பொள்ளாச்சி கோயில் வளாகத்தில் இருந்த குப்பை.. லாரியில் கொட்டும் போது.. வெளியே எட்டிப்பார்த்த விஐபி
கோவை: கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் கோயில் வளாகத்தை சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்டிருந்த போது ஜேசிபி இயந்திரத்தின் மூலம் குப்பைகளை லாரியில் கொட்டும்பொழுது மலைப்பாம்பு தென்பட்டது. அவற்றை பாம்பு பிடி வீரர் லாவகமாக பிடித்து அடர்ந்த காட்டுப்பகுதியில் விட்டனர். இதேபோல் வேலூர் அருகே சாலையை கடக்க முயன்ற 12 அடி நீள மலைப்பாம்பை வனத்துறையினர் பிடித்து மலைப்பகுதியில் விட்டனர்.
திருப்பத்தூர் மாவட்டம் வேப்பங்குப்பம் துணை மின்நிலையம் பகுதியில் இருந்து 12 அடி நீளமுள்ள மலைப்பாம்பு ஒன்று குடியிருப்பு பகுதியை நோக்கி சென்று கொண்டிருந்தது. அப்பகுதியில் உள்ள சாலையை மலைப்பாம்பு கடக்க முயன்றபோது அந்த வழியாக சென்ற வாகன ஓட்டிகள் கண்டு அதிர்ந்து போனார்கள். அவர்கள் உடனடியாக வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் ஒடுகத்தூரில் இருந்து வனத்துறையினர் நேரில் சென்று மலைப்பாம்பை லாவகமாக பிடித்து அருகே உள்ள கருத்துமலை காப்பு காட்டு ராசி மலையில் கொண்டு விட்டனர்.

இதேபோல் நீலகிரி மாவட்டம் கூடலூரில் ஊருக்குள் புகுந்த மலைப்பாம்பு பிடிபட்டது. அதை வனத்துறையினர் அடர்ந்த வனப்பகுதிக்குள் கொண்டு சென்று பாதுகாப்பாக விட்டார்கள். கூடலூரை ஒட்டி முதுமலைக்காட்டில் அள்ளூர் வயல், தொரப்பள்ளி, குனில் வயல், புத்தூர் வயல் உள்ளிட்ட கிராமங்கள் இருக்கின்றன. இந்த கிராமங்களுக்கு அடிக்கடி வனவிலங்குகள் வந்துசெல்வது வழக்கம்.
இந்தநிலையில் அள்ளூர் வயல் கிராமத்துக்குள் நேற்று மலைப்பாம்பு ஒன்று இரை தேடி வந்தது. இதைக் கண்ட அப்பகுதி மக்கள் மற்றும் குழந்தைகள் அச்சமடைந்தனர். இதுகுறித்து கூடலூர் வனத்துறையினருக்கு தகவல் கொடுத்தனர்.
இதைத்தொடர்ந்து காட்டு யானைகள் கண்காணிப்பு குழுவைச் சேர்ந்த ஊழியர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். பின்னர் அப்பகுதியில் பதுங்கி இருந்த மலைப்பாம்பை பிடித்தனர் சுமார் 14 அடி நீளமுள்ள மலைப்பாம்பை ஒரு சாக்கு பையில் வனத்துறையினர் அடைத்தனர். தொடர்ந்து அடர்ந்த வனப்பகுதிக்குள் கொண்டு சென்று மலைப்பாம்பை வனத்துறையினர் விட்டனர்.












Click it and Unblock the Notifications