கோவை கோவில் முன்பாக கார் சிலிண்டர் வெடித்து ஒருவர் பலி- விபத்தா? சதியா? 6 தனிப்படை போலீஸ் விசாரணை!
கோவை: கோவை அருகே காரில் இருந்த சிலிண்டர் வெடித்து ஒருவர் மரணம் அடைந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இது தொடர்பாக போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
கோவை உக்கடம் பகுதியில் உள்ள ஈஸ்வரன் கோவில் முன்பாக இன்று காலை கார் ஒன்று நின்று கொண்டிருந்தது. அந்த கார் திடீரென பயங்கர சப்தத்துடன் வெடித்து சிதறியது.
இந்த சம்பவத்தில் காரில் இருந்த நபர் அப்படியே தீயில் கருகி உயிரிழந்தார். இச்சம்பவம் தொடர்பாக போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதனையடுத்து சம்பவ இடத்துக்கு வந்த போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

100-க்கும் மேற்பட்ட போலீஸ் குவிப்பு
விபத்து ஏற்பட்ட பகுதியில் நான்கு புறமும் சுமார் அரை கிலோ மீட்டர் தூரத்திற்கு தடுப்பு வேலிகள் அமைத்துள்ள 100-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்பகுதியில் போக்குவரத்தும் மக்கள் நடமாட்டமும் முழுமையாக நிறுத்தப்பட்டுள்ளது. அனைத்து இடங்களிலும் போலீசார் மோப்ப நாய் உதவியுடன் சோதனை நடத்தினர்.

கமிஷனர் கருத்து
கார் சிலிண்டர் வெடித்தது தொடர்பாக கருத்து தெரிவித்த கோவை கமிஷனர் பாலகிருஷ்ணன், காரில் இருந்த சிலிண்டர் வெடித்து விபத்து ஏற்பட்டுள்ளது. கோவில் அருகே இருப்பதால் அனைத்து கோணங்களிலும் விசாரணை நடைபெறுகிறது என்றார்.

ஏடிஜிபி தாமரக்கண்ணன் ஆய்வு
மேலும் சம்பவ இடத்தை ஏடிஜிபி தாமரைக்கண்ணன் நேரில் சென்று ஆய்வு செய்தார். அப்போது இச்சம்பவம் குறித்து ஏடிஜிபி தாமரக்கணன்னன் கூறுகையில், கார் யாருடையது? காரில் கேஸ் சிலிண்டர் இருந்ததா? அல்லது கேஸில் இயங்கும் காரா? என்பவை குறித்து விசாரித்து வருகிறோம். அப்பகுதி சிசிடிவி கேமரா பதிவுகள் மூலம் விசாரணை நடைபெற்று வருகிறது. காரில் உயிரிழந்த நபர் குறித்து விசாரித்து வருகிறோம் என்றார்.

நாசவேலையா?
இச்சம்பவம் தொடர்பாக 6 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன. இச்சம்பவத்தில் தொடர்புடைய சிசிடிவி கேமரா பதிவுகளை ஆய்வு செய்யும் பணியில் 3 தனிப்படைகள் ஈடுபட்டுள்ளன. காரில் இருந்த நபர், காரின் உரிமையாளர் தொடர்பாக மற்றும் நாசவேலை அல்லது சதி தொடர்பாக 3 தனிப்படைகள் விசாரணை நடத்தி வருகின்றன.

கார் உரிமையாளர் யார்?
இதனிடையே வெடித்து சிதறிய கார் பொள்ளாச்சி பதிவு எண் கொண்டது என தெரியவந்துள்ளது. இந்த கார் இதுவரை மொத்தம் நான்கு பேருக்கு கைமாறி இருப்பதும் போலீசாரின் முதல் கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இது தொடர்பாகவும் போலீசார் அடுத்தடுத்த விசாரணைகளை நடத்தி வருகின்றனர்.












Click it and Unblock the Notifications