கோவையில் காய் வெட்டும் கத்தியில் கணவனை கொன்றுவிட்டு நாடகமாடிய மனைவி கைது
கோவை: கோவையில் தாலியை அடமானம் வைத்ததில் ஏற்பட்ட தகராறில், காய் வெட்டும் கத்தியில் கணவனை குத்தி கொலை செய்து விட்டு, எதிர்பாராத விதமாக கத்தி பட்டு உயிரிழந்ததாக நாடகமாடிய மனைவியை காவல் துறையினர் கைது செய்தனர்.
கோவை வெரைட்டி ஹால் அருகேயுள்ள திருமால் வீதியில் வசிப்பவர் பிராங்க்ளின் பிரிட்டோ. 35 வயதான இவர் பீளமேடு பகுதியில் பாரத் எலக்ட்ரானிக்ஸ் கம்பெனியில் விற்பனையாளராக பணியாற்றி வந்தார்.
பிரிட்டோவுக்கு.ம கரோலின் என்ற பெண்ணுக்கும் (31) கடந்த ஒன்றரை ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது.

பிரிட்டோ உயிரிழப்பு
இந்நிலையில் பிரிட்டோ கழுத்து, வயிறு ஆகிய இடங்களில் கத்திக் காயம் ஏற்பட்ட நிலையில், கோவை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார் ஆனால் பிரிட்டோவை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக தெரிவித்துள்ளனர். இந்த சந்தேக மரணம் தொடர்பாக வெரைட்டி ஹால் போலீசார் தீவிர விசாரணை நடத்தினர்.

கணவன் கழுத்தில் பாய்ந்தது
அப்போது கணவர் பிராங்க்ளின் கடந்த இரண்டு ஆண்டுகளாக உடல்நிலை சரியில்லாமல் சிகிச்சை பெற்று வந்ததாகவும், இந்நிலையில் சமையலறையில் காய்கறி நறுக்கி விட்டு திரும்பும்போது எதிர்பாராதவிதமாக பின்னால் நின்ற கணவனின் கழுத்தில் கத்தி பதிந்ததாகவும் காவல் துறையினர் விசாரணையில் கரோலின் கூறியுள்ளார்.

விசாரணையில் ஒப்புதல்
இதில் சந்தேகமடைந்த காவல் துறையினர் தொடர்ந்து விசாரணை நடத்தியதில், இருவருக்கும் இடையே தகராறு இருந்து வந்தது தெரியவந்தது. மேலும் தாலியை அடமானம் வைத்ததை எடுத்து தர கரோலின் கூறிய போது, இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. அப்போது கரோலின் காய் வெட்டும் கத்தியால் பிரிட்டோவை குத்திவிட்டதாகவும் அதில் அவர் உயிரிழந்ததும் தெரியவந்தது.

கரோலின் கைது
இதையடுத்து கரோலினை கைது செய்து வெரைட்டி ஹால் போலீசார் அவரிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். காய் வெட்டும் கத்தியில் கணவனை மனைவியே கொலை செய்து விட்டு, எதிர்பாராத விதமாக கத்தி பட்டு உயிரிழந்ததாக நாடகமாடியது கோவையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.












Click it and Unblock the Notifications