கோவை பளபளக்க போகுது.. நீண்ட கால பிரச்சினைக்கு வந்தாச்சு தீர்வு.. ஆக்ஷன் மோடில் இறங்கிய அதிகாரிகள்
கோவை: தமிழ்நாட்டில் முக்கிய நகரங்களில் ஒன்றான கோவையில் இப்போது அதிகாரிகள் பல முக்கிய நடவடிக்கைகளை எடுக்கத் தொடங்கியுள்ளனர். குறிப்பாகக் கோவையில் நீண்ட காலமாகப் பிரச்சினையாக இருந்த ஒரு விஷயத்திற்கு நிரந்தரமாக முற்றுப்புள்ளி வைக்கும் நடவடிக்கையில் கோவை அதிகாரிகள் இறங்கியுள்ளனர். இது குறித்து நாம் விரிவாகப் போராக்கலாம்.
தமிழ்நாட்டில் சென்னைக்கு அடுத்து மிக முக்கிய நகரங்களில் ஒன்றாகக் கோவை இருக்கிறது. ஐடி மட்டுமின்றி உற்பத்தி, விவசாயம் என்று பல்வேறு துறைகளிலும் கோவை சிறந்து விளங்குகிறது.

கோவை போஸ்டர்கள்: அதேநேரம் கோவையில் நீண்ட காலமாகவே சில சிக்கல்களும் உள்ளன. அவற்றில் ஒன்று தான் போஸ்டர்.. அதாவது பொது இடங்களில் ஒட்டப்படும் போஸ்டர்கள் கோவையின் அழகை வெகுவாகவே பாதிக்கிறது. இதைத் தடுக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனப் பலரும் வலியுறுத்தி வந்தனர். இதற்கிடையே இப்போது ஒரு வழியாகக் கோவை மாநகராட்சி இந்த விவகாரத்தில் நடவடிக்கை எடுக்கத் தொடங்கியுள்ளது.
கோவையில் பாலங்கள், மீடியன்கள் உள்ளிட்ட பொது இடங்களில் ஒட்டப்பட்டுள்ள சுவரொட்டிகளை அகற்றும் பணி இப்போது தொடங்கப்பட்டுள்ளது. கோவை போலீசாருடன் இனைந்து கோவை மாநகராட்சி இந்த பணியை முன்னெடுத்துள்ளது. முதற்கட்டமாக அவினாசி சாலை, மேட்டுப்பாளையம் சாலை, திருச்சி சாலை மற்றும் சத்தியமங்கலம் சாலைகளில் உள்ள சுவரொட்டிகள் அகற்றப்படும். அதன் பிறகு மெல்ல மற்ற சாலைகள், தெருக்கள் எனக் கோவை நகர் முழுக்க இருக்கும் சுவரொட்டிகள் அகற்ற நடவடிக்கை எடுக்கப்படும் எனக் கூறப்பட்டுள்ளது.
போஸ்டர்கள்: கோவையைப் பொறுத்தவரை பெரும்பாலும் அரசியல் கட்சிகளின் சுவரொட்டிகளே நகரம் முழுக்க ஆக்கிரமித்து இருக்கிறது. அதைத் தொடர்ந்து தனியார் நிறுவனங்களின் விளம்பர சுவரொட்டிகள் அதிகம் இருக்கிறது. அங்குப் பிரதான மாநகராட்சி அலுவலகம் முதல் லங்கா கார்னர் வரை, பிக் பஜார் தெரு முதல் ரயில் நிலையம் வரை பொது இடங்கள் முழுக்க இதுபோன்ற போஸ்டர்களே நிரம்பி இருக்கின்றன.
அதிகாரிகள் சொல்வது என்ன: இது தொடர்பாகக் கோவை மாநகராட்சி அதிகாரி ஒருவர் கூறுகையில், "முதலில் எங்கெல்லாம் போஸ்டர்களை அகற்ற வேண்டும் என்று பல பகுதிகளை அடையாளம் கண்டறிந்து இருக்கிறோம். தற்போது முதற்கட்டமாக நெடுஞ்சாலைகள் மற்றும் முக்கிய சாலைகளில் இருக்கும் சுவரொட்டிகளை அகற்ற உள்ளோம். அதன் பிறகு மற்ற பகுதிகளிலும் கவனம் செலுத்தி சுவரொட்டிகளை அகற்றுவோம்" என்றார்.
மீண்டும் சுவரொட்டிகள் ஒட்டப்படுவதைத் தடுக்கவும் கோவை மாநகராட்சி நடவடிக்கை எடுத்துள்ளது. பொது இடங்களில் போஸ்டர் ஒட்டுபவர்களுக்கு அபராதம் விதிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. பொது இடங்களில் போஸ்டர் ஒட்டினால் ரூ. 5,000 முதல் 25,000 வரை அபராதம் விதிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் இந்த போஸ்டர் கலாச்சாரம் முடிவுக்கு வரும் என்றும் அதிகாரிகள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.
மக்கள் கோரிக்கை: கோவை மக்கள் இது தொடர்பாகக் கூறுகையில், "பொது இடங்களில் அதுபோல அத்துமீறி போஸ்டர்களை ஒட்டுவது யார் என்பதை போலீசார் நினைத்தால் ஈஸியாக கண்டுபிடிக்க முடியும் என்றாலும், அவர்கள் பெரும்பாலும் நடவடிக்கை எடுக்கத் தயங்குகிறார்கள்.. பொது இடங்களில் போஸ்டர் ஒட்டுபவர்களுக்கு மாநகராட்சி அதிகாரிகள் அதிக அபராதம் விதித்தால் மட்டுமே இதை நிறுத்த முடியும்" என்கிறார்கள்.












Click it and Unblock the Notifications