கோவை தம்பதி ஆணவப் படுகொலை.. அண்ணன் வினோத் குமாருக்கு சாகும் வரை தூக்கு.. நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு!
கோவை: கோவை தம்பதி ஆணவப் படுகொலையில் குற்றவாளியான அண்ணன் வினோத் குமாருக்கு மரண தண்டனை விதித்து கோவை சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பு அளித்துள்ளது. சாதியின் பெயரால் நடந்த ஆணவக் கொலை செய்ததோடு, அரிதினும் அரிதான வழக்கு என்பதால், குற்றவாளி வினோத் குமாரை சாகும்வரை தூக்கிலிட வேண்டும் என்று நீதிபதி தீர்ப்பளித்துள்ளார்.
கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் சீரங்கராயன் ஓடையைச் சேர்ந்தவர் கருப்புசாமி. இவரது மகன் கனகராஜ் சுமைதூக்கும் தொழிலாளியாக வேலை செய்து வந்தவர். இவர் அதே பகுதியைச் சேர்ந்த மாற்று சமூகத்தைச் சேர்ந்த வர்ஷினி பிரியா என்ற பெண்ணை காதலித்து வந்திருக்கிறார். இவர்களின் காதலுக்கு சாதி காரணமாக கனகராஜின் பெற்றோர் மற்றும் சகோதரர்கள் எதிர்ப்பு தெரிவித்திருக்கின்றனர்.

இருப்பினும் காதலர்களான கனகராஜ் - வர்ஷினி பிரியா இருவரும் வீட்டை விட்டு வெளியேறி திருமணம் செய்து வாடகை வீட்டில் வசித்து வந்தனர். இதனால் கோபமடைந்த கனகராஜின் சகோதரர் வினோத் குமார், தனது நண்பர்களுடன் சேர்ந்து அவர்களின் வீடு புகுந்து கனகராஜ் மற்றும் வர்ஷினி பிரியாவை வெட்டி படுகொலை செய்துள்ளார். இந்த சம்பவம் தமிழ்நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியது.
2019ஆம் ஆண்டு நடைபெற்ற இந்த சம்பவம் தொடர்பாக வினோத் குமார் மற்றும் அவர்களின் நண்பர்களான சின்னராஜ், கந்தவேல் மற்றும் அய்யப்பன் ஆகியோர் கைது செய்யப்பட்டனர். இதனைத் தொடர்ந்து குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டு விசாரணை நடந்த போது, மொத்தமாக 14 பேர் சாட்சிகளாக விசாரிக்கப்பட்டனர்.
இந்த வழக்கின் விசாரணை முடிவடைந்து ஜனவரி 23ஆம் தேதி தீர்ப்பு அளிக்கப்பட்டது. இதில் வினோத் குமாரின் நண்பர்களான சின்னராஜ், கந்தவேல் மற்றும் அய்யப்பன் ஆகிய 3 பேர் விடுவிக்கப்பட்டனர். சொந்த தம்பியையும், தம்பி மனைவியையும் கொலை செய்த அண்ணன் வினோத் குமார் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டார். இந்த நிலையில் குற்றவாளி வினோத் குமாருக்கான தண்டனை விவரங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது.
அதில், குற்றவாளியான வினோத் குமாருக்கு மரண தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பு அளித்துள்ளது. நீதிபதி தனது தீர்ப்பில், இருவரும் வசித்து வந்த வீட்டில் திட்டமிட்டு அத்துமீறி உள்ளே நுழைந்து சாதியின் பெயரால் படுகொலையை செய்துள்ளார். அரிதினும் அரிதான வழக்கு என்பதால் சாகும் வரை தூக்கிலிட வேண்டும் என்று தீர்ப்பளிப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications