தங்கம் விலைக்கு "தாலிக்குத் தங்கமே" வேண்டாம்! கோல்டே இல்லாமல் மாங்கல்யம் செய்த கோவை பொற்கொல்லர்
கோவை: தாலிக்குத் தங்கம் இல்லாமலேயே திருமணத்தை நடத்த முடியுமா? நாளுக்கு நாள் தங்கம் விலை அதிகரித்து வரும் நிலையில் தங்கத்திற்கு பதிலாக இப்படி ஒரு புதிய ஏற்பாட்டை கோவையில் உள்ள தங்க நகை கலைஞர் ஒருவர் வடிவமைத்துள்ளார்.
சென்னையில் தங்கம் விலை சவரனுக்கு ரூ 70,160க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிராம் ரூ 8,770-க்கு விற்பனை செய்யப்படுகிறது. கடந்த 4 நாட்களில் சவரனுக்கு ரூ 4360 உயர்ந்துள்ளது. இன்று மார்க்கெட் விடுமுறை என்பதால் தங்கம் விலை நேற்றைய விலைக்கே விற்கப்படுகிறது.

அது போல் வெள்ளியின் விலையும் ஒரு கிராம் 110 க்கு விற்பனை செய்யப்படுகிறது. விற்கும் விலைக்கு தங்கம், வெள்ளி நகைகளை கூட போடாமல் விட்டுவிடக் கூடும். ஆனால் திருமணத்திற்கு திருமாங்கல்யம் என்பது முக்கியமானது. எப்பேர்பட்ட பணக்காரராக இருந்தாலும் அரை பவுனில்தான் தாலி போடுவார்கள்.
இரட்டை தாலி
ஒரு வேளை 60 ஆம் திருமணம் நடந்துவிட்டால் கூடுதலாக அரை கிராம் மேலும் ஒரு திருமாங்கல்யம் என இரட்டை தாலி தொங்கும். ஏழை எளிய மக்கள் கஷ்டத்திற்காக தங்க நகைகளையும் விற்று கழுத்தில் இருக்கும் தாலியை கூட விற்று குடும்பம் நடத்த வேண்டியுள்ளது.
மதிப்பு
தமிழகத்தில் தாலிக்கு பெரிய மதிப்பும் கலாச்சார பந்தமும் இருப்பதால் தங்கம் இல்லாவிட்டாலும் மஞ்சள் கிழங்கில் வைத்து தாலி கட்டிக் கொள்கிறார்கள். தற்போது தங்கம் விற்கும் விலையை பார்த்தால் இனி அப்படித்தான் மஞ்சள் கிழங்கை தாலி கயிற்றில் கோர்த்துக் கொள்ளும் நிலை வரும் போல!
கோவை கலைஞர்
இந்த நிலையில் கோவையை சேர்ந்த தங்க நகை கலைஞர் ராஜா என்பவர் ஏழை எளிய மக்களுக்கு உதவும் நோக்கில் மஞ்சள் கொம்பில் திருமாங்கல்யத்தை வடிவமைத்துள்ளார். இவர் குனியமுத்தூரை சேர்ந்தவர். காந்திபுரத்தில் நகைக் கடையில் தொழிலாளியாக வேலை பார்த்து வருகிறார்.
மஞ்சள் கொம்பு
மஞ்சள் கொம்பில் தாலி செய்ய வேண்டும் என தோன்றியது ஏன் என்பது குறித்தும் அவர் விவரித்துள்ளார். அதாவது கடந்த ஆண்டு தனது நண்பர் ஒருவர் திருமணத்திற்கு திருமாங்கல்யம் வாங்க பணத்திற்காக படாதபாடு பட்டாராம். அதை மனதில் வைத்தே மஞ்சள் கொம்பில் திருமாங்கல்யம் செய்தாராம்.
15 ஆயிரம் கூட செலவாகும்
இன்றைய நிலைக்கு ஒரு கிராமுக்கு தாலி செய்ய வேண்டுமானால் கூட 10 முதல் 15 ஆயிரம் வரை ஆகும். அரை பவுன் என்றாலும் கூட 35 ஆயிரம் ஆகிவிட்டது. இதனால் மஞ்சள் கொம்பில் தாலி அணிவதில் பொருளாதார ரீதியில் மட்டுமல்லாமல் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்து உடலை நலமாக வைத்துக் கொள்ளும், மங்களகரமாக இருக்கும்.
செலவு இல்லை உழைப்பு
இதுகுறித்து பொற்கொல்லர் ராஜா கூறுகையில், இந்த மஞ்சள் தாலியை நான் வெளியிட்டதும் எனக்கு நிறைய இடங்களில் இருந்து போன்கள் வருகின்றன. எனக்கு இது மகிழ்ச்சியை கொடுக்கிறது. எனக்கு இதற்கான செலவு என்று ஒன்றுமில்லை. ஆனால் தாலி வடிவில் செய்வதால் உழைப்பு மட்டுமே உள்ளது.
மஞ்சள் தாலி இலவசம்
இந்த தாலியை செய்வதற்கு 3 முதல் 4 மணி நேரம் ஆகும். தங்கத்தில் தாலி செய்வதை காட்டிலும் மஞ்சள் கொம்பில் தாலி செய்வது கடினம். இந்த மஞ்சள் தாலியை தேவைப்படுவோருக்கு நான் இலவசமாகத்தான் தருகிறேன். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications