நந்தன் பட பாணியில் கோவை தலித் ஊராட்சி தலைவருக்கு ஒடுக்குமுறை – போலீஸ் வழக்கு
கோவை : கோவை வெள்ளாணைப்பட்டி ஊராட்சி தலைவராக இருப்பவர் கவிதா. தலித் சமுதாயதைச் சேர்ந்த இவர் மீது அதே ஊராட்சியில் துணை தலைவராக உள்ள ராஜன் சாதிய ரீதியான ஒடுக்குமுறையில் ஈடுபட்டதாக புகார் எழுந்தது. இதையடுத்து ராஜன் உள்ளிட்டோர் மீது காவல்துறை வழக்குப்பதிவு செய்துள்ளது.
கோவை மாவட்டம், எஸ்எஸ் குளம் ஒன்றியத்தில் வெள்ளாணைப்பட்டி ஊராட்சி உள்ளது. அந்த ஊராட்சி மன்ற தலைவராக திமுகவைச் சேர்ந்த கவிதா என்பவர் உள்ளார். ஊராட்சி மன்ற துணை தலைவராக ராஜன் என்பவர் இருக்கிறார். இந்நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு ராஜன் திமுகவில் இருந்து விலகி அதிமுகவில் இணைந்தார். கவிதா பட்டியலினத்தைச் சேர்ந்தவர். ராஜன் பிற்படுத்தப்பட்ட சமுதாயதைச் சேர்ந்தவர்.

அவர் கவிதாவுக்கு சாதிய ரீதியாக வன்முறை கொடுப்பதாக புகார் எழுந்தது. தொடர்ந்து கவிதாவிடம், ராஜன் பலமுறை தகராறில் ஈடுபட்டதாக தகவல் வெளியானது. இருவருக்கும் இடையே மோதல் வெடித்துள்ளது. இந்நிலையில் கடந்த மாதம் ஊராட்சி மன்ற அலுவலகத்தில், கவிதாவின் அறையை பூட்டி வைத்து அவரை பணி செய்ய விடாமல் தடுத்ததாக ராஜன் மீது மீண்டும் புகார் எழுந்தது.
உனக்கு கீழே நான் வேலை செய்ய வேண்டுமா என்று கூறி ராஜன் கவிதாவின் சாதி பெயரை சொல்லி திட்டியதாக புகார் கூறப்பட்டது. மேலும், நான் சொல்வது போல கேட்க வேண்டும். இல்லையென்றால் உன்னை கொலை செய்து விடுவேன். என்றும் ராஜன் கவிதாவுக்கு கொலை மிரட்டல் விடுத்துள்ளார்.
இதுகுறித்து வெள்ளாணைப்பட்டி ஊராட்சி மன்ற தலைவர் கவிதா கோவில்பாளையம் காவல் நிலையத்தில் ராஜன் மீது புகாரளித்தார். அந்தப் புகாரின் அடிப்படையில் கோவில்பாளையம் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டனர்.
அதில், ஊராட்சி மன்ற தலைவரை பணி செய்ய விடாமல் தடுத்த துணைத் தலைவர் ராஜன் எஸ் எஸ் குளம் ஒன்றிய சேர்மன் கவிதா சண்முகம் மற்றும் துணைத் தலைவர் ராஜனின் உறவினர்களான முத்துக்குமார் செந்தில்குமார் மற்றும் ஊராட்சி மன்ற கவுன்சிலர்களான சகுந்தலா தேவி, சுமதி ராஜேஸ்வரி வீரக்குமார் ஆகியோர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
சமீபத்தில் இயக்குநர் சரவணன் இயக்கத்தில், நடிகர் சசிகுமார் நடிப்பில் வெளியாகியிருந்த நந்தன் படம், தலித் ஊராட்சி தலைவர்களுக்கு நடக்கும் ஒடுக்குமுறை குறித்து பேசியிருந்தது. அந்த படத்தில் வரும் காட்சிகளை நினைவுபடுத்தும் வகையில் இந்த சம்பவம் நடைபெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.
முன்னதாக கடந்த சில வாரங்களுக்கு முன்பு அதிமுக கவுண்டம்பாளையம் தொகுதி எம்எல்ஏ பிஆர்ஜி அருண்குமார் மற்றும் வெள்ளாணைப்பட்டி ஊராட்சி துணை தலைவர் ராஜன் உள்ளிட்டோர் கவிதா மீது மாவட்ட ஆட்சியரிடம் புகார் கொடுத்தனர்.
அதில் வெள்ளானைப்பட்டி ஊராட்சி தலைவர் கவிதா பல்வேறு முறைகேடுகளில் ஈடுபட்டதற்கு அவர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. சமீபகாலமாக அவர் மீண்டும் முறைகேடுகளில் ஈடுபட்டு வருகிறார். இதனால் ஊராட்சி நிர்வாகம் ஸ்தம்பித்துள்ளது. இதுகுறித்து கேட்டால் கவிதா தரப்பில் தகராறு செய்கின்றனர். எனவே அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியிருந்தனர்.
இந்நிலையில் ராஜன் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டதை அதிமுக கண்டித்துள்ளது. இந்த சம்பவம் கோவையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.












Click it and Unblock the Notifications