நடுரோட்டில் பிரசவ வலியால் துடித்த அஞ்சலி.. டாக்டர் இல்லை.. ஓடி வந்து கை கொடுத்த லட்சுமி பாட்டி!
கோவையில் நடுரோட்டில் பெண்ணுக்கு பாட்டி ஒருவர் பிரசவம் பார்த்துள்ளார்.
கோவை: ஆஸ்பத்திரியில் ஆபத்துக்கு ஒரு டாக்டரும் இல்லாததால், நடுரோட்டிலேயே பெண்ணுக்கு பாட்டி ஒருவர் பிரசவம் பார்த்துள்ளார். இவ்வளவு மோசமான சம்பவம் கோவையில் அரங்கேறி உள்ளது.
மன்னார்குடியைச்சேர்ந்த நிறைமாத கர்ப்பிணி அஞ்சலி. இவர் நேற்றைக்கு வீரகேரளம் பகுதியிலுள்ள தன் உறவினர் வீட்டிற்கு வந்துள்ளார். இந்நிலையில் இன்று காலை அஞ்சலிக்கு திடீரென பிரசவ வலி ஏற்பட்டுள்ளது.
அதனால், வேடப்பட்டி என்ற கிராமத்தில் இயங்கி வரும் தனியார் மருத்துவமனைக்கு அஞ்சலியை அழைத்து வந்துள்ளனர். ஆனால் அங்கு ஒரு டாக்டரும் இல்லாததை கண்டு உறவினர்கள் அதிர்ச்சி அடைந்தனர். அதனால் அங்கிருந்த நர்ஸ்கள், அரசு ஆஸ்பத்திரிக்கு அஞ்சலியை கொண்டு போய் சேர்க்குமாறு அறிவுறுத்தினார்கள்.
லட்சுமி பாட்டி
அதனால் வேறு வழி இல்லாததால், அஞ்சலியை அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கலாம் என அங்கிருந்து வெளியே கூட்டி வந்தனர். அப்போது, பிரசவ வலி இன்னும் அதிகமாகிவிட்டது. வலியால் துடிப்பதை ஆஸ்பத்திரிக்கு வெளியே பெட்டிக்கடை வைத்திருக்கும் லட்சுமி என்ற பாட்டி கவனித்து, அஞ்சலிக்கு உதவ முன்வந்தார்.
பொதுமக்கள் ஆத்திரம்
ஆனால், வேடப்பட்டி - தொண்டாமுத்தூர் ரோட்டிலேயே அஞ்சலிக்கு பாட்டி பிரசவம் பார்க்க வேண்டிய நிலைமை ஏற்பட்டு விட்டது. கொஞ்ச நேரத்திலேயே அழகான ஆண் குழந்தை பிறந்தது. இதனால் உறவினர்களும், பொதுமக்களும் சந்தோஷப்பட்டாலும், இப்படி சாலையில் பிரசவம் பார்க்கும்படி ஆகிவிட்டதே என்று ஆத்திரப்பட்டார்கள்.
வாக்குவாதம்
அதனால், டாக்டர்கள் இல்லாத அந்த ஆஸ்பத்திரிக்குள் சென்று அங்கிருந்த நர்ஸ்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் சிறிது நேரம் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. பின்னர், தாயும், சேயும் 108 அவசர ஊர்தி மூலம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.
டாக்டர்கள் இல்லை
ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் ஆபத்துக்குகூட ஒரு டாக்டர்கள் இல்லாமல் இருப்பது கடும் அதிர்ச்சி அளிப்பதாக பொதுமக்கள் குமுறுகிறார்கள்.