ரயிலில் இருந்து குதித்து குற்றவாளி தப்பியோட்டம்.. தகவல் தெரிந்தால் தெரிவிக்க கோவை போலீஸ் வேண்டுகோள்
கோவை: மோசடி வழக்கு தொடர்பாக கேரள மாநிலம், பாலக்காடு மாவட்டத்தில் தலைமறைவாக இருந்த நபரை மேற்கு வங்க போலீஸார் நேற்று கைது செய்து ரயில் மூலமாக அழைத்து வந்த நிலையில், கைது செய்யப்பட்ட நபர் திடீரென ரயிலில் இருந்து குதித்து தப்பியோடியுள்ளார். இந்நிலையில், தப்பிச் சென்ற நபர் குறித்த தகவல் தெரிந்தால் தெரிவிக்க வேண்டும் என்று கோவை போலீசார் பொதுமக்களிடம் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
கேரள மாநிலம், பாலக்காடு பகுதியைச் சேர்ந்தவர் ஆனந்தன் (40). இவர் மீது மேற்கு வங்கத்தில் மோசடி வழக்குப் பதிவு செய்யப்பட்டிருந்தது. இந்நிலையில், மேற்கு வங்க போலீசார் ஆனந்தனைத் தேடி வந்தனர். தொடர்ந்து, விசாரணை மேற்கொண்டு வந்த நிலையில் ஆனந்தன் பாலாக்காட்டில் இருப்பது தெரியவந்தது.

இதையடுத்து, பாலக்காடு வந்த மேற்கு வங்க போலீசார் ஆனந்தனை கைது செய்து, கடந்த 26 ஆம் தேதி ரயில் மூலம் மேற்கு வங்கம் அழைத்துச் சென்றனர். கடந்த 27 ஆம் தேதி அதிகாலையில் ரயில் கோவை ரயில் நிலையத்தில் இருந்து புறப்பட்டுச் சென்றுள்ளது. அப்போது, ஆனந்தன் ரயிலில் இருந்து குதித்து தப்பியோடியுள்ளார்.
இதனை சற்றும் எதிர்பாராத போலீஸார் தொடர்ந்து அவரை தேடிய நிலையில், போலீசார் பல இடங்களில் தேடியும் கிடைக்காததால், போத்தனூர் ரயில் காவல் நிலையத்தில் மேற்கு வங்க போலீசார் புகார் அளித்தனர்.
இதைத்தொடர்ந்து, தப்பிச் சென்ற ஆனந்தன் குறித்த தகவல் தெரிந்தால், அல்லது எங்கேனும் பார்த்தால் (94981-80937, 94981-27357 ) எண்ணில் தகவல் அளிக்க போத்தனூர் ரயில்வே போலீசார் பொதுமக்களிடம் அறிவுறுத்தியுள்ளனர்.












Click it and Unblock the Notifications