‛‛சவுக்கு சங்கரை சிறையில் அடையுங்க’’.. கோவை நீதிமன்றம் அதிரடி உத்தரவு.. மே 17 வரை நீதிமன்ற காவல்
கோவை: பெண் போலீஸ் குறித்து அவதூறாக பேசியதாக பிரபல யூடியூபர் சவுக்கு சங்கர் இன்று தேனியில் கைது செய்யப்பட்டார். அதன்பிறகு அவர் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்பட்ட நிலையில் சவுக்கு சங்கரை மே 17 ம் தேதி வரை கோவை மத்திய சிறையில் அடைக்க உத்தரவிடப்பட்டுள்ளது.
பிரபல யூடியூபராக இருப்பவர் சவுக்கு சங்கர். இவர் லஞ்ச ஒழிப்பு துறையில் பணியாற்றிய அவர் டெலிபோன் உரையாடல் கசிந்தது தொடர்பான புகாரில் 2008ல் கைது செய்யப்பட்டார்.

அதன்பிறகு சவுக்கு சங்கர் பணியில் இருந்து சஸ்பெண்ட் செய்யப்பட்டு டிஸ்மிஸ் ஆனார். இவர் தொடர்ச்சியாக தமிழக அரசு, முதல்வர் ஸ்டாலின், அமைச்சர்கள், ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகளை கடுமையாக விமர்சனம் செய்து வந்தார்.
சமீபத்தில் அவர் பங்கேற்ற விவாதத்தில் காவல் துறை அதிகாரிகள், பெண் காவலர்கள் பற்றி அவர் கூறிய கருத்து சர்ச்சையை கிளப்பியது. இததொடர்பாக கோவை சைபர் க்ரைம் போலீசில் புகார் பதிவாகி இருந்தது.
இந்நிலையில் தான் இன்று காலையில் தேனி தனியார் விடுதியில் தங்கியிருந்த சவுக்கு சங்கரை கோவை சைபர் க்ரைம் போலீசார் அதிரடியாக கைது செய்தனர். தகாத வார்த்தையில் பேசுதல், பெண்கள் குறித்து அவதூறாக பேசுதல், அரசு ஊழியரை பணி செய்ய விடாமல் தடுத்தல், தகவல் தொழில்நுட்ப சட்டத்தை தவறாக பயன்படுத்துதல் என மொத்தம் 5 பிரிவுகளில் அவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
அதன்பிறகு அவர் போலீஸ் வாகனத்தில் கோவை அழைத்து செல்லபட்டார். அப்போது வழியில் போலீஸ் வாகனம் விபத்தில் சிக்கியது. இதில் சவுக்கு சங்கர் மற்றும் போலீசார் காயமடைந்தனர். அவர்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று கொண்டனர். அதன்பிறகு இன்று மாலையில் சவுக்கு சங்கருக்கு கோவையில் மருத்துவ பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.
அதன்பிறகு அவர் கோவை நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்பட்டார். இதையடுத்து சவுக்கு சங்கரை மே 17 ம் தேதி வரை நீதிமன்ற காவலில் கோவை மத்திய சிறையில் அடைக்க நீதிமன்றம் உத்தரவிட்டது. இதையடுத்து அவர் நீதிமன்றத்தில் இருந்து கோவை மத்திய சிறைக்கு பாதுகாப்புடன் அழைத்து செல்லப்பட்டார்.












Click it and Unblock the Notifications