"காதலியுடன் வீடியோ கால்" – இளைஞருக்கு போதை ஊசியில் ஸ்கெட்ச் போட்டு தீர்த்துக்கட்டிய கும்பல்
கோவை: கோவை வெள்ளலூர் அருகே கை, கால் கட்டப்பட்ட நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன்பு ஆண் சடலம் கைப்பற்றப்பட்டது. இந்த விவகாரத்தில் 4 பேரை கைது செய்து விசாரணை நடத்தி வருவதாக, கோவை மாநகர காவல் ஆணையர் சரவணசுந்தர் தெரிவித்துள்ளார். கொலைக்கான காரணம் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கோடை வெயில் கொதி கொதித்துக் கொண்டிருக்கிறது. முக்கியமாக கோவை மாவட்டத்தில் கோடை வெயிலின் தாக்கம் அதிகமாக உள்ளது. இந்நிலையில் கோவை மாநகர காவல் துறையில் பணிபுரியும் போக்குவரத்து காவலர்களுக்கு, கோடை வெயிலை சமாளிப்பதற்கு பல்வேறு சலுகைகள் வழங்கப்பட்டு வருகின்றன. அந்த வகையில் கோவை மாநகர காவல்துறை, தனியார் பங்களிப்புடன் போக்குவரத்து காவலர்களுக்கு ஏ.சி ஹெல்மெட் வழங்கப்பட்டது.

கோவை மாநகர காவல் ஆணையர் சரவணசுந்தர், ஏ.சி ஹெல்மெட்களை காவலர்களுக்கு வழங்கினார். பிறகு செய்தியாளர்களைச் சந்தித்த கோவை மாநகர காவல் ஆணையர் சரவணசுந்தர், "ஒரு ஹெல்மெட்டின் விலை ரூ.15,000. 2 மணி நேரம் சார்ஜ் செய்தால் 2 மணி நேரம் பயன்படுத்த முடியும். இந்த ஹெல்மெட் 5 டிகிரி வெப்பத்தை குறைத்துக் கொடுக்கும். வெயிலில் பணிபுரியும் போக்குவரத்து காவலருக்கு இது உதவியாக இருக்கும்.
வெள்ளலூர் பகுதியில் கடந்த 11 ஆம் தேதி கை, கால்கள் கட்டப்பட்டப்பட்ட நிலையில் ஆண் சடலம் மீட்கப்பட்டது. இதுகுறித்து காவல்துறையின் விசாரணை நடத்திக் கொண்டிருக்கிறது. முதற்கட்ட விசாரணையின் அடிப்படையில், போதை ஊசி விவகாரத்தில் கொலை நடைபெற்றிருக்கலாம் என்ற கோணத்தில் விசாரணை செய்து வருகிறோம்.
இதற்கான ஆய்வறிக்கை நடைபெற்று வருகிறது. அது கிடைத்தவுடன் கொலைக்கான காரணத்தை அதிகாரப்பூர்வமாக தெரிவிப்போம். இது தொடர்பாக நான்கு பேரை பிடித்து விசாரணை மேற்கொண்டு வருகிறோம். மாநகரப் பகுதிகளில் பகல் நேரங்களில் செயின் பறிப்பு மற்றும் கொள்ளை சம்பவங்களை தடுப்பதற்கு ரோந்து பணிகள் அதிகரிக்கப்பட்டுள்ளன. அண்மையில் நடைபெற்ற சங்கிலி பறிப்புகளில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது." என்றார்.
முன்னதாக வெள்ளலூரில் கடந்த சில நாட்களுக்கு முன் சூர்யா என்ற சென்னையைச் சேர்ந்த கல்லூரி மாணவர் கொலை செய்யப்பட்டிருந்தார். கை, கால்கள் கட்டப்பட்ட நிலையில், அவரின் உடலில் ஆங்காங்கே பச்சை குத்தப்பட்டதற்கான அடையாளங்கள் இருந்தன. காவல்துறை விசாரணையில் மதுரையைச் சேர்ந்த கார்த்தி, கிணத்துக்கடவு பகுதியைச் சேர்ந்த மாதேஷ், சுந்தராபுரம் பகுதியைச் சேர்ந்த நரேன் கார்த்தி, பைக் டாக்ஸி ஒட்டுநர் முகமது ரஃபி ஆகிய 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இதுகுறித்து காவல்துறையினர் கூறுகையில், "கார்த்தி மற்றும் மாதேஷ் கல்லூரியில் இருந்து டிராப் அவுட் ஆனவர்கள். கார்த்தியின் காதலி, சூர்யாவுடன் அடிக்கடி வீடியோ காலில் பேசி வந்துள்ளார். கார்த்தி மற்றும் நண்பர்கள் பேரூர் போஸ்டல் காலனி பகுதியில் வாடகைக்கு வீடு எடுத்து தங்கி வந்தனர். அங்கு அவர்கள் சூர்யாவை அழைத்து மது அருந்த வைத்துள்ளனர். பிறகு சூர்யாவின் உடலில் போதை ஊசி செலுத்தியுள்ளனர்.
பிறகு தலையணை வைத்து சூர்யாவை கொலை செய்துள்ளனர். பிறகு அவர்கள் வாடகைக்கு கார் எடுத்து, வெள்ளலூர் பேருந்து நிலையம் அருகே உடலை கை, கால் கட்டி வீசியுள்ளனர். கைது செய்யப்பட்ட 4 பேரிடம் தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது." என்றனர்.












Click it and Unblock the Notifications