கோவை சூலூர் அதிர்ச்சி.. வெறும் எக்ஸ் பதிவோடு நின்ற முதல்வர் விஜய்.. கொடூரமாக சொதப்பிய தவெக அரசு

Subscribe to Oneindia Tamil

கோவை: சூலூர் அருகே பள்ளபாளையத்தில் 10 வயது சிறுமி கடத்தப்பட்டு, பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு, படுகொலை செய்யப்பட்ட கொடூர சம்பவம் ஒட்டுமொத்த தமிழகத்தையும் உலுக்கியுள்ளது. தமிழகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டு, புதிய அரசு பொறுப்பேற்று சில நாட்களே ஆகியுள்ள நிலையில், மாநிலத்தின் சட்டம் ஒழுங்கு சந்தி சிரிப்பதாக எதிர்க்கட்சிகளும், பொதுமக்களும் கடும் கண்டனங்களை எழுப்பி வருகின்றனர்.

குறிப்பாக, தேர்தல் பிரச்சார மேடைகளில் சட்டம் ஒழுங்கு குறித்தும், பெண்களுக்கு எதிரான குற்றங்கள் குறித்தும் முந்தைய திமுக அரசை மிகக் கடுமையாக விமர்சித்து, "சட்டத்தின் ஆட்சி" தருவதாகக் கூறி ஆட்சிக் கட்டிலில் அமர்ந்த முதல்வர் சி. ஜோசப் விஜய், இந்த மிக முக்கியமான விவகாரத்தைக் கையாண்ட விதம் பெரும் விமர்சனத்திற்கு உள்ளாகியுள்ளது.

Coimbatore Sulur Crime

எக்ஸ் (X) தளத்துடன் நின்ற முதல்வர்: நேரில் வராதது ஏன்?

சம்பவம் நடந்து 48 மணி நேரத்தைக் கடந்தும் முதல்வர் விஜய் பாதிக்கப்பட்ட சிறுமியின் குடும்பத்தினரை நேரில் சந்தித்து ஆறுதல் கூறவோ அல்லது கோவைக்கு நேரில் செல்லவோ இல்லை என்பதுதான் தற்போதைய முக்கிய அரசியல் விவாதமாக மாறியுள்ளது. முதல்வர் தனது அதிகாரப்பூர்வ 'எக்ஸ்' (X) சமூக வலைதளப் பக்கத்தில் ஒரு கண்டனப் பதிவை வெளியிட்டு, "மனிதநேயமற்ற, மன்னிக்க முடியாத குற்றம்" என்று கூறிவிட்டு தனது கடமையை முடித்துக் கொண்டார் என்று பொதுமக்கள் குமுறுகின்றனர்.

"நாங்கள் மாற்றத்திற்காக வாக்களித்தோம். ஆனால், இப்படி ஒரு கொடூரம் நடந்த பிறகும் முதல்வர் நேரில் வந்து எங்களைச் சந்திக்கவில்லை, எங்களுக்கு இன்னும் உரிய நீதி கிடைக்கும் என்ற நேரடி உத்தரவாதம் கிடைக்கவில்லை" என்று உயிரிழந்த சிறுமியின் தாய் கண்ணீருடன் ஊடகங்களிடம் தெரிவித்தார். பிரேதப் பரிசோதனை முடிந்தும், முதல்வரிடமிருந்து நேரடி அறிக்கை அல்லது நேரில் சந்திப்பு நிகழும் வரை உடலை வாங்க மாட்டோம் என குடும்பத்தினர் முதலில் பிடிவாதமாக இருந்த நிகழ்வு அரசின் மீதான மக்களின் அதிருப்தியை அப்பட்டமாகக் காட்டியது.

சட்டம் ஒழுங்கு சீர்குலைவு - உதயநிதி ஸ்டாலின் காட்டம்!

