கோவையின் 7 வருச கனவு சார்.. இதயப் பகுதியில் இந்த மாதமே நிறைவேறப்போகுது.. பொதுமக்கள் மகிழ்ச்சி
கோவை: கோவை உக்கடம்- ஆத்துப்பாலம் பகுதியில் 1.4 கிலோ மீட்டர் நீளத்தில் கட்டப்பட்டுள்ள மேம்பாலம் இந்த மாத இறுதியில் போக்குவரத்துக்கு திறக்கப்பட உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்த மேம்பாலம் திறக்கப்பட்டால் கோவையின் மையப்பகுதியில் போக்குவரத்து நெரிசல் பெருமளவு குறையும் என்பதால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
கோவை மாநகரம் கேரளாவின் நுழைவு வாயிலாக இருக்கிறது. மொத்த கேரளாவும் ரயில் போக்குவரத்து மற்றும் சாலை போக்குவரத்துக்கு முக்கியமான வழித்தடமாக கோவை இருக்கிறது. கோவை மாநகரம் தமிழ்நாட்டின் இரண்டாவது பெரிய நகரமாகவும், தொழில் வளர்ச்சியில் இந்தியாவின் முன்னணி நகரங்களில் ஒன்றாகவும் உள்ளது.

2004 டூ 2024 என்கிற கோவையை ஒப்பிட்டுபார்த்தால் கற்பனை கூட செய்து பார்க்க முடியாது. அந்த அளவிற்கு நிறுவனங்களும், தொழிற்சாலைகளும் வளர்ந்துள்ளன. கோவை மாநகரம் ஒரு காலத்தில் மில்களாலும், தொழிற்சாலைகளாலும் நிரம்பி கிடக்கும். ஆனால் இன்று கோவையில் இருந்த பல தொழிற்சாலைகள் நகருக்கு வெளியே சென்றுவிட்டன. கோவை மாநகரம் சென்னை போல் இப்போது முழுமையாக வீடுகளால் நிரம்பி வழிந்து உள்ளது.
கோவை மாநகரை ஒருவேளை தற்போது விரிவுப்படுத்தினால், சுமார் 25 கிமீ சுற்றளவுக்கு விரிவு படுத்தவேண்டும். அந்த அளவிற்கு வளர்ந்துள்ளது. கோவையின் மிகப்பெரிய பிரச்சனை என்றால் வாகன பெருக்கம் தான். கோவை மாநகரில் வாகனங்களின் எண்ணிக்கை மிகப்பெரிய அளவில் உள்ளது. பெரிய சாலை, சிறிய சாலை என எல்லா சாலைகளும் கடும் போக்குவரத்து நெரிசலில் திணறுகின்றன. போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்த பல்வேறு மேம்பாலங்கள் கட்டப்பட்டன.
அப்படித்தான் கோவையின் வணிகப்பகுதியான உக்கடம்- ஆத்துப்பாலம் பகுதியில் போக்குவரத்து நெரிசலை குறைக்கும் வகையில் கடந்த 2018-ம் ஆண்டு மேம்பால கட்டுமான பணிகள் தொடங்கியது. நிலம் எடுப்புக்கு இழப்பீட்டு தொகை, கட்டுமான பணிகள் தாமதம் என ஒட்டுமொத்தமாக செலவுத்தொகை ரூ.480 கோடியாக அதிகரித்தது. உக்கடம் மேம்பாலத்தின் மொத்த தூரம் 1.4 கிலோ மீட்டர் ஆகும். 125 தூண்கள் கொண்ட இந்த மேம்பாலத்தில் 8 இடங்க ளில் ஏறும் மற்றும் இறங்கும் தளங்கள் அமைக்கப்பட்டு உள்ளன.
கரும்புக்கடை முதல் உக்கடம் சந்திப்பு வரை 4 வழித்தட மேம் பாலமாகவும், ஒப்பணக்கார வீதியை அடையும் இறங்குதளம் 2 வழித்தடமாகவும் மேம்பாலம் இருக்கிறது. இதுதவிர பொள்ளாச்சியில் இருந்து வரும் வாகனங்கள் மேம் பாலத்தில் ஏறுதளம் மற்றும் உக்கடத்தில் இருந்து செல்வோருக்கு இறங்குதளம் ஆகியவை அமைக்கப்பட்டிருக்கிறது.
இந்நிலையில் உக்கடம் மேம்பாலத்தில் கடந்த ஏழு ஆண்டுகளாக நடந்து வந்த பணி இந்த ஆண்டு இறுதி கட்டத்தை எட்டியது. கடந்த மாதம் ஆத்துப்பாலம் முதல் உக்கடம் வரையிலான பணிகள் வெற்றிகரமாக முடிவுக்கு வந்தது. இதன் மூலம் ஆத்துப்பாலத்தில் இருந்து வரும் வாகனங்கள், உக்கடம் பகுதியில் இறங்கி ஒப்பணக்கார வீதியை எளிதாக சென்றடைய முடியும். தற்போது பாலத்தில் வர்ணம் பூசும்பணி முழுவீச்சில் தொடங்கி நடந்து வருகிறது. மேலும் பாலத்தில் மின்விளக்குகள் பொருத்தப்பட்டுள்ளது. விளக்குகள் எப்படி எரிகிறது என்பதற்கான சோதனையும் நடக்கிறது.
உக்கடம் புதிய மேம்பாலத்தில் அனைத்து பணிகளும் முடிந்து விட்டதால் இந்த மாத இறுதியில் மேம்பாலம் வாகன போக்குவரத்து பயன்பாட்டுக்கு திறந்து விடப்பட உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர். தற்போது உக்கடம் போக்குவரத்து கழக பணிமனை கட்டிடம் பகுதியில் இருந்து வாலாங்குளம் செல்லும் வகையில் மேம்பாலம் கட்டும் பணிகள் அடுத்த 2 மாதங்களில் முடிக்கப்படும் என்றும் அதிகாரிகள் கூறினார்கள்.
உக்கடம் பகுதியில் இந்த மேம்பால பணிகளால் கடந்த ஏழு வருடங்களாக அவதிப்பட்டு வந்த வாகன ஓட்டிகள், பாலம் திறக்கப்பட உள்ள தகவலை கேட்டு மகிழ்ச்சி அடைந்துள்ளனர். கோவையின் வணிகப்பகுதியான உக்கடம் பகுதியின் நீண்ட நாள் கனவு நிறைவேறப்போகிறது.












Click it and Unblock the Notifications