கோவையில் ஸ்டாலின்! பொன்னாடைகளை தவிர்த்த திமுகவினர்! பரிசளிப்பாக குவிந்த புத்தகங்கள்!
கோவை சென்ற முதலமைச்சர் ஸ்டாலினுக்கு பொன்னாடைகளுக்கு பதில் புத்தகங்களை மட்டுமே கொடுத்த திமுகவினர்.
கோவை: கோவை சென்ற முதலமைச்சர் ஸ்டாலினுக்கு விமான நிலையத்தில் பொன்னாடைகளுக்கு பதில் புத்தகங்களை மட்டுமே கட்சியினர் பரிசாக கொடுத்து வரவேற்றனர்.
ஓரிரு நிர்வாகிகள் மட்டும் ஆர்வக்கோளாறில் பொன்னாடைகளையும், சால்வைகளையும் கொடுத்து முதல்வரை வரவேற்றனர்.
தன்னை சந்திக்க வருபவர்கள் பொன்னாடைகள், சால்வைகளுக்கு பதில் புத்தகங்களை மட்டும் வழங்கினால் போதும் என கிளிப்பிள்ளைக்கு சொல்வது போல் மீண்டும் மீண்டும் கட்சியினருக்கு ஸ்டாலின் கூறி வருவது குறிப்பிடத்தக்கது.

கோவையில் ஸ்டாலின்
மாற்றுக்கட்சியினர் திமுகவில் இணையும் விழா, விசைத்தறி உரிமையாளர்கள் சங்கம் நடத்தும் நன்றி தெரிவிக்கும் விழா ஆகிய இரண்டு நிகழ்ச்சிகளில் கலந்துகொள்வதற்காக முதலமைச்சர் ஸ்டாலின் இன்று காலை கோவை புறப்பட்டுச் சென்றார். அங்கு விமான நிலையத்தில் அவருக்கு அளிக்கப்பட்ட வரவேற்பின் போது, பெரும்பான்மையான கட்சியினர் அதாவது 90% பேர் பொன்னாடைகளையும், சால்வைகளையும் தவிர்த்து புத்தகங்களை மட்டுமே முதல்வருக்கு பரிசாக கொடுத்தனர்.

புத்தக முன் பக்க அட்டை
இதனால் முதலமைச்சர் ஸ்டாலின் மகிழ்ச்சியுடன் அந்த புத்தகங்களை வாங்கிக் கொண்டார். என்ன தலைப்பில் தனக்கு புத்தகங்கள் கொடுக்கிறார்கள் என்பதை அறிந்துகொள்வதில் ஆர்வமாக இருந்த ஸ்டாலின், புத்தகத்தின் முன் பக்க அட்டையை பார்த்த பிறகே அதை தனது உதவியாளர்களிடம் கொடுத்தார். மேலும், அந்த புத்தகங்கள் அனைத்தும் நூலகங்களுக்கு பிரித்துக் கொடுக்கப்படுவதற்காக சென்னை கொண்டு செல்லப்படவுள்ளது.

வாழைமரத் தோரணம்
ப்ளக்ஸ் பேனர்கள், விளம்பர பதாகைகள், வாழைமரத் தோரணங்கள் என ஆடம்பரங்களை தவிர்க்குமாறு கட்சி நிர்வாகிகளுக்கு முதலமைச்சர் ஸ்டாலின் தொடர்ந்து அறிவுறுத்தி வருவது குறிப்பிடத்தக்கது. ஆனாலும் முதலமைச்சரின் அன்புக்கட்டளையை மீறி கோவையில் வழக்கம் போல் தனது பிரம்மாண்டத்தை காட்டி அசத்தியிருந்தார் அமைச்சர் செந்தில்பாலாஜி.

இன்றிரவு சென்னை
இன்று மாலை விசைத்தறி நெசவாளர்கள் நடத்தும் நன்றி அறிவிப்பு விழாவில் பங்கேற்கும் முதலமைச்சர் ஸ்டாலின் இன்றிரவே சென்னை திரும்புவார் எனத் தெரிவிக்கப்படுகிறது.












Click it and Unblock the Notifications