புதிய அரசு பொறுப்பேற்ற 12 நாட்களுக்குள் தமிழகத்தில் 30-க்கும் மேற்பட்ட பெரிய குற்றச் சம்பவங்கள், பாலியல் வன்கொடுமைகள் மற்றும் கஞ்சா கடத்தல் போன்ற சம்பவங்கள் நடந்துள்ளதாக எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் சுட்டிக்காட்டியுள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "புதிய அரசு பொறுப்பேற்ற இந்த குறுகிய காலத்திற்குள் சட்டம் ஒழுங்கு முற்றிலும் கேள்விக்குறியாகியுள்ளது. வெறும் கோட் மாற்றுவதும், கூலிங்கிளாஸ் அணிந்து கொண்டு போலிரோ காரிலும் பேட்டரி காரிலும் வலம் வரும் 'ரீல்' (Reel) விளம்பர அரசியலை விட்டுவிட்டு, முதல்வர் விஜய் உண்மையான நிர்வாகத் திறனை நிரூபிக்க வேண்டும். மக்கள் மத்தியில் எழுந்துள்ள அச்சத்தைப் போக்க அவர் உடனடியாக பத்திரிகையாளர்களைச் சந்தித்து விளக்கமளிக்க வேண்டும்" என்று சாடியுள்ளார்.

அதேபோல், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி கே. பழனிசாமி, சிறுமி காணாமல் போன சில மணி நேரங்களிலேயே காவல் துறையின் கவனத்திற்கு கொண்டு சென்றும், ஆரம்பக் கட்டத்தில் உரிய தேடுதல் வேட்டையோ, துரித நடவடிக்கையோ எடுக்காததே இந்த கொடூர முடிவுக்குக் காரணம் என்று குற்றம் சாட்டியுள்ளார்.

அலட்சியமும் தகவல்தொடர்பு இடைவெளியும்:

பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு காவல் துறை மற்றும் மாவட்ட நிர்வாகம் தரப்பில் இருந்து முறையான தகவல்கள் உடனுக்குடன் வழங்கப்படவில்லை என்றும், வழக்கு விசாரணையின் போக்கு குறித்து குடும்பத்தினர் இருட்டில் வைக்கப்பட்டிருந்ததாகவும் புகார்கள் எழுந்துள்ளன. சூலூர் காவல் நிலையம் முன்பாக பொதுமக்கள் விடிய விடிய நடத்திய 8 மணி நேர சாலை மறியல் போராட்டத்திற்குப் பிறகே, உயர் அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு வந்து பேச்சுவார்த்தை நடத்தும் சூழல் உருவானது. இது அரசின் உளவுத்துறை மற்றும் உள்ளூர் நிர்வாகத்தின் தோல்வியையே காட்டுவதாக அரசியல் விமர்சகர்கள் கருதுகின்றனர்.

ஆட்சிக்கு வந்தும் மாறாத நிலை:

தேர்தல் சமயத்தில் 'ராணி வேலுநாச்சியார் படை', 'சிங்கப்பெண் சிறப்புப் படை' எனப் பெண்களின் பாதுகாப்புக்காகப் பல அதிரடி வாக்குறுதிகளை வாரி வழங்கிய டிவிகே (TVK) கட்சி, தற்போது ஆட்சியில் இருந்தும் அத்தகைய திட்டங்கள் வெறும் காகித அளவிலேயே இருப்பதாகப் பொதுமக்கள் விமர்சிக்கின்றனர்.

முன்னாள் திமுக ஆட்சியில் சட்டம் ஒழுங்கு சரியில்லை என்று கூறி வாக்குகளைப் பெற்ற விஜய், தற்போது அதே போன்றதொரு இக்கட்டான சூழலில், நிர்வாக ரீதியாகத் திணறி வருவதாகவும், வெறும் அதிகாரிகளின் அறிக்கைகளை மட்டுமே நம்பி கொண்டிருப்பதாகவும் சமூக வலைதளங்களில் விமர்சனங்கள் எழுந்துள்ளன. குற்றவாளிகள் இருவர் கைது செய்யப்பட்டிருந்தாலும், இந்த வழக்கை அரசு கையாண்ட விதம், பாதிக்கப்பட்ட குடும்பத்தை அணுகிய முறை ஆகியவை விஜய் அரசின் முதல் பெரும் சவாலாகவும், நிர்வாகத் தொய்வாகவும் பார்க்கப்படுகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+