"கோவையின் அடையாளம்.." இரவோடு இரவாக அகற்றப்பட்ட பிஎஸ்ஜி ஸ்கைவாக்.. அதிர்ச்சியில் மக்கள்! என்ன காரணம்
கோவை: கோவையின் அடையாளங்களில் ஒன்றான பிஎஸ்ஜி கல்லூரி இரும்பு நடை மேம்பாலம் திடீரென அகற்றப்பட்டுள்ளது. அதற்கான காரணம் என்ன என்பது குறித்து நாம் பார்க்கலாம்.
பொதுவாக ஒவ்வொரு ஊருக்கும் அடையாளமாக ஐக்கானிக் இடங்கள் இருக்கும். நம்ம சென்னை என்றால் சென்டிரல் ரயில் நிலையம். ஹைதராபாத் என்றால் சார்மினார். அப்படி கோவையின் அடையாளமாக இருந்தது பிஎஸ்ஜி ஸ்கைவாக்.

ஸ்கைவாக்: பீளமேடு அவிநாசி சாலையில் உள்ள பிஎஸ்ஜி கல்லூரிக்கு முன்பு உள்ள இரும்பு வளைவுகள் கொண்ட நடை மேம்பாலத்தை ஊழியர்கள் இன்று அகற்றினர். அவிநாசி சாலையில் மேம்பால கட்டுமான பணிகள் நடக்க உள்ள நிலையில், அதற்கு வசதியாக நேற்று இந்த ஐகானிக் நடை மேம்பாலம் அகற்றப்பட்டது. அங்கே மாணவர்கள் உள்ளிட்ட பாதசாரிகள் எளிதாகச் சாலையைக் கடக்க இது பயன்பட்டு வந்தது.
இப்போது இந்த ஸ்கைவாக் அகற்றப்பட்டுள்ள நிலையில், பாதசாரிகள் சாலையைக் கடக்க உதவும் வகையில் கோவை நகர போலீஸார் அங்கே புதிதாக சிக்னலை நிறுவியுள்ளனர். அதேநேரம் இந்த ஸ்கைவாக் அகற்றப்பட்டது தற்காலிக நடவடிக்கை மட்டுமே. அவினாசி மேம்பால பணிகள் முடிந்த பிறகு மீண்டும் இந்த இரண்டு மூன்று மாதங்களில் இந்த ஸ்கைவாக் நிறுவப்படும். இதற்கான அனுமதியையும் தமிழக அரசிடம் அந்த கல்வி நிறுவனம் பெற்றுள்ளதாக காவல்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
என்ன காரணம்: அப்பகுதியில் மேம்பாலம் அமைக்கப்பட்ட பிறகு தற்போதுள்ளதை விட குறைந்த உயரத்தில் அந்த ஸ்கைவாக் நிறுவப்படும் எனத் தெரிகிறது. அவிநாசி சாலையில் கோல்டு வின்ஸ் முதல் உப்பிலிபாளையம் வரை 10 கிமீ தூரத்திற்கு 1,621 கோடி ரூபாய் மதிப்பில் நான்கு லேன் மேம்பாலம், கட்டப்படுகிறது. இந்த மெகா மேம்பாலம் 306 தூண்கள் கொண்டதாகவும் பல ஏறும் மற்றும் இறங்கும் வழிகளைக் கொண்டதாகவும் இருக்கும்.
கடந்த 2020 டிசம்பரில் இத்திட்டத்தின் கட்டுமான பணிகள் தொடங்கப்பட்ட நிலையில், அடுத்தாண்டு இது நிறைவடையும் என தெரிகிறது. பீளமேட்டில் கான்கிரீட் தளங்களை நெடுஞ்சாலைத்துறையினர் அமைக்க வேண்டி உள்ளதால் இந்த ஸ்கைவாக் இப்போது அகற்றப்படுகிறது. நேற்றிரவு இந்த ஸ்கைவாக் அகற்றப்பட்ட நிலையில், அதற்கு மொத்தம் 6 மணி நேரம் ஆகியுள்ளது. இதன் காரணமாக அனைத்து வாகனங்களும் அருகிலுள்ள சாலைகள் வழியாகத் திருப்பி விடப்பட்டது.
மாற்று வழி: ஸ்கைவாக் அகற்றப்பட்டதும் இப்பகுதியில் மேம்பாலம் அமைக்கும் பணியை இரண்டு அல்லது மூன்று மாதங்களில் முடிக்க அதிகாரிகள் திட்டமிட்டுள்ளனர். அந்த வேலை முடிந்ததும், மீண்டும் மேம்பாலத்தின் அடியில் ஸ்கைவாக்கை அமைக்கத் திட்டமிட்டுள்ளனர். இதற்காகக் கடந்த வெள்ளிக்கிழமை மாலையே அந்த ஸ்கைவாக் மூடப்பட்டது. மாணவர்கள் சிக்னல் மூலம் சாலையைக் கடக்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டனர். தினசரி சுமார் 4000 மாணவர்கள் இந்த பகுதியில் மட்டும் சாலையை கடப்பார்கள் எனத் தெரிகிறது.
இதனால் இங்கே புதிதாக சிக்னல் அமைக்கப்பட்டு டிராபிக் போலீசாரும் பணியில் அமர்த்தப்படுகிறார்கள். மேம்பால கட்டுமானம் முடிந்த பிறகும் கூட இந்த சிக்னலை தொடர்ந்து இயக்க திட்டமிட்டுள்ளனர்.
ஸ்கைவாக்கின் கதை: இந்த ஸ்கைவாக் கடந்த 2007இல் பிஎஸ்ஜி காலேஜ் ஆஃப் டெக்னாலஜியின் சிவில் இன்ஜினியரிங் மாணவர்களால் கட்டப்பட்டது. முதலில் 2003இல் அங்கே கான்கிரீட் மேம்பாலத்தை அமைக்கவே முடிவு செய்தனர். இருப்பினும், டிசைனில் கோளாறு காரணமாக கான்கிரீட் பாலத்திற்குப் பதிலாக அவர்கள் இந்த இரும்பு மேம்பாலத்தைக் கட்டினர். ஸ்கைவாக் முழுவதும் ஒரே பீஸாக வெல்ட் செய்யப்பட்டு அப்படியே தூக்கி இங்கே நிறுவப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.












Click it and Unblock the Notifications