கோவை மக்களின் பல வருட கனவு நிறைவேறுது.. சத்தமில்லாமல் விமான நிலையத்தில் நடக்கும் சம்பவம்
கோவை: கோயம்புத்தூர் சர்வதேச விமான நிலைய விரிவாக்கத்தை விரைவுப்படுத்த வேண்டும் என்று பல்வேறு தரப்பினர் கோரிக்கைகள் வைத்து வந்தனர். அந்த கோரிக்கைகளை தொடர்ந்து, இந்திய விமான நிலைய ஆணையம் (AAI) சுமார் 470 ஏக்கர் நிலங்களை கையகப்படுத்தி, ஆரம்பகட்டப் பணிகளைத் தொடங்கியிருக்கிறது. கோவை சர்வதேச விமான நிலையத்தை விரிவாக்கம் செய்ய தமிழக அரசு கையகப்படுத்திய நூற்றுக்கணக்கான ஏக்கர் நிலங்களை இந்திய விமான நிலைய ஆணையம் பெற்றுக்கொண்டு வேலையை தொடங்கி உள்ளது.
தமிழ்நாட்டின் இரண்டாவது பெரிய நகரமான கோவையில் சர்வதேச விமான நிலையம் இருக்கிறது. ஆனால் நகரம் வளரும் வேகத்திற்கு கோவை விமான நிலையம் விரிவாக்கம் செய்யப்படவில்லை. இதனால் பெரிய விமானங்கள் மற்றும் பன்னாட்டு விமானங்கள் அதிக அளவில் வந்து செல்ல முடியாத நிலை இருக்கிறது. தற்போதைய நிலையில் கோவை சர்வதேச விமானநிலையத்தில் இருந்து சென்னை, டெல்லி, மும்பை, ஹைதராபாத், ஷீரடி உள்ளிட்ட நகரங்களுக்கும், அபுதாபி, சிங்கப்பூர், ஷார்ஜா ஆகிய வெளிநாடுகளுக்கும் விமானங்கள் இயக்கப்பட்டு வருகின்றன. தினமும் உள்நாட்டிற்குள் 29 விமானங்களும், வெளிநாடுகளுக்கு 4 விமானங்களும் இயக்கப்பட்டு வருகிறது.

2024ல் பயணிகள் விவரம்: கோவை விமானநிலையத்தை பொறுத்தவரை நாளுக்கு நாள் பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. அதன்படி கடந்த ஆண்டு ஜனவரி மாதம் முதல் நவம்பர் மாதம் வரை கோவை விமான நிலையத்தில் 27 லட்சத்து 71 ஆயிரத்து 272 பயணிகள் பயணம் செய்திருக்கிறார்கள். அத்துடன் 10,571 மெட்ரிக் டன் சரக்குகள் அனுப்பி வைக்கப்பட்டு உள்ளதாக புள்ளி விவரங்கள் அண்மையில் வெளியாகின.
26 லட்சம் பயணிகள்: கடந்த 2023-ம் ஆண்டில் மொத்தம் 26 லட்சத்து 37 ஆயிரத்து 143 பயணிகள் பயணம் செய்திருந்தனர். 6,843 மெட்ரிக் டன் சரக்குகள் கையாளப்பட்டிருக்கிறது. முன்னதாக கடந்த 2022-ம் ஆண்டு 20 லட்சத்து 84 ஆயிரத்து 783 பேர் பயணம் செய்திருக்கிறார்கள். அப்போது 8,530 மெட்ரிக் டன் சரக்குகள் அனுப்பப்பட்டிருக்கிறது. இதேபோல் 2021-ம் ஆண்டு காலக்கட்டத்தில் 10 லட்சத்து 92 ஆயிரத்து 721 பயணிகள் பயணம் செய்திருக்கிறார்கள். அந்த காலக்கட்டத்தில் 6,780 மெட்ரிக் டன் சரக்குகள் அனுப்பி வைக்கப்பட்டது.
கோவை விமான நிலைய பயணிகள் எண்ணிக்கை: கடந்த 4 ஆண்டுகளாக பயணிகளின் எண்ணிக்கை விவரங்களை எடுத்து பார்த்தால் மிகப்பெரிய மாற்றம் தெரியும். 2021ல் 10 லட்சம் என்று இருந்த பயணிகள் எண்ணிக்கை படிப்படியாக உயர்ந்து 27 லட்சம் என்கிற அளவில் உயர்ந்துள்ளது. இந்தஎண்ணிக்கை 50 லட்சம் என்கிற அளவில் உயர வாய்ப்பு உள்ளதாக தெரிகிறது. இதனை கருத்தில் கொண்டு விமானநிலையத்தை விரிவாக்கம் செய்வதை உடனே மேற்கொள்ள வேண்டும் என்ற கோரிக்கை வலுத்து வந்தது.

