நீலகிரிக்கு இனி டக்குனு போகலாம்.. கோவை காரமடையில் வரப்போகும் சூப்பர் மாற்றம்.. 2 மாதம் தான்
கோவை: கோவை - மேட்டுப்பாளையம் சாலையில் காரமடை பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வந்தது. இதைத்தொடர்ந்து, அப்பகுதியில் உயர்மட்ட மேம்பாலம் கட்டப்பட வேண்டும் என பலரும் கோரிக்கை வைத்து வந்தனர். இதைத்தொடர்ந்து, ரூ. 28.93 கோடி மதிப்பில் உயர்மட்ட மேம்பாலம் கட்டும் பணிகள் தொடங்கப்பட்டு தற்போது முழுமையாக நிறைவடைந்துள்ளது. இந்நிலையில், இந்த உயர்மட்ட மேம்பாலம் பிப்ரவரியில் திறக்கத் திட்டமிடப்பட்டுள்ளதாக நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
கோவை மாவட்டத்தில் உள்ள கோவை - மேட்டுப்பாளையம் சாலை பிரதான சாலையாக உள்ளது. நீலகிரிக்குச் செல்லும் சுற்றுலாப் பயணிகள் பெரும்பாலும் இந்த சாலையையே பயன்படுத்தி வருகின்றனர். பண்டிகை நாட்கள், விடுமுறை நாட்கள் போன்ற முக்கிய நாட்களில் கோவை - மேட்டுப்பாளையம் சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வந்தது. குறிப்பாக, காரமடை பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருவதால் பொதுமக்கள் கடும் சிரமத்துக்குள்ளாகி வந்தனர்.

தோளம்பாளையம், கண்ணார்பாளையம் சாலைகள் மிக குறுகிய சாலைகளாக உள்ளதால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வந்தது. அதேபோல, காரமடை - தோளம்பாளையம் சாலையில் உள்ள ரயில்வே கேட்டும் நாள்தோறும் 10 முறைக்கு மேல் திறந்து மூடப்பட்டு வருவதால் பொதுமக்கள், வாகன ஓட்டிகள் நீண்ட நேரம் காத்திருந்து செல்ல வேண்டியுள்ளது. இதனால், சில நேரங்களில் ஆம்புலன்ஸ் வாகனங்களும் கூட போக்குவரத்து நெரிசலில் சிக்கி பாதிக்கப்பட்டு வந்தன.
போக்குவரத்து நெரிசல் பிரச்சனைகளைத் தீர்க்கும் வகையில், காரமடையில் உயர்மட்ட மேம்பாலம் அமைக்கப்பட வேண்டும் என்று பொதுமக்கள் நீண்ட நாட்களாக கோரிக்கை விடுத்து வந்தனர். இதைத்தொடர்ந்து, நெடுஞ்சாலைத் துறை ரூ. 28.93 கோடி மதிப்பில் காரமடையில் உயர்மட்ட மேம்பாலம் அமைக்கத் திட்டமிட்டது. இதையடுத்து, 2023 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் உயர்மட்ட மேம்பாலம் கட்டுப் பணிகள் தொடங்கப்பட்டன.
இருப்பினும், ரயில்வே துறையின் அனுமதி கிடைக்காமல் இருந்ததால் பணிகள் தாமதமாகி வந்தன. அனுமதி கிடைத்ததைத் தொடர்ந்து பாலத்தின் முக்கிய கட்டுமானப் பணிகள் முழுமையாக முடிவடைந்துள்ளன. மேட்டுப்பாளையம் சாலை, தோளம்பாலையம் சந்திப்புகளில் ரவுண்டானா பணிகள் நிலுவையில் உள்ள நிலையில் இந்தப் பணிகளும் விரைவில் தொடங்கப்படும் என்று, பொங்கல் பண்டிகைக்குள் முடிக்கப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இதுகுறித்து நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகள் கூறுகையில், காரமடை உயர்மட்ட மேம்பாலப் பணிகள் நிறைவடைந்துள்ளன. இதைத்தொடர்ந்து, மின்விளக்குகள் அமைக்கும் பணிகள் தொடங்கப்படவுள்ளது. ரவுண்டானா பணிகள் நிறைவடைந்ததும் பாலம் திறக்கப்படவுள்ளது. இரண்டு மாதங்களில் பணிகள் அனைத்தும் நிறைவடைந்து 2026 ஆம் ஆண்டில் பாலம் திறக்கப்படும் என்று கூறியுள்ளனர்.












Click it and Unblock the Notifications