பாக்யராஜ் கிளப்பிய வதந்தி! கோவையில் ஆற்றில் குளிப்போரை யாரும் கொலை செய்யவில்லை: எஸ்பி விளக்கம்
கோவை: கோவை மாவட்டத்தில் ஆற்றில் இறங்கி குளிப்போரின் கால்களை இழுத்து தண்ணீரில் மூழ்கடித்து கொன்று உடலை பாறையின் இடுக்குகளில் சொருகி வைக்கும் சம்பவம் நடப்பதாக இயக்குனர் பாக்யராஜ் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். இந்த வீடியோ பரபரப்பை கிளப்பி உள்ள நிலையில் கோவை எஸ்பி பத்ரி நாராயணன் பரபரப்பான விளக்கம் அளித்துள்ளார்.
தமிழ் சினிமாவில் நடிகராகவும், இயக்குனராகவும் ஜொலித்தவர் பாக்யராஜ். இவர் கடந்த 12ம் தேதி தனது எக்ஸ் பக்கத்தில் தான் பேசும் வீடியோ ஒன்றை வெளியிட்டு இருந்தார். அந்த வீடியோவில் அவர் கூறிய சம்பவம் என்பது பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.

அதாவது கோவை மாவட்டத்தில் ஆற்றில் குளிக்க செல்லும் நபர்களை சிலர் தண்ணீரில் மூழ்கடித்து கொலை செய்வதும், அதன்பிறகு அவர்களின் உடல்களை மீட்டு கொடுத்து பணம் பெறுவதாகவும் கூறி பரபரப்பை ஏற்படுத்தி இருந்தார்.
‛நெஞ்சு பொறுக்குதில்லையே' என்ற தலைப்பில் அவர் இந்த வீடியோவை வெளியிட்டு இருந்தார். மொத்தம் 3.28 நிமிடங்கள் ஓடும் இந்த வீடியோவில் பாக்யராஜ், ‛‛ஒரு சில விஷயங்களை கேள்விப்படும் போது நமக்கு ஆறாத ரணமாக நமக்கு உறுத்திக்கொண்டே இருக்கும். அப்படி ஒரு விஷயத்தை பற்றி நாம் பார்ப்போம். தெரியாதவர்கள் தெரிந்து கொள்ளட்டும். கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அருகே 15 கிலோ மீட்டர் தூரத்தில் வனபத்திரகாளியம்மன் கோவில் இருக்கிறது.
அதன் அருகே நெல்லித்துறை உள்ளது. இவை எல்லாம் நாங்கள் சினிமா சூட்டிங் நடக்கும் இடங்களாகும். இங்கு வந்த அம்பரம்பாளையம் என்று சொல்லக்கூடிய ஒரு ஆறு நீலகிரி மலையில் இருந்து இறங்கி ஓடிக்கொண்டிருக்கிறது. இங்கு சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் பிக்னிக் வருபவர்கள், கோவிலுக்கு வருபவர்கள் ஆற்றில் இறங்கி நீச்சல் அடிப்பது வழக்கம்.
இப்படி நீச்சல் அடிக்கும் போது, என்னவென்று பார்த்தால், சுழலில் சிக்கி தண்ணீர் எங்கோ சுற்றி கொண்டு போய்விட்டது என்று சொல்வார்கள். தேடிப்பார்த்தால் உடல் கிடைக்காது. சுழலில் சிக்கி பாறை இடுக்கில் மாட்டியிருப்பார்கள் என்று அந்தபகுதியில் சொல்வார்கள். அப்போது பக்கத்தில் இருக்கும் கிராமத்தில் ஒருவர் தண்ணீருக்குள் ரொம்ப நேரம் மூழ்கி இருந்து எடுத்துகிட்டு வருவதற்கு ஒரு ஆள் இருக்கிறார் என்று சொன்னார்கள். அப்புறம் அந்த ஆளை போய் கேட்டால், அவரோ இல்லீங்க.. ஐந்துநிமிடம் மூச்சை அடக்கி சுழலில் போய் பார்த்தால் எனக்கே என்னாகும் என்று பயந்தார். அவரிடம் ரூ.1000 பணம் தருவதாக சொல்லியிருக்கிறார்கள்.
ஆனால் முடியாது என்று சொல்லி 2000, 2500 என ஆட்களை பொறுத்து பணம் வழங்குவார்கள். எப்படியாவது உடல் கிடைத்தால் போதும் என்று சொன்னவுடன் அவர் ஒரு இடம் தேடுவார். அப்புறம் இன்னொரு இடம் தேடுவார்.. அப்புறம் 3 நிமிடம் , 4 நிமிடம், ஐந்து நிமிடத்தில் உடலை எடுத்து வருவார். அதன்பிறகு பேசிய பணத்தை உடலை வாங்கியவர்கள் கொடுத்துவிடுவார்கள்.. இது இப்படி அடிக்கடி நடப்பது உண்டு.
