செங்கோட்டையன் அமித்ஷாவுடன் சந்திப்பா?.. உடைத்துப் பேசிய வானதி சீனிவாசன்
கோவை: 2026 தேர்தல் களம் அனல் பறக்கத் தொடங்கியுள்ளது. அதிமுகவில் உட்கட்சிப் பிரச்சனை வெடித்துள்ளது. அதிமுகவில் இருந்து வெளியேறியவர்களை மீண்டும் இணைக்க வேண்டும் என செங்கோட்டையன் 10 நாட்கள் கெடு விதித்த நிலையில், அவரது அனைத்து பதவிகளையும் அக்கட்சி பொதுச்செயலாளர் பழனிசாமி பறித்தார். இதைத்தொடர்ந்து, ஹரித்துவார் செல்வதாக கூறி புறப்பட்ட செங்கோட்டையன், டெல்லியில் அமித்ஷாவை சென்று சந்தித்ததாக பரவி வருகிறது. இந்நிலையில், செங்கோட்டையன் அமித்ஷா சந்தித்தனரா என்பது குறித்து செய்தியாளர்கள் சந்திப்பில் எம்எல்ஏ வானதி சீனிவாசன் பேசியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கோவையில் செய்தியாளர்களைச் சந்தித்த வானதி சீனிவாசன் கூறியதாவது: சரித்திரத்தில் முக்கியத்துவம் வாய்ந்த நாளாக இன்று இருக்க போகின்றது. துணை குடியரசு தலைவர் தேர்தல் நடைபெற்று வருகிறது. சி பி இராதாகிருஷ்ணன் வெற்றி வேட்பாளராக களத்தில் நிற்கிறார். அவர் தான் துணை குடியரசு தலைவராக பொறுப்பு ஏற்கவுள்ளார்.

குடியரசு தலைவர் தேர்தல்
கட்சியில் சாதாரண தொண்டனாக பணியாற்றியவர். இரண்டு முறை பாராளுமன்ற உறுப்பினர் பதவி ஏற்றுள்ளார். இளைஞராக இருந்த காலத்தில் இருந்து மக்கள் பணியில் பணியாற்றியவர். ஆளுநர் பதவி வகித்து நிர்வாகம் மேற்கொண்டவர். இன்று இந்திய தேசத்தின் துணை குடியரசு தலைவராக பொறுப்பு ஏற்கவுள்ளார். கூட்டணி கட்சி குறித்து கேள்விக்கு பதில் அளிக்காமல், தமிழர்களுக்கு வாக்கு அளிக்காமல், முதுகில் குத்தும் துரோகத்தை திமுக செய்துள்ளது.
தமிழர்கள் ஒன்றுபட வேண்டும் என்றும் சொல்லும் திமுக கூட்டணியினர், ஆதரவு தரவில்லை , தமிழர்களுக்கு எதிராக செயல்படுகின்றனர். தேசிய ஜனநாயக கூட்டணியில் பல்வேறு கட்சியினர் உள்ளனர். சில கட்சிகளில் அந்தந்த கட்சிகளுக்குள் பிரச்சனைகள் வரும்போது அந்தந்த கட்சிகளினுடைய தலைமை அதற்கேற்ப முடிவு செய்யும். தேசிய ஜனநாயக கூட்டணியை வலுப்படுத்த வேண்டும். ஒற்றை இலக்கு மட்டும் தான் எங்களுக்கு. 2026 தேர்தலில் வெற்றி பெற்று திமுக வீட்டிற்கு அனுப்ப வேண்டும் அனைவரும் ஒற்றுமையாக இருந்து வெற்றியை பெற வேண்டும் என்பது தான் எங்களுடைய இலக்கு.
பலமான கூட்டணி தான் இலக்கு
பலமான கூட்டணியை உருவாக்குவது தான் எங்களுடைய இலக்கு. அதற்காக பல்வேறு முயற்சிகளை, பணிகளை நாங்கள் மேற்கொண்டு வருகிறோம். வெகு நிச்சயமாக கூட்டணி கட்சிகளின் எண்ணிக்கை மட்டுமல்ல அரித்மேட்டிக்கை தாண்டி இந்த தேர்தலில் கெமிஸ்ட்ரி ஒர்க்காகப் போகிறது. அதனால், வெகு நிச்சயமாக கூட்டணியில் இருக்கும் குழப்பங்கள் சரியாகும். நிச்சயமாக நாங்கள் வெற்றி பெறுவோம்.
ஆதாரம் இருக்கா?
எதிர்க்கட்சித் தலைவர்கள் டெல்லியில் பாஜக தலைவர்களை பார்ப்பதற்கான காரணம் கூட்டணி அமைந்திருப்பதால் தான் என்றார். செங்கோட்டையன் அமித்ஷாவை சந்தித்ததாக தகவல் பரவி வருவது குறித்த கேள்விக்கு, அதிமுகவில் இருக்கும் மற்ற தலைவர்கள் பாஜக தலைவர்களைச் சந்தித்ததற்கான ஆதாரம் உள்ளதா. அவர்கள் சந்தித்துக் கொண்ட புகைப்படம், எங்கள் கட்சியின் தலைவர்கள் சமூக வலைதளங்களில் கூறியிருக்கின்றனரா என்றார்.
மற்ற கட்சியில் இருக்கும் பிரச்சனையில் பாஜக தலையிடாது. மற்ற தலைவர்கள் சொல்கின்ற கருத்துக்கு நாங்கள் எப்படி பதில் சொல்ல முடியும். பாஜக தலைவரை சந்தித்தற்கான ஆதாரம் உள்ளதா?. பிரேக்கிங் செய்திகளுக்காக இல்லாத ஆதாரங்களையும் கூட்டணியில் குழப்பம் என்ற தலைப்பில் செய்தி போடுவது ஊடகங்களின் தன்மையாக உள்ளது. விஜய்யின் பரப்புரை அனுமதி மறுப்பு குறித்த கேள்விக்கு இன்றைய தினம் சி பிஆர் மட்டும்தான் என பதில் அளித்துவிட்டு புறப்பட்டுச் சென்றார்.












Click it and Unblock the Notifications