எனது சொந்த மகளுக்கு ஏற்பட்டது போல வலிக்கிறது.. கோவை மாணவியின் பெற்றோரை சந்தித்த அன்பில்.. கலக்கம்
கோயம்புத்தூர்: கோவையில் பாலியல் துன்புறுத்தல்களால் தற்கொலை செய்து கொண்ட மாணவியின் பெற்றோரை அமைச்சர்கள் அன்பில் மகேஷ், செந்தில் பாலாஜி ஆகியோர் நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவித்தனர்.
Recommended Video
கோவையில் தனியார் பள்ளியில் 12ம் வகுப்பு பயின்று வந்த மாணவி பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளாகி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் நாட்டையே உலுக்கி உள்ளது. இதையடுத்து அந்த பள்ளி ஆசிரியர் மிதுன் சக்ரவர்த்தி போலீசார் மூலம் கைது செய்யப்பட்டார்.
மாணவிக்கு பாலியல் துன்புறுத்தல் கொடுக்கப்பட்ட வழக்கில் தேடப்பட்டு வந்த பள்ளியின் முதல்வர் மீரா ஜாக்சன் இன்று பெங்களூரில் கைது செய்யப்பட்டுள்ளார்.

ஆறுதல்
பள்ளி முதல்வர் கைது செய்யப்பட்டதை அடுத்து, தற்கொலை செய்து கொண்ட மாணவியின் பெற்றோரை இன்று அமைச்சர்கள் அன்பில் மகேஷ், செந்தில் பாலாஜி ஆகியோர் நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவித்தனர். மாணவியின் வீட்டிற்கு சென்ற அமைச்சர்கள், பெற்றோர்கள் கையை பிடித்து ஆறுதல் தெரிவித்தனர். குற்றம் செய்தவர்கள் எல்லோரும் சட்டப்படி தண்டிக்கப்படுவார்கள் என்று அமைச்சர் அன்பில் மகேஷ் ஆறுதல் தெரிவித்துள்ளார்.

இழப்பு
பள்ளி ஆசிரியர், முதல்வர் இருவரையும் கைது செய்துவிட்டோம். எல்லோரும் மீதும் சட்டப்படி நடவடிக்கடி எடுக்கப்படும். உங்கள் இழப்பை ஈடு செய்ய முடியாது என்று கூறி மாணவியின் பெற்றோரிடம் அமைச்சர்கள் அன்பில் மகேஷ், செந்தில் பாலாஜி இருவரும் இரங்கல் தெரிவித்தனர். இதையடுத்து செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர்கள் அன்பில் மகேஷ், செந்தில் பாலாஜி, இந்த சம்பவம் மிகுந்த அதிர்ச்சி அளிக்கிறது.

சொந்த மகள்
எனது சொந்த மகளுக்கு ஏற்பட்டது போல வலியை தருகிறது. மாணவியின் பெற்றோரை சந்தித்து ஆறுதல் தெரிவித்தோம். இந்த குற்றத்தில் தொடர்புடைய ஆசிரியரை கைது செய்துள்ளோம். பள்ளி முதல்வரையும் உடனடியாக கைது செய்துள்ளோம்.

24 மணி நேரம்
24 மணி நேரத்திற்குள் வழக்கு பதிவு செய்து இருவரையும் கைது செய்துள்ளோம். பள்ளி மாணவ, மாணவிகளுக்கு உதவி எண் உள்ளது. 14417 என்ற எண்ணுக்கு எப்போது வேண்டுமானாலும் புகார் அளிக்கலாம். போக்சோ சட்டம் தொடர்பான விழிப்புணர்வு தனியார் பள்ளிகளில் ஏற்படுத்த வேண்டும்.

புகார் தெரிவிக்க
மாணவ, மாணவிகள் அச்சப்படாமல் புகார் தெரிவிக்க வேண்டும். எந்த பிரச்னையாக இருந்தாலும் உடனடியாக அதில் தொடர்பு கொண்டால் நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமைச்சர்கள் அன்பில் மகேஷ், செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளனர்.












Click it and Unblock the Notifications