பெருமாள் கோயிலுக்கு ஸ்டாலின் இன்று போவாரா.. கோவையில் பிரச்சாரம்.. பலத்த எதிர்பார்ப்பு..!
இன்று பெருமாள் கோயிலுக்கு ஸ்டாலின் செல்வாரா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது
கோவை: கோவை தொண்டாமுத்தூர் பகுதியில் உள்ள பெருமாள் கோவில் முன்பு முக ஸ்டாலின் இன்று பிரச்சாரம் மேற்கொள்ள விருக்கிறார்.. இதனால் அவர் சாமி கும்பிட போகிறாரா? திருநீறு பூச போகிறாரா என்ற எதிர்பார்ப்புகளுடன் கூடிய விவாதங்கள் சோஷியல் மீடியாவில் எழுந்துள்ளன.
திமுக தலைவர் கிராம சபை கூட்டங்களை நடத்தி வருகிறார்.. இந்த கிராம சபை கூட்டத்திற்கு தமிழக அரசு தடை விதித்திருந்தும், மக்கள் கிராம சபை என்ற புது பெயரில் கூட்டங்களை தொடர்ந்து நடத்தி வருகிறார்.
கிராம சபை கூட்டங்களை அரசியல் கட்சிகள் பிரச்சாரத்துக்கு பயன்படுத்துவதாக ஏற்கனவே அதிமுக தரப்பில் சொல்லப்பட்டு வரும் நிலையில், அதிமுகவை நிராகரிக்கிறோம் என்ற பகிரங்க கோஷத்துடனேயே திமுக கூட்டங்களை நடத்தி வருகிறது.
குறைகள்
இதுபோன்ற கிராம சபை கூட்டங்களினால் மக்களை நேரடியாக சந்தித்து பேசி, அவர்களின் குறைகளை கேட்பது திமுகவுக்கு பிளஸ் பாயிண்ட்டாக அமைந்து வருகிறது.. அந்த வகையில், கோவை மாவட்டம், தொண்டாமுத்துார் பரமேஸ்வரன் பாளையம் பகுதியில் கொங்கு திருப்பதி பெருமாள் கோவில் முன்பு இன்று மக்கள் கிராம சபை கூட்டம் நடத்தப்படுகிறது.
விவாதம்
இது சம்பந்தமாகத்தான் சோஷியல் மீடியாவில் பல்வேறு விவாதங்களும், யூகங்களும் வெடித்து கிளம்பி வருகின்றன.. இந்த கூட்டம் துவக்குவதற்கு முன்பு ஸ்டாலினை பெருமாள் கோவிலுக்கு அழைத்து செல்கிறார்கள் என்றும், அங்கு, குருக்கள் தரும் செந்துாரத்தை தன் நெற்றியில் நாமமாக ஸ்டாலின் இட்டுக் கொள்ள வேண்டும் என்றும்.. அப்படி இட்டுக் கொள்ளும் நாமத்தை அழித்து விடக்கூடாது என்றும், சொல்லப்பட்டு இருக்கிறதாம்.
தேவர் ஜெயந்தி
இதற்கு காரணம், இப்படித்தான் பசும்பொன்னில் தேவர் பூஜையில் விபூதியை குருக்கள் தரவும், அதை ஸ்டாலின் கையில் வாங்கி, கழுத்தில் கொஞ்சமாக பூசிக் கொண்டு மீதியை கீழே கொட்டி விட்டார்.. இது சம்பந்தமான வீடியோக்களும் வெளியாகி, தேவர் சமூகத்தினர் திமுகவுக்கு எதிராக கொந்தளித்தும் விட்டனர். தேர்தல் சமயத்தில் இதுபோல எந்த சர்ச்சையிலும் ஈடுபட கூடாது என்பதற்காகவும், இந்துக்களுக்கு எதிரான கட்சி திமுக இல்லை என்பதற்காகவும் இப்படி ஒரு ஐடியாவை ஐபேக் நிறுவனமே தந்துள்ளதாக சொல்லப்படுகிறது.
விமர்சனம்
ஆனால், இதெல்லாம் எந்த அளவுக்கு உண்மை என்று தெரியவில்லை.. ஒருவேளை இது அனைத்துமே பொய்யாக அமையும் பட்சத்தில், அப்போதும் திமுகவை சரமாரியாக விமர்சிக்க அதிமுக இன்று தயாராகி உள்ளதாம்.. ஸ்டாலின் சொல்லி வரும் குற்றச்சாட்டுகளுக்கு பதிலடி தரும் வகையில், அமைச்சர் ராஜேந்திர பாலாஜி, நடிகை விந்தியா பங்கேற்கும் பிரசார கூட்டம் அதே பகுதியில் இன்று ஏற்பாடு செய்திருக்கிறார்கள்.
சிக்கல்?
எப்படி பார்த்தாலும், திமுகவுக்கு இது பிளஸ் & மைனஸ் ஆக அமைய போகிறது என்கிறார்கள் அரசியல் நோக்கர்கள்.. பெருமாள் கோயில் செந்தூரத்தை இட்டுக் கொண்டால், இந்துக்கள் மனம் குளிரும் என்றால், இல்லையென்றால் மேலும் விவகாரம் சிக்கலாகும் என்கிறார்கள்.
பிரச்சனைகள்
ஒருசிலரோ, இதெல்லாம் தேவையில்லாதது.. பெருமாள் கோவிலில், ஸ்டாலின் தலைமையில், இந்த கூட்டம் நடத்துவதால், மதப் பிரச்சனைகளும், சட்டம் ஒழுங்கு பிரச்னைகளும்தான் ஏற்பட வாய்ப்பு உள்ளது என்கிறார்கள்.. இன்னொரு தரப்பினரோ, கோயிலை மறைத்து அதன் புனிதத்தன்மையை அவமதிக்கும் வகையில், அரசியல் கூட்டம் நடத்த அனுமதிக்கக் கூடாது என்றும் சொல்கிறார்கள்.
எதிர்பார்ப்பு
எத்தனையோ இடங்களில் ஸ்டாலின் கிராம சபை கூட்டங்களை நடத்தினாலும் இன்றைய தினம், பெருமாள் கோயில் முன்பு நடத்தப்படும் கூட்டம் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தி வருகிறது.. ஸ்டாலின் பெருமாள் கோயிலுக்கு செல்வாரா? செந்தூரம் இட்டுக் கொள்வாரா? அல்லது வெறும் கூட்டம் மட்டும் நடத்தப்படுமா? பொறுத்திருந்து பார்ப்போம்!