தமிழ்நாட்டிலேயே கோயம்புத்தூர் தாங்க டாப்! மக்களோட மனசு அப்படி! கலெக்டருக்கு கிடைத்த கவுரவம்!
கோவை: பெண் குழந்தைகளின் பிறப்பு பாலின விகிதம் உயர்வில் தமிழ்நாட்டிலேயே கோவை மாவட்டம் தான் முதலிடம் வகிக்கிறது.
கோவைக்கு அடுத்தபடியாக தஞ்சாவூரும், கரூரும் இரண்டாம் மற்றும் மூன்றாம் இடங்களை பிடித்துள்ளது.
பெண் குழந்தைகளின் பிறப்பு பாலின விகிதத்தை உயர்த்துவதற்காக சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறை சார்பில் பல்வேறு வகைகளில் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.

சமூக நலத்துறை
சமூக நலம் மற்றும் சத்துணவுத் திட்டத் துறை என்ற பெயரை "சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறை" என தமிழக அரசு மாற்றம் செய்துள்ளது. பெண்கள், குழந்தைகள், மூத்த குடிமக்கள், திருநங்கையர் போன்றவர்களின் நலனை காத்திடும் வகையில் அரசு பல்வேறு நலத்திட்டங்களை அறிவித்து செயல்படுத்தி வருகிறது.

பெண் குழந்தைகள்
அந்த வகையில், சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறை சார்பில் பெண் குழந்தைகளின் பிறப்பு பாலின விகிதத்தை உயர்த்துவதற்காக சிறப்பாக செயலாற்றி சாதனை புரிந்த மூன்று மாவட்டங்களுக்கு மாநில பெண் குழந்தைகள் பாதுகாப்பு தின விருதுகள் வழங்கப்பட்டு வருகிறது. அதன்படி, 2022-ஆம் ஆண்டுக்கான மாநில பெண் குழந்தைகள் பாதுகாப்பு தின விருதுகள், பெண் குழந்தைகளின் பிறப்பு பாலின விகிதத்தை உயர்த்திட பெருமுயற்சிகள் மேற்கொண்டு தீவிர கண்காணிப்பு நடவடிக்கைகள் மூலம் சிறப்பாக செயலாற்றிய கோயம்புத்தூர் மாவட்ட ஆட்சித் தலைவர் சமீரன் ஐ.ஏ.எஸ்.க்கு தங்கப் பதக்கம் வழங்கப்பட்டுள்ளது.

தலைமைச் செயலகம்
இதேபோல் இரண்டாம் இடத்தில் உள்ள தஞ்சாவூர் மாவட்ட ஆட்சித் தலைவர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் ஐ.ஏ.எஸ்.க்கு வெள்ளிப் பதக்கமும், கரூர் மாவட்ட ஆட்சித் தலைவர் பிரபுசங்கர் ஐ.ஏ.எஸ்.க்கு வெண்கலப் பதக்கமும் மற்றும் பாராட்டுப் பத்திரங்களும் வழங்கி கவுரவிக்கப்பட்டுள்ளது. தலைமைச் செயலகத்திற்கு அழைத்து மேற்கண்ட இந்த மூன்று மாவட்ட ஆட்சியர்களையும் பாராட்டி அனுப்பி வைத்தார் முதலமைச்சர் ஸ்டாலின்.

பெண் குழந்தைகள்
பெண் குழந்தைகள் பிறப்பை கொண்டாடும் கோவை மக்களால் அங்கு பெண் குழந்தைகள் பாலின விகிதம் அதிகரித்திருக்கிறது. இதேபோல் மற்ற மாவட்டங்களிலும் அதிகரிக்க வேண்டுமானால், அரசு மருத்துவமனைகள், தனியார் மருத்துவமனைகள், செயற்கை கருத்தரிப்பு மையங்கள், ஸ்கேன் மையங்கள், உள்ளிட்டவற்றை உரிய அதிகாரிகள் தீவிரமாகவும் தொடர்ச்சியாகவும் கண்காணித்து அங்கு கருவில் பாலினம் கண்டறியப்படுகிறதா, கருக்கலைப்பு நடைபெறுகிறதா என்பதை அறிந்து அதனை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டியது அவசியமாகும்.












Click it and Unblock the Notifications