"செந்தில் பாலாஜி தோற்கிறார்".. கோவை தெற்கில் தவெக ‘டாப்'.. பின்தங்கிய அதிமுக! எக்ஸிட் போல் முடிவு
கோவை: கோவை தெற்கு தொகுதியில் திமுக சார்பில் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி போட்டியிடுகிறார். இந்நிலையில் தான் அந்த தொகுதியில் செந்தில் பாலாஜி பின்னடைவை சந்திக்க வாய்ப்புள்ளதாகவும், தவெக வேட்பாளர் அவரை வீழ்த்த சான்ஸ் இருப்பதாகவும் தேர்தலுக்கு பிந்தைய எக்ஸிட் போல் கருத்து கணிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த தொகுதியில் அதிமுக 3வது இடத்துக்கு தள்ளப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழக சட்டசபை தேர்தல் முடிவுகள் நாளை வெளியாக உள்ளது. நாளை காலை 8 மணிக்கு தபால் வாக்குகள் எண்ணப்படும். அதன்பிறகு காலை 8.30 மணி முதல் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தில் பதிவான ஓட்டுகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளது.

இதனால் யார் ஆட்சியை பிடிப்பார்கள்? அடுத்த முதல்வர் யார்? என்ற எதிர்பார்ப்பு தமிழக மக்களிடம் ஏற்பட்டுள்ளது. இதற்கிடையே தான் 'எக்ஸிட் போல்' எனும் தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்பு முடிவுகள் தொடர்ந்து வெளியாகி வருகின்றன.
தவெகவிற்கு வெற்றி வாய்ப்பு
அந்த வகையில் தற்போது புதிய கருத்து கணிப்பு ஒன்று வெளியாகி உள்ளது. இதில் கோவை தெற்கு தொகுதியில் திமுக சார்பில் போட்டியிட்டுள்ள செந்தில் பாலாஜி தவெக வேட்பாளரிடம் தோல்வியடைய வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த தொகுதியில் அதிமுக சார்பில் அம்மன் அர்ஜூனன், தவெக சார்பில் செந்தில் குமார், நாம் தமிழர் கட்சி சார்பில் பேரறிவாளன் ஆகியோர் போட்டியிட்டுள்ளனர்.
செந்தில் பாலாஜி போட்டியிட்டுள்ளதால் இந்த தொகுதி மீதான பார்வை அதிகரித்துள்ளது. இந்நிலையில் தான் 'வாகை நியூஸ்' சார்பில் தொகுதி வாரியாக 'எக்ஸிட் போல்' கருத்து கணிப்புகள் நடத்தப்பட்டுள்ளன. அதில் கோவை தெற்கு தொகுதியில் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் அதிக வாக்குகளை பெற வாய்ப்புள்ளதாக கூறப்பட்டுள்ளது.
செந்தில் பாலாஜிக்கு பின்னடைவு
அதன்படி தவெக வேட்பாளர் செந்தில் குமாருக்கு 35 சதவீத வாக்குகள் கிடைக்க சான்ஸ் உள்ளதாக கூறப்படுகிறது. அதன்பிறகு திமுகவின் செந்தில் பாலாஜிக்கு 33 சதவீத வாக்குகளும், அதிமுகவின் அம்மன் அர்ஜூனனுக்கு 30.5 சதவீத வாக்குகளும், நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர் பேரறிவாளனுக்கு 1.5 சதவீத வாக்குகளும் கிடைக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது.
இதன்மூலம் கோவை தெற்கு தொகுதியில் திமுக வேட்பாளர் செந்தில் பாலாஜி, அதிமுக வேட்பாளர் அம்மன் அர்ஜூனன் ஆகியோரை தவெக வேட்பாளர் செந்தில் குமார் வீழ்த்தலாம் என்று கணிக்கப்பட்டுள்ளது. இது திமுக மற்றும் அதிமுகவினரை அதிர்ச்சியில் உறைய வைத்துள்ளது.
கோவை தெற்கில் செந்தில் பாலாஜி ஏன்?
முன்னாள் அமைச்சரான செந்தில் பாலாஜி தற்போது கரூர் எம்எல்ஏவாக உள்ளார். அதிமுகவின் கோட்டையை உடைக்கும் வகையில் திமுகவின் கொங்கு மண்டல பொறுப்பாளராக செந்தில் பாலாஜி நியமிக்கப்பட்டுள்ளார். திமுகவை வலுப்படுத்தும் பணியில் ஈடுபட்டு வருகிறார். இதனால் அவர் இந்த தேர்தலில் கரூர் தொகுதிக்கு பதில் கோவை தெற்கு தொகுதியில் களமிறங்கி உள்ள நிலையில் இந்த கருத்து கணிப்பு இடியை இறக்கி உள்ளது.
அம்மன் அர்ஜூனன் தொகுதி மாறியது ஏன்?
இந்த தொகுதியில் அதிமுக சார்பில் அம்மன் அர்ஜூனன் போட்டியிட்டுள்ளார். இவர் கோவை வடக்கு தொகுதியின் எம்எல்ஏவாக உள்ளார். தற்போது அதிமுக கூட்டணியில் பாஜகவுக்கு கோவை வடக்கு தொகுதி போனது. அங்கு கோவை தெற்கு தொகுதி எம்எல்ஏவாக இருக்கும் வானதி சீனிவாசன் போட்டியிடுகிறார்.
இதனால் கோவை வடக்கு தொகுதியில் இருந்து அம்மன் அர்ஜூனன் கோவை தெற்கு தொகுதிக்கு மாறி உள்ளார். இவர் ஏற்கனவே கடந்த 2016 தேர்தலில் கோவை வடக்கு தொகுதியில் அதிமுகவில் போட்டியிட்டு வெற்றி பெற்ற நிலையில் மீண்டும் களமிறங்கிய நிலையில் பின்னடைவை சந்தித்து 3ம் இடத்துக்கு தள்ளப்படுவார் என்று 'வாகை நியூஸ்' கருத்து கணிப்பில் கூறப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications