் அதிகமாகவே வசூலிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், ஏற்கனவே நெரிசல் மிகுந்த இப்பகுதிகளில் உள்ள சாலைகளில் வாகனங்கள் நிறுத்தப்படுவதைக் கட்டுப்படுத்துவதைத் தவிர்த்துவிட்டு, கட்டணம் வசூலிப்பது என்பது மேலும் போக்குவரத்து நெரிசலையே ஏற்படுத்தும்.
இதற்கு பதிலாக மல்டிலெவல் பார்க்கிங் அமைத்து போக்குவரத்து நெரிசலைத் தவிர்க்க மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். அதேபோல, எலக்ட்ரானிக் முறையிலான பணம் செலுத்தும் முறையை கொண்டு வருவதன் மூலம் கட்டணக் கொள்ளையும் தவிர்க்கப்படும்" என்றார்.
இதுகுறித்து, கோவை மாநகராட்சி ஆணையர் சிவகுருபிரபாகரன் கூறியதாவது: "மாநகராட்சி மாமன்ற கூட்டத்தில் இதுதொடர்பான தீர்மானம் நிறைவேற்றப்படும். மேலும், இதுதொடர்பாக காவல் துறையுடன் ஆலோசனை நடத்தி வருகிறோம். போக்குவரத்தை எளிமையாக்கும் வகையில் எந்த இடங்களில் எல்லாம் வாகனங்களை நிறுத்தலாம், எந்த இடங்களில் எல்லாம் நிறுத்தக் கூடாது என்பது குறித்து ஆலோசித்து கொண்டிருக்கிறோம். ஆலோசனைக்குப் பிறகு தேவைப்படும் இடங்களில் கட்டண பார்க்கிங் வசதி அமலுக்கு கொண்டு வரப்படும்,"என்றார்.












Click it and Unblock the Notifications