கோவை மக்கள் எதிர்பார்ப்பு: ஏனெனில் கோவை சர்வதேச விமான நிலையத்தின் விரிவாக்கம் என்பது கோவைக்கு மட்டுமல்லாமல், திருப்பூர், ஈரோடு, சேலம், கரூர், நாமக்கல், திண்டுக்கல் உள்ளிட்ட மாவட்டங்களுக்கு பெரிய பயனுள்ளதாக இருக்கும். அதேபோல் கேரளாவில் பாலக்காட்டிற்கும் பயனுள்ளதாக இருக்கும் என்பதால் எதிர்பார்ப்பு அதிகமாக இருந்தது.
470 ஏக்கர் நிலம் : இந்நிலையில் தமிழக அரசு விமான நிலைய விரிவாக்க பணிகளுக்காக நீண்ட காலமாக நிலத்தை கையகப்படுத்தி வந்தது. கடந்த 2021ம் ஆண்டுக்கு பின் பணிகள் வேகமெடுத்த நிலையில். சுமார் 2000 கோடி அளவிற்கு நில உரிமையாளர்களுக்கு இழப்பீடு வழங்கப்பட்டு சுமார் 470 ஏக்கர் நிலம் கையகப்படுத்தப்பட்டிருந்தது. ஆனால் தமிழக அரசு, தான் கையகப்படுத்திய நிலங்களை மத்திய அரசின் கீழ் செயல்படும் இந்திய விமான நிலைய ஆணையத்திடம் ஒப்படைக்க சில நிபந்தனைகளை முன்வைத்தது. அவை எதிர்பாராததாகவும், புதிதாக இருப்பதாக கருதிய மத்திய அரசு அந்த நிபந்தனைகளை ஏற்றுக் கொள்ள மறுத்தது.
விமான நிலைய ஆணையம் ஏற்பு : இதனால் விரிவாக்கம் சம்பந்தமான பணிகள் அப்படியே முடங்கியது.. இந்நிலையில் கோவை மக்களின் கோரிக்கையை ஏற்று தமிழக அரசு ஒப்படைத்த நிலங்களை விமான நிலைய ஆணையம் ஏற்றுக்கொண்டது. கடந்த ஜூலை 28ம் தேதி இந்த நல்ல விஷயம் நடந்திருக்கிறது. இந்த பணிக்காக விமான நிலைய ஆணையம் எடுத்துக் கொண்டுள்ள 470.17 ஏக்கர் நிலத்தில் 449.59 ஏக்கர் பட்டா நிலமாகவும், மீதமுள்ள 20.58 ஏக்கர் அரசு புறம்போக்கு நிலம் என்றும் தகவல்கள் வெளியாகி உள்ளது.
கோவை விமான நிலைய விரிவாக்கம்: தற்போது வழங்கப்பட்ட நிலங்களை விமான நிலைய ஆணையம் அளவீடு செய்யும் பணியினை தொடங்கி உள்ளது. இந்த பணிக்கு பின்னர் விமான நிலைய ஆணையம் சார்பில் இந்த நிலங்களை சுற்றி சுற்றுச்சுவர் கட்டப்படும். முன்னதாக 130 ஏக்கர் பாதுகாப்பு நிலத்தில் விரிவாக்க பணிகள் நடைபெற அனுமதி வழங்கப்பட்டிருநதது. இந்தத் திட்டத்திற்கு சில நிலங்களே இன்னும் கையகப்படுத்த வேண்டியுள்ளதால் பணிகள் விரைவில் வேகமெடுக்கும் என எதிர்பார்க்கலாம்.
கோவை மக்களுக்கு மகிழ்ச்சி: விரிவாக்கப் பணிகள் விரைவில் தொடங்கவுள்ள நிலையில், கோவை சர்வதேச விமான நிலையம் மிகப்பெரிய அளவில் உருமாற்றம் அடையும். நீண்ட காலமாக விமான நிலைய விரிவாக்கத்திற்காகக் காத்திருந்த கோவை மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதி மக்கள் ஏங்கி வந்த நிலையில், இந்த முன்னேற்றம் அந்த பகுதி மக்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.












Click it and Unblock the Notifications