கோவை பிஎஸ்ஜி கல்லூரியில் ஜூனியர் மாணவருக்கு ராகிங் கொடுமை.. கைதான 7 பேர் சஸ்பெண்ட்- நிர்வாகம்
கோவை: கோவை பிஎஸ்ஜி பொறியியல் கல்லூரியில் மது குடிக்க பணம் கேட்டு மறுத்த ஜூனியர் மாணவர்களுக்கு மொட்டை அடித்து ராகிங் கொடுமை செய்ததாக புகாரின் பேரில் 7 சீனியர் மாணவர்கள் கைது செய்யப்பட்டனர்.
கோவை பீளமேட்டில் பிஎஸ்ஜி பொறியியல் கல்லூரி உள்ளது. இந்த கல்லூரிக்கு கலை மற்றும் அறிவியல் கல்லூரியும் உள்ளது. இந்த பொறியியல் கல்லூரி அண்ணா பல்கலைக்கழகத்துடன் இணைக்கப்பட்டுள்ளது.

கோவை சந்திப்பு ரயில் நிலையத்திலிருந்தும் கோவை விமான நிலையத்திலிருந்தும் 5 கி.மீ. தூரத்தில் இந்த கல்லூரி உள்ளது. சுமார் 45 ஏக்கர் பரப்பளவில் அமைக்கப்பட்டுள்ளது. இங்கு ஆண்கள், பெண்களுக்கான மாணவர்கள் விடுதியும் உள்ளது.
இந்த கல்லூரியில் முதலாமாண்டு மாணவரிடம் சீனியர் மாணவர்கள் சிலர் மது குடிக்க பணம் கேட்டுள்ளனர். அதற்கு அவர் மறுப்பு தெரிவித்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த அந்த மாணவர்கள், முதலாமாண்டு மாணவருக்கு மொட்டை அடித்து ராகிங் செய்துள்ளனர்.
இதுகுறித்து தகவலறிந்த அந்த மாணவரின் பெற்றோர் கொடுத்த புகாரின் பேரில் பீளமேடு போலீஸார் கல்லூரிக்கு வந்து விசாரணை நடத்தி மாதவன், மணி, வெங்கடேசன், தரணிதரன், ஐயப்பன், யாலிஸ், சந்தோஷ் ஆகிய 7 பேரை கைது செய்துள்ளனர். இந்த 7 பேரையும் கல்லூரி நிர்வாகம் சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டது. இதையடுத்து இவர்கள் 7 பேரும் மருத்துவ பரிசோதனைக்காக போலீஸாரால் கோவை அரசு மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டனர்.
கல்லூரிகளில் புதிதாக வரும் மாணவர்களை சீனியர் மாணவர்கள் கிண்டல் செய்வதுதான் ராகிங். இதை நாம் நிறைய சினிமாக்களிலும் பார்த்துள்ளோம். ஆனால் ஒரு கட்டத்தில் இவை வன்முறையாக மாறியது. மோசமான ராகிங் கொடுமையால் சிலர் தற்கொலை கூட செய்து கொண்டுள்ளனர். நாவரசு என்ற மாணவன் தற்கொலைக்கு பிறகு இந்த ராகிங் இந்தியாவில் தடை செய்யப்பட்டுள்ளது. எனினும் சில கல்லூரிகளில் சில மாணவர்கள் கல்லூரி நிர்வாகத்திற்கே தெரியாமல் இது போன்ற ஒரு குற்றச்செயல்களில் ஈடுபடுகிறார்கள்.
பேச்சுரீதியான துன்புறுத்தல், உடல்ரீதியான துன்புறுத்தல் , பாலியல் ரீதியான துன்புறுத்தல் ஆகியவையும் ராகிங்கில் அடங்கும்.












Click it and Unblock the Notifications