ஏடிஎம்மில் பணம் எடுக்க போன கோவை பெண்.. பான் கார்டில் பல கோடி... நினைத்து பார்க்க முடியாத ட்விஸ்ட்
கோவை: பான் கார்டு நகலை அல்லது ஒரிஜினலை யாருக்கும் தரவே கூடாது என்று கூறுவார்கள். உங்களுடைய ஆதார் நகலும், பான் கார்டு நகலும் கிடைத்தால் போதும், உங்கள் பெயரில் மோசடிகளை அரங்கேற்ற முடியும் என்கிற நிலை இருக்கிறது. குறிப்பாக கம்பெனி ஆரம்பித்து ஜிஎஸ்டி மோசடி செய்வதற்கு பான் கார்டு எண்கள் தவறாக பயன்படுத்தப்படுவது தொடர்கிறது. கோவை பெண்ணின் பான் கார்டு எண்ணை தவறாக பயன்படுத்தி ரூ.3 கோடி ஜி.எஸ்.டி. மோசடி செய்யப்பட்டிருக்கிறது.. என்ன நடந்தது என்பதை பார்ப்போம்.
கடந்த ஆண்டு நிலவரப்படி மட்டும் வேலூர் மாவட்டம் பேரணாம்பட்டு பகுதியில் ஏழைகளின் பான் கார்டுகளை பயன்படுத்தி 60-க்கும் மேற்பட்ட ஜி.எஸ்.டி மோசடிப் புகார்கள் பதிவாகி இருந்தது. ஆடு மேய்க்கும் ஏழைக் குடும்பத்துப் பெண்ணின் பெயரில், கிட்டத்தட்ட ரூ.1.12 கோடிக்கு ஜி.எஸ்.டி வரி ஏய்ப்பு செய்யப்பட்டிருப்பதாக நோட்டீஸ் வந்தது. அந்தப் பெண்ணுக்கே தெரியாமல், அவரது அடையாள ஆவணங்களைக் கொண்டு நான்கு ஆண்டுகளாக ஒரு நிறுவனத்தை நடத்தி மோசடியில் ஈடுபட்டிருந்தார்கள் .

இதனால், அந்தப் பெண்ணுக்குக் கிடைக்க வேண்டிய அரசு உதவித்தொகை உள்ளிட்ட அனைத்து நலத்திட்டங்களும் நிறுத்தப்பட்டது. இது அப்போது பெரிய அளவில் பேசுபொருளானது. இதேபோல் வேலூர் மாவட்டத்தைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் வேலையில்லாமல் தவித்து வந்தார்.அவரது பான் கார்டை பயன்படுத்தி கோவையில் நிறுவனம் நடத்தி கோடிக்கணக்கில் ஜிஎஸ்டி மோசடி செய்திருந்தது ஒரு கும்பல்...
வேலூர் ஆர்.என்.பாளையத்தைச் சேர்ந்த முகமது நயிமுதீன்(29) என்ற இளைஞரை ஏமாற்றி நிறுவனம் செயல்பட்டிருக்கிறது. இரண்டு ஆண்டுகளாக, முகமது நயிமுதீனின் பெயரில் கோயம்புத்தூர் துடியலூரில் என்.எம்.என்டர்பிரைசஸ்' என்ற பெயரில் ஸ்கிராப்' வணிக நிறுவனம் செயல்பட்டுள்ளது. ரூ.24 கோடி சம்பாதித்த நிறுவனம் கடைசியில் ஜிஎஸ்டி கட்டாமல் ஏமாற்றியது. இப்படி அடிக்கடி ஏழைகள், சம்பந்தமே இல்லாதவர்களின் பெயரில் நிறுவனங்கள் நடத்திய ஜிஎஸ்டி மோசடி செய்வது அதிகரித்து வருகிறது. அந்த வகையில் கோவை பெண்ணின் பான் கார்டு எண்ணை தவறாக பயன்படுத்தி ரூ.3 கோடி ஜி.எஸ்.டி. மோசடி செய்யப்பட்டிருக்கிறது.
கோவை தொண்டாமுத்தூரை சேர்ந்தவர் இளையராஜா (வயது 35), தனியார் நிறுவன மேலாளர். இவர் தனது மனைவியின் ஏ.டி.எம். கார்டு மூலம் பணம் எடுக்க ஏ.டி.எம். மையத்துக்கு சென்றுள்ளார். அப்போது பணம் வரவில்லை. உடனே அவர் வங்கிக்கு சென்று விசாரித்தபோது, உங்கள் மனைவி பெயரில் நிறுவனம் நடத்தி வருவதாகவும் அதற்கு ஜி.எஸ்.டி.யாக ரூ.2 கோடியே 95 லட்சம் செலுத்தாமல் இருப்பதால் உங்கள் மனைவியின் வங்கி கணக்கு முடக்கப்பட்டு உள்ளதாக கூறியிருக்கிறார்கள்.
இதையடுத்து அவர்கள் கோவை ஜி.எஸ்.டி. அலுவலகத்துக்கு சென்று விசாரித்த போது, அவருடைய மனைவி பெயரில் திருப்பத்தூர் மாவட்டத்தில் 2020-ம் ஆண்டு முதல் நிறுவனம் நடத்தப்பட்டு வந்ததாகவும், ஜி.எஸ்.டி. கணக்கில் இளையராஜா மனைவியின் பான்கார்டு எண்ணை கொடுத்து, ஜி.எஸ்.டி. செலுத்தாமல் ரூ.2.95 கோடி மோசடி செய்ததால், வங்கி கணக்கு முடக்கப்பட்டதும் தெரிய வந்தது. இந்த மோசடி குறித்து கோவை சைபர் கிரைம் போலீசில் இளையராஜாவும் அவரது மனைவியும் புகார் அளித்தனர். அந்த புகாரின் பேரில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். யாராவது தெரியாதவர்கள் உங்கள் பான் கார்டை கேட்டால் கொடுக்காதீர்கள்.. பான் கார்டு, ஆதார் கார்டை யாருக்கு தரவே வேண்டாம்.. அது உங்களுக்கு சிக்கலை ஏற்படுத்த வாய்ப்பு உள்ளது.












Click it and Unblock the Notifications