கோவையில் மாற்றுத்திறனாளி மகனை சுமந்து வந்து பட்டா கேட்ட பெண்.. கலெக்டர் செய்த சூப்பர் விஷயம்
கோவை: கோவை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் திங்கள்கிழமை தோறும் மக்கள் குறைதீர்க்கும் கூட்டம் நடைபெறுவது வழக்கம். அங்கு மாவட்ட ஆட்சியர் மற்றும் அதிகாரிகளை சந்தித்து மக்கள், அனைத்துதுறைகள் தொடர்பாகவும் மனு அளிக்கலாம். அந்த வகையில் பெண் ஒருவர் மாற்றுத்திறனாளி மகனை சுமந்து வந்து இலவச வீட்டுமனை கேட்டார். அவருக்கு உடனடியாக இலவச வீடு ஒதுக்க அதிகாரிகளுக்கு, கோவை மாவட்ட கலெக்டர் பவன்குமார் உத்தரவிட்டார்.
தமிழக அரசு புறம்போக்கு நிலங்களில் நீண்ட காலமாக வசிக்கும் ஏழைகள் இலவச மனைப்பட்டா பெற முடியும் . அதேநேரம் அரசு துறைகளுக்கு ஆட்சேபனை இல்லாத, நீர் நிலைகள் அல்லாத நிலங்களில், 10 ஆண்டுகளுக்கு மேலாக வீடு கட்டி குடியிருப்பவர்களுக்கு, 3 சென்ட் வரை இலவச மனைப்பட்டா வழங்கப்படுகிறது. அவ்வப்போது இலவச வீட்டு மனை பட்டாவை அரசு வழங்கி வருகிறது.

ஆட்சேபனையற்ற அரசு புறம்போக்கு நிலங்களில் 5 ஆண்டுகளுக்கும் மேலாக குடியிருப்போருக்கு மட்டும் சில நெறிமுறைகளுக்கு உட்பட்டு இலவச வீட்டுமனை பட்டா வழங்கப்படுகிறது. அதேநேரம் நீர்நிலைகள், கால்வாய்கள், சாலைகள், கோயில் நிலங்கள் போன்ற ஆட்சேபகரமான ஆக்கிரமிப்பு புறம்போக்கு நிலங்களில் குடியிருப்போருக்கு எந்த காலத்திலும் பட்டா வழங்கப்படுவது இல்லை.
அதேநேரம் ஆட்சேபனை அற்ற நத்தம் புறம்போக்கு நிலத்தில் பல ஆண்டுகளாக வசிப்பவர்கள் வீட்டு மனை பட்டா பெற விண்ணப்பிக்கலாம். விண்ணப்பிக்கும் நபர் பெயரில் எந்த வீட்டு மனையும் இருக்கக்கூடாது. ஆண்டு வருமானம் மிக குறைவாகவே இருக்க வேண்டும். வறுமை கோட்டிற்கு கீழ் உள்ளவர்களே இலவச வீட்டு மனை பட்டா பெற முடியும். பட்டாவிற்கு விண்ணப்பிக்கும் நபர் பெயரில் எந்த சொத்தும் இருக்கக்கூடாது.
அத்துடன் ஆக்கிரமித்து குடியிருக்கும் இடத்திற்கான எல்லா ஆவணங்களும் கண்டிப்பாக இருக்க வேண்டும். இதுதான் எதார்த்தமான நடைமுறையாகும். இதன்படி விண்ணப்பிக்கும் நபர்களுக்கு மாவட்ட ஆட்சியர் பரிந்துரையின்பேரில் அதிகாரிகள் பட்டா வழங்குவது நடக்கிறது. அப்படித்தான்பலர் இலவச வீட்டு மனை பட்டா கேட்டு ஒவ்வொரு வாரமும் அலைகிறார்கள். அதில் ஏழைகளுக்கு மட்டுமே விதிகளுக்கு உட்பட்டு வழங்கப்படுகிறது.
இந்நிலையில் கோவை கலெக்டர் அலுவலகத்தில் பொதுமக்கள் குறைதீர்க்கும் கூட்டம் நேற்று நடைபெற்றது. கலெக்டர் பவன்குமார் தலைமை தாங்கி பொதுமக்களிடம் இருந்து மனுக்களை பெற்றார். இந்த கூட்டத்தில் பொள்ளாச்சி ஆச்சிபட்டியை சேர்ந்த 45 வயதாகும் சபீனா என்பவர் தனது மாற்றுத்திறனாளி மகனை சுமந்து வந்து கலெக்டரிடம் மனு அளித்தார்.
அந்த மனுவில், எனக்கு 2 மகன்கள், ஒரு மகள் உள்ளனர். ஒரு மகன் மாற்றுத்திறனாளி. மற்ற 2 பேருக்கும் உடலில் பாதிப்புகள் உள்ளன. கணவர் விபத்தில் சிக்கி உடல் பாதிப்புடன் கூலி வேலை செய்யும் நிலை இருக்கிறது. இவர்களை கவனித்துக்கொண்டு என்னாலும் வேலைக்கு செல்ல முடியவில்லை. இதனால் போதிய வருமானம் இன்றி தவித்து வருகிறோம். எங்களது நிலையை கருத்தில் கொண்டு இலவச வீட்டுமனை ஒதுக்க வேண்டும் என்று கூறப்பட்டு இருந்தது. அவரது மனுவை பரிசீலித்த கோவை கலெக்டர் பவன்குமார், உடனடியாக இலவச வீடு ஒதுக்க நடவடிக்கை எடுக்கும்படி அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். இதனால் அந்த பெண் மகிழ்ச்சி அடைந்தார்.












Click it and Unblock the Notifications