கனிமொழி எம்.பி.க்கு விரைவில் புதிய பதவி... கொங்கு மண்டல தோல்விக்கான காரணம் கண்டறிய திட்டம்..!
கோவை: கொங்கு மண்டலத்தில் திமுக அடைந்த தோல்வி குறித்து காரணம் கண்டறிய கனிமொழி எம்.பி.தலைமையில் குழு அமைக்கும் யோசனையில் உள்ளது அக்கட்சியின் தலைமை.
தென் மண்டலத்தில் வரக்கூடிய தூத்துக்குடியில் எம்.பி.யாக உள்ள இவர் எப்படி கொங்கு மண்டல பொறுப்பாளராக வரக்கூடும் என்ற கேள்வி இயல்பாகவே எழும். ஆனால் அரசியலில் எதுவும் எப்போதும் நடக்கலாம் என்பதே நிதர்சனமான உண்மை. அந்த வகையில் கொங்கு மண்டலத்தில் கட்சி பலவீனமான நிலையில் இருப்பதால் அடுத்தடுத்து வரும் உள்ளாட்சி தேர்தல் மற்றும் நாடாளுமன்றத் தேர்தலுக்கு முன்பாக திமுகவை கொங்கு மண்டலத்தில் பலப்படுத்துவதற்கான பணிகள் தொடங்கப்படவுள்ளன. முதலமைச்சரின் முழு கவனமும் தற்போது கொரோனாவை கட்டுக்குள் கொண்டு வருவதில் மட்டுமே இருந்து வருகிறது. இதன் காரணமாக தான் திமுக வேட்பாளர்களின் தோல்விக்கு காரணமான நிர்வாகிகள் தப்பித்து வருகின்றனர். இன்னும் ஓரிரு மாதத்திற்குள் கொரோனாவை முற்றிலும் கட்டுக்குள் கொண்டு வரும் திட்டத்துடன் செயல்படும் முதலமைச்சர் ஸ்டாலின், அதற்கு பிறகு உட்கட்சி பஞ்சாயத்துக்களை விசாரிக்கத் தொடங்குவார்.

திமுக வேட்பாளர்களின் தோல்விக்கான காரணத்தை ஆராயும் பணிகளை கோவையில் இருந்து ஸ்டாலின் தொடங்கவிருக்கிறார். அவ்வாறு அவர் விசாரணை நடத்தி உள்ளடி வேலை செய்தவர்கள் மீதான புகார்கள் நிரூபிக்கப்பட்டால் கட்சி ரீதியான நடவடிக்கை கடுமையாக இருக்கும் எனத் தெரிவிக்கப்படுகிறது. இதனிடையே கனிமொழி எம்.பி.யை தேர்தல் தோல்விக்கான காரணம் கண்டறியும் குழு தலைவராக கொங்கு மண்டலத்தில் நியமித்து அவர் மூலம் கிடைக்கும் அறிக்கையை வைத்து சுயநல நிர்வாகிகள் மீது முதல்வர் சாட்டையை சுழற்றுவார் எனத் தெரிகிறது.
இதுமட்டுமல்லாமல் தமிழக அரசு கொங்கு மண்டலத்தை புறக்கணிப்பதாக பாஜக எம்.எல்.ஏ. வானதி சீனிவாசன் உள்ளிட்டோர் முன்வைக்கும் புகார்களுக்கு, கனிமொழி எம்.பி.மூலம் அங்கு தக்க பதிலடி கொடுக்க முடியும் என எண்ணுகிறார் முதல்வர். மேலும், ஏற்கனவே பொள்ளாச்சி விவகாரத்தை மகளிரணி போராட்டங்கள் மூலம் பெரியளவில் எடுத்துச்சென்றவர் கனிமொழி. இப்படி கட்சி வளர்ச்சிக்கான பல சாதகங்களை ஆராய்ந்து அதனடிப்படையில் விரைவில் சிலருக்கு புதிய பதவியும் ஒரு சில மாவட்டச் செயலாளர்களுக்கு கல்தாவும் காத்திருக்கிறது.












Click it and Unblock the Notifications