கோவையில் கல்லூரி மாணவியை கடத்தி கூட்டு பாலியல் வன்கொடுமை.. நள்ளிரவில் 3 பேரை சுட்டுப்பிடித்த போலீசார்
கோவை: கோவை விமான நிலையம் அருகே காரில் ஆண் நண்பருடன் பேசிக்கொண்டிருந்த மதுரையை சேர்ந்த கல்லூரி மாணவியை 3 பேர் கடத்தி சென்று கூட்டு பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. கூட்டு பாலியல் வன்கொடுமை செய்த காமுகன்களை 7 தனிப்படை அமைத்து தேடி வந்த நிலையில் இன்று அதிகாலையில் போலீசார் சுட்டுப் பிடித்துள்ளனர்.
மதுரையை சேர்ந்த 19 வயது மாணவி ஒருவர் கோவையில் உள்ள தனியார் கல்லூரியில் படித்து வந்தார். அவர் தனியார் தங்கும் விடுதியில் தங்கியிருந்து கல்லூரிக்கு சென்று வந்துள்ளார். இந்த நிலையில் ஞாயிற்றுக்கிழமை விடுமுறை என்பதால் தனது ஆண் நண்பருடன் காரில் வெளியே சென்றுள்ளார்.

மதுபோதையில் வந்த 3 பேர்
கோவை விமான நிலையம் பின்புறம் உள்ள பிருந்தாவன் நகர் பகுதியில் நேற்று முன் தினம் இரவு 11 மணி அளவில் காரை நிறுத்திவிட்டு பேசிக் கொண்டிருந்துள்ளனர். அப்போது அந்த வழியாக போதையில் வந்த 3 பேர், ஆள் நடமாட்டம் இல்லாத பகுதியில் கார் நின்றிருப்பதை கண்டு அருகே சென்றனர். அங்கு கல்லூரி மாணவியும் ஒரு ஆணும் இருப்பதை கண்டு, அவர்களை வெளியே வருமாறு மிரட்டி உள்ளனர்.
3 பேரும் சேர்ந்து கார் கண்ணாடியை உடைத்து, அந்த ஆண் நண்பரை அரிவாளால் தாக்கி உள்ளனர். அவர் மயக்கமடைந்ததும், மாணவியை கத்தி முனையில் கடத்திச் சென்று ஆள் நடமாட்டம் இல்லாத இடத்திற்கு தூக்கி சென்றனர். பின்னர் 3 கொடூரர்களும் கல்லூரி மாணவியை கூட்டு பாலியல் வன்கொடுமை செய்தனர். இதில் அந்த மாணவி மயக்கமடைந்த நிலையில் அங்கிருந்து 3 பேரும் தப்பி சென்றனர்.
கூட்டு பாலியல் வன்கொடுமை
இதற்கிடையே கொடூரர்கள் தாக்கியதில் படுகாயத்துடன் கிடந்த ஆண் நண்பர் அதிகாலை 2 மணியளவில் கண் விழித்துள்ளார். அப்போது அவர் கல்லூரி மாணவி காணாமல் போயிருப்பதை பார்த்து உடனடியாக போலீசாருக்கு தகவல் கொடுத்தார். அதன்பேரில் பீளமேடு போலீசார் அங்கு வந்து விசாரணை மேற்கொண்டு, கல்லூரி மாணவியை சுற்றிலும் தேடினர்.
துடியலூர் அருகே பதுங்கி இருந்தனர்
ஒரு மணி நேர போராட்டத்துக்கு பிறகு கல்லூரி மாணவி மயக்க நிலையில் மீட்கப்பட்டார். இதையடுத்து கல்லூரி மாணவி மற்றும் அவரது ஆண் நண்பர் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. கோவை விமான நிலையம் அருகே கல்லூரி மாணவி கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் தமிழகத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது.
தமிழகத்தையே உலுக்கிய இந்த சம்பவத்தில் தொடர்புடையவர்களை பிடிக்க 7 தனிப்படைகள் அமைக்கப்பட்டது. பாலியல் வன்கொடுமை நடந்த இடத்தில் சிலரை பிடித்து போலீசார் விசாரித்து வந்தனர். இதில் கொடூரர்கள் 3 பேரும் துடியலூர் அருகே பதுங்கி இருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் நள்ளிரவு 12 மணியளவில் போலீசார் அங்கு சென்று விசாரித்தனர்.
சுட்டு பிடித்த போலீசார்
இதில் போலீசாரை பார்த்ததும் அவர்கள் 3 பேரும் தாக்கிவிட்டு தப்ப முயன்றனர். இதையடுத்து போலீசார் அவர்களது காலில் சுட்டு பிடித்தனர். இதில், குணா தவசி, சதீஷ் கருப்பசாமி, கார்த்தி காளிஸ்வரன் ஆகியோருக்கு காலில் குண்டடிபட்டது. குண்டு காயத்துடன் மூன்று பேரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். தொடர்ந்து அவர்களிடம் தனிப்படை போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.












Click it and Unblock the Notifications