பள்ளிவாசல் முன் பரபரப்பு.. ராசாவை சுத்துப் போட்ட ர.ர.க்கள்..சிரிச்சுகிட்டே ஸ்கோர் பண்ணிட்டாரே..!
கோவை: நீலகிரி மக்களவைத் தொகுதியில் திமுக சார்பில் போட்டியிடும் முன்னாள் மத்திய அமைச்சர் ஆ ராசா மேட்டுப்பாளையம் பகுதியில் பள்ளிவாசல் முன்பு வந்தபோது அதிமுகவினர் அவரைச் சூழ்ந்து கொண்டு இரட்டை இலை சின்னத்துக்கு வாக்கு கேட்டனர். அப்போது அவரது ரியாக்ஷன் தான் தற்போது லோக்கல் அரசியல் களத்தில் பேசுபொருளாகி இருக்கிறது.
நீலகிரி மக்களவைத் தொகுதி வேட்பாளராக திமுக தலைமையால் அறிவிக்கப்பட்டுள்ள ஆ.ராசா நான்காவது முறையாக அந்த தொகுதியில் களம் காண்கிறார்.

முதலில் பெரம்பலூர் மக்களவைத் தொகுதியில் இருந்து திமுக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்ற அவர் மத்திய அமைச்சராகவும் பதவி வகித்தார். அதனைத் தொடர்ந்து 2009ஆம் ஆண்டு 15வது மக்களவைத் தேர்தலில் திமுக சார்பில் முதல்முறையாக நீலகிரி மக்களவைத் தொகுதியில் அவர் போட்டியிட்டார்.
ஆ.ராசா போட்டி : காங்கிரஸ் தலைமையிலான அந்த ஆட்சியில் மத்திய தொலைதொடர்பு மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சராகவும் பொறுப்பு வகித்தார். அதன் பிறகு நடந்த தேர்தலில் நீலகிரியில் இரண்டாவது முறையாக போட்டியிட்ட அவர் அதிமுக வேட்பாளரிடம் வெற்றி வாய்ப்பை இழந்த போதிலும் 2019ஆம் ஆண்டு மீண்டும் அதே தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். தற்போதைய தேர்தலிலும் நீலகிரி தொகுதியிலேயே அவர் போட்டியிடுவார் எனக் கூறப்பட்ட நிலையில் அரசியல் களத்தில் பேசப்பட்டது போலவே அதே தொகுதியில் ஆ.ராசா போட்டியிடுவார் என திமுக தலைமை அறிவித்தது.
பரபரக்கும் தேர்தல் களம்: தேர்தல் களம் சூடுபிடிக்க திமுகவினரும் கூட்டணி கட்சியினரும் ஆ.ராசாவுக்கு ஆதரவாக தீவிரமாக வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். அதே நேரத்தில் அவருக்கு போட்டியாக தற்போதைய மத்திய அமைச்சரான பாஜகவைச் சேர்ந்த எல்.முருகன் போட்டியிடுகிறார். இதனால் நீலகிரி தொகுதி ஸ்டார் தொகுதி அந்தஸ்தை பெற்றுள்ளது. வாக்காளர்களை கவரும் பொருட்டு ஆ.ராசா நூதனப் பிரச்சாரங்களையும் மேற்கொண்டு வருகிறார். பக்கோடா சுடுவது மாட்டு வண்டியில் இருசக்கர வாகனத்தை ஏற்றிக்கொண்டு பிரச்சாரம் செய்வது, வடை சுடுவது மாட்டு வண்டி பயணம் என பல்வேறு தேர்தல் யுக்திகளை கடைபிடித்து வாக்காளர்களை கவர முயற்சி செய்து வருகிறார்.

அதிமுகவினர் பிரசாரம்: இந்நிலையில் கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் உதகை சாலையில் உள்ள கொத்துவா பள்ளி வாசலில் இன்று ரமலான் பண்டிகையை ஒட்டி சிறப்பு தொழுகை நடைபெற்றது. இதில் தொழுகை முடித்து வெளியே வந்த இஸ்லாமியர்களிடம் அதிமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர் லோகேஷ் தமிழ்ச்செல்வனுக்கு வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வந்தனர். அப்போது அந்த வழியாக நீலகிரி தொகுதி திமுக வேட்பாளர் ஆ.ராசா காரில் வந்தார். அப்போது அங்கு கூடியிருந்த அதிமுக தொண்டர்கள் போடுங்க அம்மா ஓட்டு இரட்டை இலையை பார்த்து என கோஷம் இட்டனர்.
வாழ்த்து சொன்ன ஆ.ராசா: இதனை கண்ட ஆ.ராசா வாகனத்தை நிறுத்தி அதிமுக நிர்வாகிகளுக்கும் தொண்டர்களுக்கும் கை கொடுத்து வாழ்த்து தெரிவித்தார். மேலும் அதிமுக நிர்வாகிகள் அவருக்கு இரட்டை இலை சின்னத்திற்கு வாக்கு அளிக்க அவரிடம் வாக்கு கேட்டு நோட்டீஸ் வழங்கினர். அதனை வாங்கி கொன்டு கை கொடுத்து விட்டு அங்கு இருந்து கிளம்பினார். இதனிடையே ஆ.ராசா பேசி கொண்டு இருந்த போது திமுக தொண்டர் ஒருவர் அதிமுகவினர் கோஷம் எழுப்பிய போது எதிர் கோஷம் எழுப்பினார். இதனால் சற்று நேரம் அங்கு பரபரப்பு ஏற்பட்டாலும் ஒருவழியாக இரு தரப்பினரும் சிரித்தபடியே அங்கிருந்து கலைந்து சென்றனர்.











Click it and Unblock the Notifications