கோவை பயங்கரம்:கள்ளக் காதலில் பிறந்த குழந்தை ரூ.2 லட்சத்துக்கு விற்பனை- கடத்தல் நாடகமாடிய தாய் கைது!
கோவை: கோவையில் கள்ளக் காதலில் பிறந்த குழந்தையை ரூ.2 லட்சத்துக்கு விற்பனை செய்துவிட்டு கடத்தல் நாடகமாடிய தாய் உட்பட 7 பேர் அதிரடியாக கைது செய்யப்பட்டுள்ளனர். கடத்தப்பட்டதாக கூறப்பட்ட குழந்தை, கன்னியாகுமரியில் போலீசாரால் மீட்கப்பட்டுள்ளது.
கோவை காரமடையைச் சேர்ந்த 28 வயது பெண் ஒருவர், தமது 1 வயது குழந்தை திடீரென மாயமாகிவிட்டது; குழந்தையை யாரோ கடத்திச் சென்றுவிட்டனர் என்று துடியலூர் போலீசில் பரபரப்பு புகார் கொடுத்தார். இதனடிப்படையில் போலீசார் தீவிர விசாரணை நடத்தினர்.

துடியலூர் போலீசார் நடத்திய பல்வேறு கட்ட விசாரணைகளில் அடுத்தடுத்து அதிர்ச்சி தகவல்கள் கிடைத்தன. முதலில் குழந்தை கடத்தப்படவே இல்லை என்பது அம்பலமானது. பின்னர்தான் குழந்தையை அந்த பெண்ணே ரூ. 2 லட்சத்துக்கு வேறு ஒருவருக்கு விற்பனை செய்ததும் தெரியவந்தது.
இதனையடுத்து அந்த பெண் மற்றும் அவரது குடும்பத்தினரிடம் போலீசார் துருவித் துருவி நடத்திய விசாரணையில் அடுத்தடுத்து அதிரவைக்கும் தகவல்கள் கொட்டிக் கொண்டே இருந்தன.
காரமடையைச் சேர்ந்த அந்த பெண், வேறு ஒருவருடன் திருமணமானவர்; அவருக்கு 7 வயதில் மகள் உள்ளார். அதே நேரத்தில் அந்த பெண்ணுக்கும் அதே பகுதியைச் சேர்ந்த இளைஞர் ஒருவருக்கும் தொடர்பு இருந்துள்ளது. இந்த தொடர்பில்தான் கடத்தப்பட்டதாக கூறப்பட்ட குழந்தை பிறந்திருக்கிறது. கடந்த ஒரு ஆண்டாக குழந்தையை அந்த பெண் தமது தாயாருடன் சேர்ந்து வளர்த்து வந்தார்.
இந்த நிலையில் அநத பெண்ணின் கள்ளக்காதலனின் ஆலோசனையின் பேரில், சேலத்தைச் சேர்ந்த குழந்தைகளை கடத்தி விற்பனை செய்யும் கும்பலிடம் ரூ.2 லட்சத்துக்கு விற்பனை செய்துள்ளனர். அந்த கும்பல் கன்னியாகுமரியைச் சேர்ந்த குழந்தை பேறு இல்லாத தம்பதிக்கு கூடுதல் விலைக்கு விற்பனை செய்துள்ளது.
இதனிடையே கள்ளக்காதலுடன் அந்த பெண்ணுக்கு தகராறு ஏற்பட்ட நிலையில்தான் கடத்தல் நாடகத்தை அவர் அரங்கேற்றி இருக்கிறார். தொடக்கத்தில் அந்த பெண் மீது போலீசாருக்கு சந்தேகம் வரவில்லை. ஆனால் கடத்தப்பட்ட குழந்தை கன்னியாகுமரியில்தான் இருக்கிறது.. எனக்கு தகவல் வந்திருக்கிறது.. எப்படியாவது மீட்டுத் தாருங்கள் என புலம்பிய போதுதான் விசாரிக்க வேண்டிய விதத்தில் போலீசாரும் விசாரித்து உண்மைகளை கண்டறிந்தனர்.
இதனையடுத்து அந்த பெண், பெண்ணின் தாய், கள்ளக்காதலன் உட்பட மொத்தம் 7 பேரையும் கூண்டோடு தூக்கியது துடியலூர் போலீஸ். அத்துடன் குழந்தையை சட்டவிரோதமாக வாங்கியதற்காக கன்னியாகுமரி தம்பதியையும் போலீசார் கைது செய்ய உள்ளனர். இந்த சம்பவம் கோவை வட்டாரத்தில் பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ளது.












Click it and Unblock the Notifications