கோவை அரசூரில் மத்திய அரசின் 200 கோடி உதவியுடன்.. 14 ஏக்கரில் பிரம்மாண்ட தொழில்நுட்ப பயிற்சி மையம்
கோவை: கோவை சூலூர் பகுதியில் மின்சார வாகனம், அதற்கு தேவையான உதிரிபாகங்களை உற்பத்தி செய்யும் நிறுவனங்கள் அமைக்கப்பட்டு வருகிறது. அதேபோல் சூலூர் அருகே வாரப்பட்டியில் 370 ஏக்கரில் ராணுவ தொழில்நுட்ப பூங்கா, கிட்டாம்பாளையத்தில் அண்ணா தொழில்நுட்ப பூங்கா வருகிறது. இந்த பூங்காக்களில் பணியாற்ற உள்ள பொறியாளர்கள், தொழில் நுட்ப ஊழியர்களுக்கு தொழில் பயிற்சி அவசியம் ஆகும். எனவே மத்திய அரசின் ரூ.200 கோடி நிதி உதவியுடன், அரசூரில் தொழில்நுட்ப பயிற்சி மையம் மற்றும் திறன்மேம்பாட்டு மையம் அமைக்கப்பட உள்ளது.
தமிழ்நாட்டின் இரண்டாவது பெரிய நகரமான கோவை, டயர் 2 நகரங்களில் வேகமாக வளரும் நகரமாக இருக்கிறது. தற்போதைய நிலையில், கோவை மாநகரம் மற்றும் புறநகரில் மக்கள் தொகை என்பது 35 லட்சம் என்கிற அளவில் உள்ளது. இன்னும் ஐந்து ஆண்டுகளில் 50 லட்சத்தை தாண்ட வாய்ப்பு உள்ளது. ஏனெனில் கோவை மாநகரில் அந்த அளவிற்கு புதிய நிறுவனங்கள் வந்த வண்ணம் உள்ளன. கோவை மாநகரம் கேரளாவின் நுழைவு வாயிலாகவும், கொங்கு மண்டலத்தின் மிகப்பெரிய நகரமாகவும், அற்புதமான கிளைமேட் உடைய நகரமாகவும் இருப்பது தனிச்சிறப்பு. ஏராளமான கல்லூரிகள் உள்ளதால், பல மாநிலத்தவர் வந்து கல்வி பயிலும் நகரமாக கோவை இருக்கிறது.

கோவையில் ஒரு காலத்தில் தொழிற்சாலைகள் தான் அதிகமாக இருந்தன.இப்போது தொழிற்சாலைகளை தாண்டி ஐடி நிறுவனங்களும் அதிகமாகிவிட்டன. புதிதாக நகருக்குள் தொழிற்சாலைகள் அமைக்கவே முடியாத அளவிற்கு மக்கள் நெருக்கம் அதிகரித்துவிட்டது. இருக்கும் நிறுவனங்களுமே, கருமத்தம்பட்டி, கனியூர், அரசூர், காரணம்பேட்டை, மதுக்கரை என நகருக்கு வெளியே வைக்கும் அளவிற்கு உள்ளது.
கோவையில் இருந்து அவினாசி வரை முழுமையாக தொழிற்சாலைகளே உள்ளன. காணும் இடமெல்லாம் தொழிற்சாலைகள் இருக்கும். வணிக நிறுவனங்கள் இருக்கும். இதேபோல் சோமனூர், சூலூர், கண்ணம்பாளையம், பல்லடம் பகுதிகளிலும் அதிகமான தொழிற்சாலைகள் உள்ளன. இப்படி தொழில் நகராக உள்ள கோவையில் தொழில் நுட்ப ஊழியர்களுக்கு தொழில் பயிற்சி மையம் அமைக்கப்பட உள்ளது.
கோவை மாநகரின் கிழக்கே சூலூர் பகுதியில் மின்சார வாகனம், அதற்கு தேவையான உதிரிபாகங்களை உற்பத்தி செய்யும் நிறுவனங்கள் அமைக்கப்பட்டு வருகிறது. சூலூர் அருகே வாரப்பட்டியில் 370 ஏக்கரில் ராணுவ தொழில்நுட்ப பூங்கா, கிட்டாம்பாளையத்தில் அண்ணா தொழில்நுட்ப பூங்கா அமைக்கப்படுகிறது. இதனால் என்ஜினீயர்கள், தொழில் நுட்ப ஊழியர்களுக்கு தொழில் பயிற்சி அமைக்கப்பட வேண்டியுள்ளது.
இதற்காக மத்திய அரசின் ரூ.200 கோடி நிதி உதவியுடன், அரசூரில் தொழில்நுட்ப பயிற்சி மையம் மற்றும் திறன்மேம்பாட்டு மையம் அமைக்கப்படுகிறது. இதற்காக நிலம் தேர்வு செய்யும் பணி நடைபெற்றது. கோவை மாவட்ட கலெக்டர் பவன்குமார், மாவட்ட தொழில் மைய மேலாளர் சண்முகசிவா, மத்திய அரசின் சிறு, குறு, நடுத்தர தொழில் துறை உதவி இயக்குனர்கள் கயல்விழி, ராஜேந்திரன், சூலூர் தாசில்தார் சரண்யா, வட்டார வளர்ச்சி அதிகாரி முத்துராஜ் மற்றும் அதிகாரிகள் அரசூரில் நேற்று ஆய்வு செய்தார்கள்.
அப்போது அரசூரில் 14 ஏக்கர் பரப்பளவில் தொழில்நுட்ப பயிற்சி மையம் மற்றும் திறன்மேம்பாட்டு மையம் அமைக்க நிலம் தேர்வு செய்யப்பட்டது. கோவை மாவட்ட கலெக்டர் பவன்குமாரின் ஒப்புதலுக்கு பின், பயிற்சி மையம் அமைக்கும் பணிகள் மத்திய அரசின் நிதி உதவியுடன் தொடங்கும். இந்த அரசூர் மையத்தில், தொழில்நுட்ப ஆய்வகம், வணிக ஆலோசனை, டிஜிட்டல் மையம் உள்ளிட்டவை ஏற்படுத்தப்பட உள்ளது. இதன் மூலம் கோவை மாவட்டத்தில் மேலும் தொழில் வளர்ச்சி பெருகுவதுடன், சிறந்த தொழில்நுட்ப வல்லுனர்கள் உருவாக்கப்படுவார்கள் என்ற நம்பிக்கை பிறந்துள்ளது.












Click it and Unblock the Notifications