சென்னையை தொடர்ந்து கோவையை புரட்டிப்போட்ட பேய் மழை.. வெள்ளம் புகுந்ததால் மக்கள் அவதி
கோவை: சென்னையை தொடர்ந்து கோவையில் கனமழை கொட்டித்தீர்த்துள்ளது. விடிய விடிய கனமழை கொட்டியதால் கோவை, மேட்டுப்பாளையம், காரமடை உள்ளிட்ட பல்வேறு இடங்களில் வெள்ளம் புகுந்தது. கோவை மாநகரில் நேற்று நள்ளிரவு 108 மில்லி மீட்டர் மழை பெய்ததால் சுரங்கப்பாதைகள் தண்ணீரில் தத்தளித்தன.
தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக கோவை மாவட்டம் பீளமேட்டில் 10.7 செ.மீ. மழை பொழிந்துள்ளது. சூலூர் 8 செ.மீ., கோவை தெற்கு 7.8 செ.மீ., ஆனைமலை 5.2 செ.மீ., சின்னகல்லாறு 4.9 செ.மீ., போத்தனூர் 4.3 செ.மீ. மழை பெய்துள்ளது.

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரம் அடைந்துள்ள நிலையில், கோவை, நீலகிரியில் கனமழை பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரித்து இருந்தது. அதன்படியே நேற்று முன்தினம் இரவு முதல் நேற்று காலை வரை கோவை, மேட்டுப்பாளையம், காரமடை, சிறுமுகை, அன்னூர் உள்ளிட்ட இடங்களில் விடிய விடிய கனமழை பெய்தது. கனமழையால் தாழ்வான பகுதிகளில் மழை வெள்ளம் சூழ்ந்து மக்கள் அவதி அடைந்தனர்.
கோவை மாநகரில் நேற்று இரவு பெய்த பலத்த மழை காரணமாக உப்பிலிபாளையம் மேம்பாலத்தின் கீழ் பகுதியில் தண்ணீர் தேங்கியது. இதேபோல் கோவை முழுவதும் உள்ள சுரங்கப்பாதைகள் முற்றிலும் தண்ணீரில் மூழ்கின. அந்த தண்ணீர் அனைத்தும் இன்று காலை அகற்றப்பட்டு போக்குவரத்து சீர் செய்யப்பட்டது.
இதனிடையே பலத்த மழை காரணமாக கோவை சிக்காரம்பாளையம்-கருப்பராயன் கோவில் தரைமட்ட பாலம், கண்ணார்பாளையம்-காளட்டிப்புதூர் தரைமட்ட பாலம் ஆகியவை மழை வெள்ளத்தில் மூழ்கியதால் போக்குவரத்து துண்டிக்கப்பட்டது. இதேபோல் காரமடை சாஸ்திரி நகரில் தரைமட்ட பாலமும் வெள்ளத்தில் மூழ்கியது. பெள்ளாதி குட்டை முழு கொள்ளளவை எட்டியதால், வெள்ளம் தடுப்பணையை தாண்டி ஓடியது. குரும்பனூர் கிராமத்தில் தரைமட்ட பாலத்தை மூழ்கடித்து மழை வெள்ளம் பெருக்கெடுத்தது.
கனமழையால் மருதூர் ஊராட்சி ஏழு சுழி கிராமத்தில் உள்ள தடுப்பணை முழு கொள்ளளவை எட்டியதால், தடுப்பணையில் விரிசல் ஏற்பட்டு, விளைநிலங்களுக்குள் வெள்ளம் புகுந்தது. அதோடு அருகில் உள்ள திம்பம்பாளையம் மற்றும் அதன் சுற்றுவட்டாரத்தில் வெள்ளம் சூழ்ந்தது. மேலும் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி கட்டிடத்திலும் வெள்ளம் புகுந்தது. அங்கு செயல்பட்டு வந்த வகுப்பறைகளில் மேசை, நாற்காலி ஆகியவற்றை மழை வெள்ளம் சூழ்ந்து இருந்ததை காண முடிந்தது.
விடிகாலை பேய்ஞ்ச மழை. மேட்டுப்பாளையம் கோவை pic.twitter.com/2vLdu9iFIT
— நாடு எங்கபோகுது? (@Piramachari) December 9, 2023
மேட்டுப்பாளையம் அடுத்த சிறுமுகை அருகே இரும்பறை சம்பரவள்ளிபுதூரில் புதிதாக கட்டப்பட்டு வரும் தடுப்பணை உடைந்தது. இதனால் அருகில் உள்ள மயானம் மற்றும் விளைநிலங்களை தண்ணீர் சூழ்ந்தது. அன்னூரில் கனமழையால் பிரசித்தி பெற்ற மன்னீஸ்வரர் கோவிலிலும் மழை வெள்ளம் புகுந்தது. மேலும் புவனேஸ்வரி நகர், பனந்தோப்பு மயில், குன்னூராம்பாளையம், பழனிகிருஷ்ண அவென்யூ உள்ளிட்ட இடங்கள் வெள்ளக்கடாக மாறின. அன்னூர், மேட்டுப்பாளையம், காரமடை பகுதிகள் அனைத்தும் வெள்ளத்தில் தத்தளித்தன.ஒரே நாளில் பேய் மழை கொட்டியதால் கோவை மற்றும் புறநகர் பகுதிகளில் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. இன்றும் மழை பெய்ய வாய்ப்பு உள்ளதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.












Click it and Unblock the Notifications