‘2021 உத்தரவாதம் என்னாச்சு முதல்வரே’.. போராட்டத்தில் இறங்கிய கோவை விவசாயிகள்.. காரணம் என்ன?
கோவை: கோவை மாவட்டம் சூலூர் அருகே விவசாய நிலத்தின் வழியாக எண்ணெய் குழாய் பதிக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது. இதற்கு விவசாயிகள் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். அதிகாரிகளுடனான பேச்சுவார்த்தை தோல்வியடைந்த காரணத்தால் விவசாயிகள் காலவரையற்ற உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். போராட்டத்தில் ஈடுபட்டுள்ள விவசாயிகள் முதல்வர் மு.க. ஸ்டாலினையும் விமர்சித்துள்ளனர்.
கோவை மாவட்டம், இருகூர் பகுதியில் இருந்து, கர்நாடகா மாநிலம் பெங்களூர் அருகே உள்ள தேவனஹல்லி வரை சுமார் 270 கிலோ மீட்டர் தொலைவுக்கு பாரத் பெட்ரோலியம் நிறுவனம் சார்பில் எண்ணெய் குழாய் பதிக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்தத் திட்டத்தின் கீழ், கோவை மாவட்டத்தில் இருந்து திருப்பூர் மாவட்டம் முத்தூர் வரை சுமார் 70 கிலோ மீட்டர் தொலைவுக்கு விவசாய நிலங்கள் வழியாக எண்ணெய் குழாய் பதிக்கப்பட உள்ளது.

இதனால் ஆயிரக்கணக்கான விவசாயிகள் பாதிக்கப்படுவதாக புகார் எழுந்துள்ளது. விவசாய நிலம் வழியாக எண்ணெய் குழாய் பதிப்பதால் நிலத்தடி நீர் மாசுபடும், விவசாயப் பயிர்கள் பாதிக்கப்படும், நிலத்தின் மதிப்பு குறைந்நது. மேலும் மகசூலும் பாதிக்கப்படுகிறது. " என்று விவசாயிகள் கூறியுள்ளனர்.
இதுகுறித்து விவசாயிகள் மேலும் கூறுகையில், இந்த திட்டத்துக்கு மாற்று வழி இல்லாமல் இல்லை. திருப்பூரில் இருந்து பெங்களூர் வரை விவசாய நிலங்களை பாதிக்காத வகையில் சாலையோரமாக தான் குழாய்களை பதிக்கின்றனர். அதேபோல கோவை மாவட்டத்திலும் விவசாய நில்த்தை பாதிக்காத வகையில் சாலையோரமாக இத்திட்டத்தை கொண்டு செல்ல வேண்டும் என கூறியிருந்தனர்.
இதுதொடர்பாக விவசாயிகள் மற்றும் அதிகாரிகளிடையே தொடர்ந்து பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. கோவை மாவட்ட ஆட்சியருடன் நடைபெற்ற இரண்டு கட்ட பேச்சுவார்த்தைகள் தோல்வியடைந்துவிட்டன. அரசு தங்களின் கோரிக்கையை ஏற்காததால் விவசாயிகள் போராட்டத்தில் இறங்கியுள்ளனர்.
அதன்படி சூலூர் வட்டாட்சியர் அலுவலகத்தை இன்று காலை நூற்றுக்கணக்கான விவசாயிகள் முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். தொடர்ந்து அதிகாரிகள் விவசாயிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். அதிலும் உடன்பாடு ஏற்படவில்லை. இதனால் மாலை முதல் விவசாயிகள் சூலூர் வட்டாட்சியர் அலுவலகத்தில் காலவரையற்ற உண்ணாவிரதப் போராட்டத்தைத் தொடங்கியுள்ளனர்.
அரசு தங்களின் கோரிக்கையை ஏற்றால் மட்டுமே போராட்த்தை கைவிடுவோம் என விவசாயிகள் கூறியுள்ளனர். இதனால் அங்கு பரபரப்பான சூழல் நிலவி வருகிறது. பாதுகாப்புக்காக அங்கு சுமார் நூற்றுக்கணக்கான போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். விவசாயிகளின் போராட்டம் காரணமாக சூலூர் வட்டாட்சியர் அலுவலகம் முன்பு தடுப்புகள் அமைக்கப்பட்டுள்ளன. தொடர்ந்து அங்கு பதற்றமான சூழல் நிலவுகிறது.
அதிகாரிகள் விவசாயிகளுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளனர். இதுகுறித்து போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள் கூறுகையில், தமிழ்நாடு முதல்வர் மு. க. ஸ்டாலின் எதிர்க்கட்சித் தலைவராக இருந்தபோது, கடந்த 2021 ஆம் ஆண்டு பெருந்துறையில் நடைபெற்ற மேற்கு மண்டல விவசாயிகள் மாநாட்டில் விவசாயிகள் அனுமதியின்றி ஒரு அடி நிலத்தை கூட எடுக்க மாட்டேன் என உத்தரவாதம் அளித்தார்.
ஆனால் முதல்வர் அளித்துள்ள வாக்குறுதிகளை புறந்தள்ளிவிட்டு, மத்திய அரசால் தனியாருக்கு விற்பதற்கு ஏலம் கோரப்பட்டுள்ள பாரத் பெட்ரோலியத்தின் நிறுவனம் எண்ணெய் குழாய் பதிப்பதற்கான திட்டத்திற்கு கோவை மாவட்ட நிர்வாகம் காவல்துறை பாதுகாப்பு வழங்கி விவசாயிகளை வஞ்சித்து வருகிறது என்றனர்.












Click it and Unblock the Notifications