அதற்கு அப்புறம் தான் பின்னாளில் உண்மை தெரிந்தது. அந்த நபருக்கு மூழ்கி மூச்சை தம் கட்டும் பழக்கம் இருப்பதால், உள்ளே தண்ணீருக்கு அடியில் மூழ்கி டப்புன்னு காலபுடிச்சு இழுத்து பாறைக்கு இழுத்து சென்று, பாறைக்கு அடியில் சொருகி விடுவார். அப்புறம் எல்லாம் வந்து தேடும் போது, அந்த நபரே வந்து எடுத்து கொடுப்பது போல் வந்து எடுப்பார்.
இதை தொழில் மாதிரியே ஒருத்தன் பண்ணிக்கொண்டு இருந்தான் என்றால் எவ்வளவு கஷ்டம். ஒருத்தனை அடிச்சு புடுங்குறது,ஏமாற்றி புடுங்குறதை விட மோசமானது தண்ணீருக்கு அடியில் தம் கட்டுவதற்கான பவர் இருப்பதை தவறாக பயன்படுத்தி எவ்வளவு தப்பா அதை பயன்படுத்தி இருக்கான் என்று நினைக்கும் போது நெஞ்சு பொறுக்கவில்லை" என்று தெரிவித்து இருந்தார்.
பாக்யராஜின் இந்த வீடியோவானது கோவை மட்டுமின்றி தமிழகம் முழுவதும் பெரும் விவாதத்தை கிளப்பியது. மேலும் இமாச்சல பிரதேசத்தில் கார் விபத்தில் சிக்கி சட்லஜ் ஆற்றில் விழுந்து மரணமடைந்த சென்னை முன்னாள் மேயர் சைதா துரைசாமியின் மகன் வெற்றி துரைசாமியின் இறப்புடனும் சேர்த்து வைத்து இந்த வீடியோ பேசப்பட்டது. இதனால் பாக்யராஜியின் இந்த வீடியோ அதிக கவனம் பெற்றது.
இத்தகைய சூழலில் தான் பாக்யராஜின் வீடியோவுக்கு கோவை மாவட்ட எஸ்பி பத்ரி நாராயணன் மறுப்பு தெரிவித்துள்ளார். மேலும் அப்படி எந்த சம்பவமும் நடக்கவில்லை எனவும், பாக்யராஜின் வீடியோ வதந்தி எனவும் தெரிவித்துள்ளார். இதபற்றி எஸ்பி பத்ரி நாராயணன் கூறியுள்ளதாவது: பாக்யராஜ் குற்றச்சாட்டு அடிப்படை ஆதாரமற்றது. அவர் கூறியது போன்ற சம்பவம் தொடர்பாக ஒன்று கூட மேட்டுப்பாளையம் காவல் நிலையத்தில் பதிவாகவில்லை. பத்ரகாளியம்மன் கோவில் அருகே உள்ள ஆற்றில் 2022, 2023ல் எவ்வித உயிரிழப்பு சம்பவமும் நடக்கவில்லை.
2022ல் பவானி ஆற்றில் எதிர்பாராத வகையில் விபத்து ஏற்பட்டு உயிரிழந்தோரின் எண்ணிக்கை 20 ஆகும். இதனையடுத்து தேசிய, மாநில பேரிடர் மீட்புப்படையால் பயிற்சி பெற்ற 10 காவலர்களை உள்ளடக்கிய, ஒரு காவல் உதவி ஆய்வாளர் தலைமையிலான மேட்டுப்பாளையம் உயிர் காக்கும் காவல் படை 2023 பிப்ரவரியில் உருவாக்கப்பட்டுள்ளது.
இதன் விளைவாக 2023ல் பவானி ஆற்றில் மூழ்கி உயிரிழந்தோரின் எண்ணிக்கை 6 ஆக குறைந்தது. 2024ல் உயிரிழப்புகளே இல்லை. இப்படை ஆற்றில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் ருந்து 914 பேரை காப்பாற்றி உள்ளது. 13 பேரை தற்கொலையில் இருந்து காப்பாற்றி மனநல ஆலோசனை வழங்கி உள்ளது. பவானி ஆற்றங்கரையில் 19 அபாய பகுதிகள் கண்டறியப்பட்டு எச்சரிக்கை பலகைகள், சிசிடிவி கேமரா, ரோந்து ஏற்பாடுகள் நடைமுறையில் உள்ளன. எனவே பாக்யராஜ் கூறிய தகவல் பொய்யானதும் வதந்தியும் ஆகும். இத்தகைய வதந்தி பரப்புவதும் என்பது குற்ற செயலாகும்'' என தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications