கோவையில் '10க்கு 10', தர்மபுரியில் '5க்கு 5' அதிரவைத்த அதிமுக.. ஒன்று கூட இல்லை.. சோகத்தில் திமுக
கோவை: கோவை மாவட்டத்தில் உள்ள 10 தொகுதிகளில் திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் ஒரு இடத்தில் கூட வெல்லவில்லை. அதிமுக, பாஜக கூட்டணி இங்கு முழுமையாக வென்றுள்ளது. இதன் மூலம் கோவை அதிமுகவின் கோட்டை என்பது நிரூபணம் ஆகி உள்ளது,
Recommended Video
கோவை மட்டுமின்றி, தர்மபுரி மாவட்டத்தில் உள்ள ஐந்து தொகுதியிலும் அதிமுக பாமக கூட்டணியே வென்றுள்ளது. திமுகவிற்கு ஒரு இடம் கூடகிடைக்கவில்லை.
சேலத்திலும் ஒரு தொகுதியில் மட்டுமே திமுக வெற்றி பெற்றுள்ளது. மற்ற அனைத்து தொகுதியிலும் அதிமுக கூட்டணியே வென்றுள்ளது.
தொண்டாமுத்தூரில் தங்க வீடு கூட கொடுக்கவில்லை.. மன்சூருக்கு மக்கள் அளித்த வாக்குகள் எவ்வளவு?
கடந்த 2016 சட்டசபை தேர்தலில் அதிமுக மீண்டும் ஆட்சிக்கு வருவதற்கு முக்கியமான காரணம் கோவை முதல் கிருஷ்ணகிரி வரை உள்ள கொங்கு மண்டலத்தில் அதிக தொகுதிகளில் வென்றது தான் காரணம். அதனால் இந்த முறை எப்படியும் கொங்குமண்டலத்தில் அதிக தொகுதிகளில் வெல்ல வேண்டும் என்று திமுக கடுமையாக வேலை செய்தது.
கோவை மாவட்டத்தில் மொத்தமாக பின்னடைவை சந்தித்த திமுக' - அதிர்ச்சி அளித்த ம.நீ.ம!
கோவை மாவட்டம்
ஆனாலும் பெரிய அளவில் திமுகவிற்கு வெற்றி கிடைக்கவில்லை. கொங்கு மண்டலத்தில் உள்ள பெரும்பாலான தொகுதிகளில் அதிமுக, பாஜக, பாமக கூட்டணியே வென்றுள்ளது. குறிப்பாக கோவை மாவட்டத்தில் உள்ள கோவை வடக்கு, கோவை தெற்கு, சிங்காநல்லூர், தொண்டாமுத்தூர், கிணத்துக்கடவு, பொள்ளாச்சி, மேட்டுப்பாளையம், சூலூர், கவுண்டம்பாளையம், வால்பாறை என 10 தொகுதிகளிலும் அதிமுக கூட்டணியே வென்றுள்ளது.,
மேட்டுப்பாளையம் அதிகம்
கோவை மாவட்டத்தில் உள்ள 10 தொகுதிகளிலும் 15 லட்சத்து 19 ஆயிரத்து 27 ஆண்கள், 15 லட்சத்து 62 ஆயிரத்து 573 பெண்கள், 428 மூன்றாம் பாலினத்தவா்கள் என மொத்தம் 30 லட்சத்து 82 ஆயிரத்து வாக்காளா்கள் இருந்தனர். இங்கு 68.32 சதவீதம் வாக்குப் பதிவாகி இருந்தன. அதிகபட்சமாக மேட்டுப்பாளையத்தில் 75.16 சதவீதம், சூலூரில் 75.49, கவுண்டம்பாளையத்தில் 66.11, கோவை வடக்கில் 59.08, தொண்டாமுத்தூரில் 71.04, கோவை தெற்கில் 60.72, சிங்காநல்லூரில் 61.68, கிணத்துக்கடவில் 70.30, பொள்ளாச்சியில் 77.28, வால்பாறையில் 70.10 சதவீத வாக்குகள் பதிவாகி இருந்தன.
நிலைமை மாறியது
இந்நிலையில் நேற்று காலை பதிவான வாக்குகளை எண்ணும் பணி கோவை-தடாகம் சாலையில் உள்ள அரசு தொழில்நுட்பக் கல்லூரியில் நடந்தது. இதில் தபால் வாக்குகள் எண்ணத் தொடங்கிய சில நிமிடங்களில் கோவையின் 10 தொகுதிகளிலும் திமுக முன்னிலை வகித்தது. ஆனால் மற்ற வாக்குகளை எண்ணத் தொடங்கியதும் நிலைமை மாறியது. பின்னா் காலை 10 மணிக்கு கோவையின் அத்தனை தொகுதிகளிலும் அதிமுக மற்றும் அதன் கூட்டணி கட்சி முன்னிலை வகிக்கத் தொடங்கின. பிற்பகல் 2.30 மணியளவில் கிணத்துக்கடவு, மேட்டுப்பாளையம் தொகுதிகளைத் தவிர பிற தொகுதிகளில் அதிமுக வெற்றி உறுதியானது.
கடும் போட்டி
வால்பாறை வேட்பாளா் அமுல் கந்தசாமி வெற்றி பெற்றார்.. இதன்மூலம் கோவையில் அதிமுக தனது முதல் வெற்றியைப் பதிவு செய்தது. கோவை தொண்டாமுத்தூா் தொகுதியில் அமைச்சா் எஸ்.பி.வேலுமணி மிகப்பெரிய வெற்றி பெற்றார். இதேபோல பொள்ளாச்சி தொகுதி அதிமுக வேட்பாளா் பொள்ளாச்சி வி.ஜெயராமனும் வெற்றி பெற்றார். கோவை தெற்கில் பாஜகவின் வானதி சீனிவாசன் வெற்றி பெற்றார். மேட்டுப்பாளையம், கவுண்டம்பாளையம், கோவை வடக்கு என வரிசையாக அதிமுக வென்றது. இறுதியாக கிணத்துக்கடவு தொகுதியில் மட்டும் திமுக முன்னிலையில் இருந்தது. ஆனால் அங்கும் அதிமுக வேட்பாளா் செ.தாமோதரன் ஆயிரத்து 547 வாக்குகள் வித்தியாசத்தில் திமுக வேட்பாளா் குறிச்சி பிரபாகரனை தோற்கடித்தார் இதன்மூலம் கோவையில் 10 தொகுதிகளிலும் அதிமுக வெற்றி உறுதி செய்யப்பட்டு கோவை அதிமுகவின் கோட்டை என மீண்டும் நிரூபித்துள்ளது.
ஐந்திலும் வெற்றி
தர்மபுரி மாவட்டத்தில் ஒரு தொகுதியில் கூட திமுக வெற்றி பெறவில்லை. பாலக்கோட்டில் அதிமுகவின் அன்பழகன் வெற்றி பெற்றார். பென்னாகரத்தில் பாமகவின் ஜிகே மணி வெற்றி பெற்றார். தர்மபுரியில் பாமகவின் வெங்கடேஸ்வரன் வென்றார், அரூரில் அதிமுகவின் சம்பத்குமார் வென்றார். இந்த ஐந்து தொகுதியிலுமே கணிசமான வாக்கு வித்தியாசத்தில் அதிமுகவும், பாமகவும் வென்று அதிரவைத்துள்ளன. தமிழகத்தை ஆளப்போகும் திமுகவிற்கு கோவை, தர்மபுரியில் ஒரு எம்எல்ஏக்கள் கூட இல்லை.