கோவை அவிநாசி சாலையின் எமோஷன்.. அதே இடத்தில் மீண்டும்... கெத்தாக வந்த பிஎஸ்ஜி நடைபாலம்
கோவை: கோவை அவிநாசி சாலை பீளமேடு பகுதியில் பிஎஸ்ஜி நடைபாலம் இருந்தது. அவிநாசி சாலையில் உயர்மட்ட மேம்பாலம் அமைக்கும் பணிகள் நடைபெறுவதால், அந்த நடைபாலம் அகற்றப்பட்டது. இந்நிலையில், அரசுத்துறைகளில் அனுமதி பெற்று அந்த நடைபாலம் மீண்டும் அமைக்கப்பட்டு இன்று திறக்கப்பட்டது.
கோவை மாவட்டத்துக்கு சிறுவாணி தண்ணீர், பஞ்சாலைகள், கொங்கு தமிழ், தொழில் நிறுவனங்கள் என்று பல அடையாளங்கள் உள்ளன. அந்த வகையில் அவிநாசி சாலையில் பிஎஸ்ஜி பொறியியல் மற்றும் தொழில்நுட்ப கல்லூரிகளை இணைக்கும் மஞ்சள் நிற இரும்பு நடைபாலம் கோவை மக்கள் மத்தியில் மிகவும் பிரபலம். கடந்த 2007ம் ஆண்டு அந்த பாலம் கட்டப்பட்டது.

சுமார் 15 ஆண்டுகளுக்கு மேலாக அந்த பாலம் கோவையின் அடையாளங்களில் ஒன்றாக இருந்தது. இது பிஎஸ்ஜி கல்லூரி மாணவர்களின் பயன்பாட்டுக்காக கட்டப்பட்டது. ஆனால் மழை, வெயில், இரவு, பகல் என கோவை மக்கள் பெரும்பாலான நேரங்களில் அந்த பாலத்தை பற்றி ஏதாவது ஸ்டேட்டஸ் போட்டு வைப் செய்வார்கள். பிஎஸ்ஜி மாணவர்கள் அதை ஸ்கைவாக் என்று சொல்வார்கள்.
கோவையில் அந்த பாலத்தை ரசிக்காதவர்கள் மிகவும் குறைவு. தற்போது அவிநாசி சாலையில் ரூ.1,600 கோடி மதிப்பில் 10.10 கி.மீ தொலைவுக்கு நீண்ட மேம்பாலம் கட்டும் பணி நடந்து வருகிறது. இதன் காரணமாக சாலையின் நடுவே இருந்த பிஎஸ்ஜி கல்லூரி நடைபாலம் கடந்த மார்ச் மாதம் அகற்றப்பட்டது. இது அந்த கல்லூரி முன்னாள், இன்னாள் மாணவர்களிடையே சோகத்தை ஏற்படுத்தியது.
அந்த மாணவர்கள் சாலையை கடக்க தற்காலிக சிக்னல் அமைக்கப்பட்டிருந்தது. இருப்பினும் மாணவர்களுக்கு பெரியளவுக்கு பயனளிக்கவில்லை. அவிநாசி சாலையில் உயர்மட்ட மேம்பாலம் அமைக்கும் பணிகள் நடந்து வருகின்றன. இதனால் போக்குவரத்து நெரிசல் அதிகமாக இருந்தது. எனவே இரண்டு கல்லூரிகளையும் இணைக்கும் நடைமேம்பாலம் அமைக்க வேணடும் என்று கோரிக்கை வைத்தனர். அதனடிப்படையில் நெடுஞ்சாலைத்துறையில் அனுமதி வாங்கி மீண்டும் நடைபாலம் கட்டும் பணிகள் நடைபெற்றன.
தற்போது அவிநாசி சாலை உயர்மட்ட மேம்பாலம் அமைக்கும் பணிகள் 70 சதவீதம் முடிந்துள்ளது. அடுத்தாண்டுக்குள் அவிநாசி மேம்பாலம் பணிகள் முடிந்து பயன்பாட்டுக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் உயர்மட்ட மேம்பாலத்துக்கு சற்று கீழே இந்த பிஎஸ்ஜி நடைபாலம் அமைக்கும் பணி நடந்து வந்தது.
இந்த நடைபாலம் 25 மீட்டர் நீளம், 7 மீட்டர் அகலம் கொண்டது. இந்த பாலத்தை பிஎஸ்ஜி கல்லூரி மாணவர்களுக்கு மட்டுமல்லாமல் மக்களும் பயன்படுத்திக் கொள்ளலாம். புதிதாக கட்டப்பட்ட பிஎஸ்ஜி நடைபாலம் இன்று திறக்கப்பட்டது. பிஎஸ்ஜி சன்ஸ் அறக்கட்டளை நிர்வாக இயக்குநர் கோபாலகிருஷ்ணன் இந்த பாலத்தை திறந்து வைத்தார். இதனால் பிஎஸ்ஜி மாணவர்களும், கோவை மக்களும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். இது பிஎஸ்ஜி தொழில்நுட்ப கல்லூரி, மேலாண்மை கல்லூரி, பிஎஸ்ஜி மாணவர் விடுதி ஆகியவற்றை இணைக்கும்.
அவிநாசி சாலையில் இதேபோல மேலும் 2 நடைபாலங்கள் அமைய உள்ளன. பாதசாரிகள் பயன்பாட்டுக்காக லிப்ட், எஸ்கலேட்டர், படிகட்டுகள் வசதிகளுடன் நடைபாலம் திறக்க நெடுஞ்சாலைத்துறை திட்டமிட்டுள்ளது. மக்களின் தேவையை பொறுத்து, கூடுதல் பாலம் கட்டுவது குறித்து முடிவு செய்யப்படும் என்றும் அதிகாரிகள் கூறியுள்ளனர்.












Click it and Unblock the Notifications