250 சிசிடிவி கேமரா, 12 தனிப்படை, கோவை டூ பாலக்காடு வரை சேஸிங்! 24 மணி நேரத்தில் மீட்கப்பட்ட குழந்தை
கோவை: பொள்ளாச்சியில் கடத்தப்பட்ட குழந்தையை 24 மணி நேரத்தில் கேரளா வரை துரத்திச் சென்ற போலீஸார் பத்திரமாக மீட்டு கொண்டு வந்தனர்.
Recommended Video
கோவை மாவட்டம், பொள்ளாச்சி அருகே குமரன் நகர் பகுதியைச் சேர்ந்தவர் யுனிஸ். இவரது மனைவி திவ்யபாரதி. இவர்களுக்கு கடந்த 4 நாட்களுக்கு முன்பு பொள்ளாச்சி அரசு மருத்துவமனையில் மகப்பேறு மற்றும் குழந்தைகள் நல மருத்துவப் பிரிவில் அழகான பெண் குழந்தை பிறந்தது.
இந்த நிலையில் நேற்று காலை 4 மணியளவில் பிரசவ வார்டுக்குள் புகுந்த இரு மர்மநபர்கள் பிறந்து 4 நாட்களே ஆன பெண் குழந்தையை தூக்கிச் சென்றுள்ளனர். தூக்கத்தில் இருந்து விழித்த திவ்யபாரதி குழந்தையை காணாமல் அதிர்ச்சி அடைந்து அலறினார்.

அலறல் சப்தம்
இதையடுத்து அவரது சப்தத்தை கேட்ட உறவினர்கள் குழந்தையை தேடினர். பின்னர் எங்கு தேடியும் கிடைக்காததால் போலீஸில் புகார் அளிக்கப்பட்டது. இதையடுத்து போலீஸார் வழக்குப் பதிவு செய்து குழந்தையை தேடி வந்தனர். இந்த நிலையில் குழந்தை கடத்தப்பட்ட விவகாரம் தொடர்பாக கோவை எஸ் பி சத்திய நாராயணன் மருத்துவமனைக்கு நேரில் சென்றார்.

திவ்யபாரதி
அங்கு திவ்யபாரதியிடமும் யுனிஸுடமும் விசாரணை நடத்தப்பட்டது. இதையடுத்து குழந்தையை கண்டுபிடிக்க 12 தனிப்படைகள் அமைக்கப்பட்டு போலீஸார் தீவிரமாக தேடி வந்தனர். விசாரணையில் குழந்தையை இரு பெண்கள் கடத்திக் கொண்டு கேரளா மாநிலம் பாலக்காடு கொடுவாயூர் கிராமத்திற்கு கொண்டு சென்றது தெரியவந்தது.

250 சிசிடிவி கேமரா
இதையடுத்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பத்ரி நாராயணன் போலீஸார் அங்கு விரைந்து சென்று குழந்தையை மீட்டு பெற்றோரிடம் ஒப்படைத்தனர். இதுகுறித்து போலீஸார் கூறுகையில் பொள்ளாச்சி முதல் பாலக்காடு வரை கிட்டதட்ட 250 சிசிடிவி கேமராக்களை 24 மணி நேரத்தில் ஆய்வு செய்தோம். கேரளா வரை சேஸிங் செய்து பிடித்தோம்.

குழந்தை கடத்தல் ஏன்
இவர்கள் எதற்காக குழந்தை கடத்தினர். இவர்களுக்கு பின்னால் யார் இருக்கிறார்கள் என்பது குறித்தெல்லாம் விசாரணை நடத்தி விரிவாக செய்தியாளர்களுக்கு சொல்கிறோம் என்றார். குழந்தை கடத்தப்பட்ட 24 மணி நேரத்தில் மீட்கப்பட்ட சம்பவத்தை அடுத்து போலீஸாரை அனைவரும் பாராட்டி வருகிறார்கள். ஒரு நாள் முழுவதும் குழந்தை தாயிடம் இல்லாததால் குழந்தைக்கு மருத்துவ சிகிச்சை கொடுக்கப்படுகிறது. குழந்தையை கண்டுபிடித்துக் கொடுத்த அனைவருக்கும் நன்றி என யுசுப்பும் திவ்யபாரதியும் கண்ணீர் மல்க தெரிவித்தார்கள்.












Click it and Unblock the Notifications