கோவை லங்கா கார்னரில் இதை கவனிச்சீங்களா.. இனி ஈஸியா உக்கடம் போகலாம்.. சூப்பர் ரூட்
கோவை: கோவை மேம்பால பணிகள், மெட்ரோ ரயில் திட்டம் உள்ளிட்டவை காத்திருப்பில் உள்ளது. வாகனங்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் பெருகி வருவதால், போக்குவரத்து நெரிசல் அதிகரித்து கொண்டிருக்கிறது. வாகன ஓட்டிகளுக்கு தலைவலியாக மாறி வரும் இந்தப் பிரச்சனைக்கு தீர்வு வேண்டும் என மக்கள் கோரிக்கை வைத்து வருகின்றனர். அதிலும் கோவையின் பல முக்கிய சாலைகளை இணைக்கும் லங்கா கார்னர் பகுதியில் போக்குவரத்து நெரிசல் எப்போதும் அதிகமாக உள்ளது. இந்நிலையில் லங்கா கார்னரில் இருந்து எளிதாக உக்கடம் செல்வதற்கு ஒரு புதிய ஒரு வழிச்சாலை பாதை கொண்டு வரப்பட்டுள்ளது.
கோவை மாநகரில் மக்கள் தொகை நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டிருக்கிறது. தொழில்துறை, கல்வி, மருத்துவம், ஐடி துறைகளில் கோவை தொடர்ந்து முன்னேறி கொண்டிருக்கிறது. அதற்கேற்ற வகையில் கோவை மாநகரின் உள்கட்டமைப்பு வசதி மேம்படுத்தப்படவில்லை. இதனால் கோவை நகரில் போக்குவரத்து நெரிசல் பிரச்சனை மிகப்பெரியளவில் மாறி கொண்டிருக்கிறது. இது வாகன ஓட்டிகளுக்கு பெரும் சிரமத்தை ஏற்படுத்தி கொண்டிருக்கிறது.

போக்குவரத்து நெரிசல்
போக்குவரத்து நெரிசலை எளிமைப்படுத்தும் வகையில் கோவையில் ஆங்காங்கே ரவுண்டானா, யூடர்ன் முறைகள் அமல்படுத்தப்பட்டன. சில வாரங்கள் மட்டுமே அது கைகொடுத்தது. போக்குவரத்து நெரிசல் பிரச்சனைக்கு நிரந்தர தீர்வாக அது அமையவில்லை. காந்திபுரம், டவுன்ஹால், தடாகம் சாலை, அவிநாசி சாலை, திருச்சி சாலை, சத்தி சாலை, உக்கடம் என்று கிட்டத்தட்ட கோவையின் அனைத்து முக்கிய சாலைகளிலும் போக்குவரத்து நெரிசல் பிரச்சனை அதிகரித்து வருகிறது.
அதிலும் லங்கா கார்னர் பகுதியில் நிலைமை மிகவும் மோசம். ரயில் நிலையம், அரசு மருத்துவமனை, டவுன்ஹால், உக்கடம், திருச்சி சாலை பகுதிகளை இணைப்பதால் அங்கு இருசக்கர வாகனங்கள், கார்கள், பேருந்துகள், கனரக வாகனங்கள் அதிகளவு செல்லும். பெரும்பாலான நேரம் அங்கு போக்குவரத்து நெரிசல் அதிகமாக இருக்கும். பீக் ஹவர்களில் வாகனங்கள் ஊர்ந்து செல்லும் நிலை உள்ளது. அரசு மருத்துவமனைக்கு வரும் ஆம்புலன்ஸ் கூட சரியான நேரத்திற்கு செல்ல முடிவதில்லை.
லங்கா கார்னர் - உக்கடம் புது ரூட்
இதை சரி செய்வதற்காக அங்கு ரவுண்டானா அமைக்கப்பட்டது. அது கை கொடுக்காத காரணத்தால், அங்கு விரைவில் மீண்டும் சிக்னல் முறை அமல்படுத்தப்படவுள்ளது. இந்நிலையில் லங்கா கார்னர் பகுதியில் இருந்து, போக்குவரத்து நெரிசலில் சிக்காமல் உக்கடம் செல்வதற்கு புதிய ஒரு வழிச்சாலை கொண்டு வரப்பட்டுள்ளது. லங்கா கார்னர் ரயில்வே மேம்பாலத்தை கடந்தவுடனே இடதுபுறம் திரும்பி உக்கடம் சென்றடையலாம். அவர்கள் மணிக்கூண்டு, பெரியகடை வீதி வழியாக உக்கடம் செல்ல தேவையில்லை.
லங்கா கார்னர் பகுதியில் இருந்து ரயில்வே பாலத்தை கடந்தவுடனே, இடதுபுறம் உக்கடம் செல்லும் வழி என்று பலகை வைக்கப்பட்டுள்ளது. இது இருசக்கர வாகனங்கள் மற்றும் கார்களுக்காக பிரத்யேக ஒரு வழிச்சாலையாக கொண்டு வரப்பட்டுள்ளது. ஏரியை ஒட்டியை சுமார் 805 மீட்டர் பயணித்தால் நேரடியாக வின்சென்ட் சாலை சென்று, உக்கடம் பகுதியை அடையலாம். இதற்கு மக்களிடம் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. இதன் மூலம் டவுன்ஹால், ரயில் நிலையம், உக்கடம் சுற்றுவட்டார பகுதிகளில் போக்குவரத்து நெரிசல் குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.












Click it and Unblock the Notifications