கிராம நத்தம் நிலங்கள் பத்திரப்பதிவு திடீர் நிறுத்தம்? தவிக்கும் மக்கள்.. பதிவுத்துறை விளக்கம்
கோவை: பத்திரப்பதிவு அலுவலகங்களில் கிராம நத்தம் நிலங்களை பதிவு செய்யாமல், நிறுத்தம் செய்யப்பட்டதாக வெளியான தகவலை பத்திப்பதிவு துறை அதிகாரிகள் மறுத்துள்ளனர்.
முன்னதாக கிராம நத்தம் சொத்துக்களை விற்கமுடியாமலும், புதிய சொத்துக்களை வாங்க முடியாமலும், வீட்டுக்கடன் பெறமுடியாமலும், மக்கள் தவிப்புக்குள்ளவதாக கோவையில் பத்திர எழுத்தர்கள் குற்றம்சாட்டி இருந்தனர்.

தமிழ்நாடு முழுவதம் வீடு, மனையிடம், காலியிடம், நன்செய்,புன்செய் உள்ளிட்ட அனைத்துப்பதிவுகள், வணிக ரீதியான மற்றும் திருமணம், வர்த்தகம், சங்கம் உள்ளிட்ட பதிவுகள் வேலை நாட்களில் மேற்கொள்ளப்படுகிறது. பத்திரப்பதிவு தான் தமிழ்நாட்டில் உள்ள சார் பதிவாளர் அலுவலங்களில் அதிகமாக நடைபெறும்.
அரசுக்கும் புதிதாக நிலம் , வீடு, மனை, அப்பார்ட்மெண்டுகள் பதிவு செய்யப்பட்டால் அரசுக்கு நிறைய வருவாய் கிடைக்கும். இந்த தொழிலை நம்பி தமிழகம் முழுவதும் ஆயிரக்கணக்கான பத்திர எழுத்தர்களும் உள்ளனர்.
இந்நிலையில் கோவை மாவட்டத்தில் உள்ள சார்பதிவாளர் அலுவலங்களில் கிராம நத்தம் பட்டா பதிவுடைய மனையிடம், வீடு, காலி இடம் போன்றவை பதிவுத்துறையில், தற்காலிகமாக பதிவு செய்ய முடியாமல் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக பத்திர எழுத்தர்கள் குற்றம்சாட்டினார்கள்.
கிராம நத்தம் நிலங்கள் பொதுவாக அரசின் புறம்போக்கு நிலங்களாக கருதப்படுகிறது. பலவருடங்களாக குடியிருக்கும் மக்களுக்கு கிராம நத்தம் நிலத்தில் குடியிருந்தால் 1991ல் பட்டா வழங்கப்பட்டது. ஆனால் இதுவரை ஆன்லைனில் பதிவு செய்யப்படவில்லை என்று கூறப்படுகிறது.
கடந்த நான்கு மாதங்களாக, கிராம நத்தம் பட்டா மட்டும் பதிவு செய்ய முடியாதபடி, தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாகவும், அவற்றை கணக்கீடு செய்து, ஆன்லைனில் பதிவு செய்யும் நடைமுறை பின்பற்றப்பட்டு வருவதாகவும் பத்திர எழுத்தர்கள் கூறுகிறார்கள்.
இதன காரணமாக அதற்காக கடந்த நான்கு மாத காலமாக, பதிவுத்துறைநத்தம் பட்டா பதிவுகளை நிறுத்தம் செய்து வைத்துள்ளதாகவும், இதன் காரணமாக கிராம நத்தம் சொத்துக்களை விற்கமுடியாமலும், புதிய சொத்துக்களை வாங்க முடியாமலும், வீட்டுக்கடன் பெற முடியாமலும், தவிப்பதாக புகார்கள் எழுந்தன.
இதனிடையே பதிவுத்துறை அமைச்சர் மூர்த்தியோ, கிராம நத்தம் நிலங்களை பதிவு செய்ய தடையில்லை என்று ஏற்கனவே அதிகாரப்பூர்வமாக அறிவிப்பும் வெளியிட்டுள்ளார்,. ஆனால், கோவை மாவட்டத்திலுள்ள பத்திரப்பதிவுத்துறை அலுவலகங்களில், கிராமநத்தம் நிலங்கள் மற்றும் வீட்டு மனை இடம், வீடு போன்றவற்றை பதிவு செய்வதில்லை என்று பத்திர எழுத்தர்கள் சிலர் குற்றம்சாட்டினர்.
இதனிடையே கோவை மண்டல பத்திரப்பதிவுத்துறை துணை தலைவர் சுவாமிநாதன் , பத்திரப்பதிவு அலுவலகங்களில் கிராம நத்தம் நிலங்களை பதிவு செய்யாமல், நிறுத்தம் செய்யப்பட்டதாக வெளியான தகவலை திட்டவட்டமாக மறுத்துள்ளார்.
கிராம நத்தம் நிலங்களை பதிவு செய்யாமல், நிறுத்தம் செய்யவில்லை என்று கூறிய அவர், வருவாய்த்துறையினர் அறநிலையத்துறை நிலங்கள் உள்ளிட்ட, அரசு சார்ந்த நிலங்கள் குறித்த தகவல்களை, ஆன்லைனில் பதிவேற்றம் செய்து வருகிறோம் என்றும், அவற்றில் கிராம நத்தம் நிலங்களும் வருவதால் அவற்றில் பலவற்றையும் ஆன்லைனில் பதிவேற்றம் செய்துவிட்டோம்.
எனவே கிராம நத்தம் நிலங்கள் பதிவு செய்யப்படாமல் இருப்பதாக வரும் தகவல் உண்மை இல்லை என்றார். அப்படி எங்காவது கிராம நத்தம் நிலங்கள் பத்திரப்பதிவு செய்யப்படவில்லை என்று கூறினால் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் சுவாமிநாதன் கூறினார்.












Click it and Unblock the Notifications