"யாரும் போகக்கூடாது.." உக்கடம் மேம்பாலத்தில் இரவு நேரங்களில் போக்குவரத்திற்கு தடை.. என்ன காரணம்?
கோவை: கோவை மக்கள் நீண்ட காலமாகக் காத்திருந்த உக்கடம் மேம்பாலம் இப்போது திறக்கப்பட்டுள்ளது. கடந்த சில ஆண்டுகளாகவே உக்கடத்தில் இருந்து ஆத்துப்பாலம் வரையிலான சாலையில் டிராபிக் நெரிசல் அதிகமாகவே இருக்கும். இங்கே திறக்கப்பட்டுள்ள மேம்பாலம் டிராபிக் நெரிசலைப் பெரியளவில் குறைத்துள்ளது. அதேநேரம் இங்கே போலீசார் சில கட்டுப்பாடுகளையும் விதித்துள்ளனர். இது குறித்து நாம் விரிவாகப் பார்க்கலாம்.
தமிழ்நாட்டில் சென்னைக்கு அடுத்து மிக வேகமாக வளர்ந்து வரும் நகரமாகக் கோவை இருக்கிறது. கோவையில் சென்னையைப் போல மின்சார ரயில்கள், மெட்ரோ இல்லாததால் அங்கே டிராபிக் மிக மோசமாக இருக்கிறது.

டிராபிக்: காலை மற்றும் மாலை பீக் ஹவரில் வெளியே சென்று திரும்புவதே போராட்டமாக இருக்கிறது. குறிப்பாக உக்கடம் பகுதியில் டிராபிக் பாதிப்பு மோசமாக இருக்கிறது. இதனால் உக்கடத்தில் இருந்து கிளம்பினால் ஆத்துப்பாலம் செல்லவே குறைந்தது அரைமணி நேரமாவது ஆகிவிடும். ஆனால், இந்தப் பாலம் வந்த பிறகு அங்கே நிலைமை மொத்தமாக மாறுகிறது. இனிமேல் வெறும் பத்தே நிமிடங்களில் உக்கடத்தில் இருந்து ஆத்துபாலத்திற்கு சென்றடைய முடியும்.
மேம்பாலம்: ரூ. 481 கோடி செலவில் கட்டப்பட்ட இந்த மேம்பாலத்தை ஆக. 9ம் தேதி முதல்வர் ஸ்டாலின் திறந்து வைத்தார். திறப்பு விழா முடிந்த உடனேயே இந்த பாலத்தைப் பொதுமக்கள் அதிகளவில் பயன்படுத்தத் தொடங்கிவிட்டனர். மாலை நேரங்களில் பாலத்தை அதிக பேர் பயன்படுத்துகிறார்கள். இருந்தாலும் அதில் பெரியளவில் டிராபிக் ஏற்படவில்லை.
இது தொடர்பாக அப்பகுதி மக்கள் கூறுகையில், "நீண்ட நாட்களுக்குப் பிறகு, வேலை முடிந்து சீக்கிரம் என்னால் வீட்டிற்குச் செல்ல முடிகிறது. முன்பெல்லாம் பீக் ஹவர்ஸ் போது இந்த பகுதியைக் கடக்கவே 30 நிமிடங்களுக்கு மேல் ஆகும்.. ஆனால், இப்போது உக்கடத்தில் இருந்து ஆத்துப்பாலம் வரை என்னால் வெறும் எழு முதல் 10 நிமிடங்களில் செல்ல முடிகிறது" என்கிறார்கள்.
போலீஸ் விதித்த கட்டுப்பாடு: அதேநேரம் போலீசார் மேம்பாலத்தின் மீது அதிவேகமாகச் செல்ல வேண்டாம் என வாகன ஓட்டிகளை எச்சரித்துள்ளனர். மேம்பாலத்தில் மணிக்கு 30 கிமீ வேகத்தில் மட்டுமே செல்லுமாறு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மேலும், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக வார இறுதி நாட்களில் பீக் ஹவர் முடிந்த உடன் இரவு நேரங்களில் போக்குவரத்தை நிறுத்தவும் போலீசார் திட்டமிட்டுள்ளனர். மேம்பாலத்தில் தேவையில்லாத அசம்பாவித சம்பவங்கள் நடக்காமல் இருக்கவே இந்த முடிவை எடுத்துள்ளனர்.
மேம்பாலம் ஏன்: கோவை பகுதியில் உக்கடம் கடந்த சில ஆண்டுகளில் படுவேகமாக வளர்ந்துள்ளது. இதற்கிடையே பொள்ளாச்சி, பாலக்காடு மற்றும் பேரூரில் இருந்து கனரக வாகனங்களின் வருகை அதிகரித்து உள்ளதால் உக்கடம் பகுதியில் டிராபிக் நெரிசல் ஏற்படுகிறது. மேலும், இந்த பக்கத்தில் இருந்து கோவை நகருக்குள் நுழையும் அனைத்து வாகனங்களுமே உக்கடத்தைக் கடக்க வேண்டி உள்ளதால் இங்கு டிராபிக் நெரிசல் அதிகரிக்கிறது.
அதிலும் கோயில் திருவிழாக்கள் மற்றும் பண்டிகை தினங்களில் டிராபிக் உச்சத்தில் இருக்கும். இதைக் கருத்தில் கொண்டே இந்த பகுதியில் மேம்பாலம் அமைக்க முடிவு செய்யப்பட்டது. இந்த மேம்பாலத்திற்கான பணிகள் கடந்த 2018ல் தொடங்கப்பட்டது. இடையில் கொரோனா காரணமாகப் பல மாதங்கள் எந்தவொரு பணிகளும் நடக்கவில்லை.
அதன் பிறகும் கூட பாலத்தின் டிசைன் பல முறை மாற்றப்பட்டது. இதுவே தாமதத்திற்குக் காரணமாகும். இப்போது உக்கடம் ஒப்பணக்கார தெருவில் இருந்து ஆத்துப்பாலம் வரை மேம்பாலம் அமைக்கப்பட்டுள்ளது. சுமார் 3.8 கிமீ தூரத்துக்கு நான்கு வழிச்சாலையாக 125 தூண்களுடன் இந்த மேம்பாலம் அமைக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications