சர்வதேச தரத்தில் கோயம்புத்தூர் ரயில் நிலையம்! விரைவில் பணிகள்! மத்திய அரசுக்கு ஈஸ்வரன் நன்றி!
கோவை: கோவை ரயில் நிலையத்தை ரயில் நிலைய மறுசீரமைப்பு திட்டத்தின் கீழ் கொண்டு வந்ததற்காக மத்திய அரசுக்கு நன்றி கூறியிருக்கிறார் கொங்குநாடு மக்கள் தேசியக் கட்சி பொதுச்செயலாளர் ஈஸ்வரன்.
கோவைக்கு அடுத்தபடியாக கொங்கு மண்டலத்தில் மிக முக்கியமான ரயில் நிலையங்களாக திகழும் ஈரோடு மற்றும் சேலம் இரயில் நிலையங்களையும் சர்வதேச தரத்திற்கு கொண்டு செல்ல வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார்.
இது தொடர்பாக அவர் விடுத்துள்ள பதிவில் கூறியிருப்பதாவது;

கோவை ரயில் நிலையம்
சென்னை இரயில் நிலையங்களுக்கு அடுத்து தமிழகத்தில் அதிக வருவாயை ஏற்படுத்திக் கொடுக்கும் முக்கிய இரயில் நிலையங்களில் கோவை இரயில் நிலையம் தென்னக இரயில்வேயில் மூன்றாவது இடத்தில் இருப்பதாலும் இரயில் நிலையங்கள் மறு சீரமைப்பு திட்டத்தின் கீழ் தமிழகத்தில் 10 இரயில் நிலையங்கள் தேர்வு செய்யப்பட்டிருந்த நிலையில் கொங்கு மண்டலத்தில் எந்த இரயில் நிலையமும் சேர்க்கப்படாமல் ஒன்றிய அரசால் புறக்கணிக்கப்பட்டிருந்தது.

கொ.ம.தே.க
இது தொழில் நிறுவனங்களிடத்திலும், வியாபாரிகளிடத்திலும், பொதுமக்களிடத்திலும், மிகப்பெரும் அதிருப்தியை உண்டாக்கியிருந்தது. இது குறித்து கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் சார்பில் 26.10.2022 அன்று அறிக்கை மூலம் கோரிக்கை வைக்கப்பட்டிருந்தது.இது சம்பந்தமாக கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி மற்ற நிறுவனங்கள், வியாபாரிகள் மற்றும் பொதுமக்களை ஒன்றிணைத்து கள கோரிக்கை போராட்டங்களை நடத்த முன்னெடுத்தது.

மத்திய அரசுக்கு நன்றி
இந்தச் சூழ்நிலையில் கோவை இரயில் நிலையம் மறு சீரமைப்பு திட்டத்தின் கீழ் கொண்டுவந்து சர்வதேச தரத்தில் மேம்படுத்தப்பட இருப்பதாக தெரிந்து கொண்டேன். மக்களுடைய கோரிக்கையை நிராகரித்தால் அதை நாமே முதலில் கேட்கிறோம். எனவே கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் சார்பாகவும் பல்வேறு நிறுவனங்களின் சார்பாகவும் வியாபாரிகளின் சார்பாகவும் பொதுமக்கள் சார்பாகவும் ஒன்றிய அரசுக்கு நன்றி சொல்ல கடமைப்பட்டுள்ளோம்.

ஈரோடு -சேலம்
''இந்த நிலையில் கொங்கு மண்டலத்தில் மிகவும் முக்கியமாக திகழும் ஈரோடு மற்றும் சேலம் இரயில் நிலையங்களையும் அடுத்தடுத்து திட்டத்தில் சேர்க்க ஒன்றிய அரசுக்கு கோரிக்கை வைக்கிறோம்.'' இவ்வாறு அவர் தனது பதிவில் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications