முதல்வர் விஜய் படத்தை மாட்டவிடாமல்.. முரண்டு பிடிக்கும் திமுக மேயர்! கோவையில் சலசலப்பு!
கோயம்புத்தூர்: முதலமைச்சர் சி.ஜோசப் விஜய்யின் புகைப்படத்தை வைக்க கோவை திமுக மேயர் ரங்கநாயகி மறுப்பு தெரிவித்ததால் சலசலப்பு ஏற்பட்டிருக்கிறது. இதனையடுத்து முதல்வரின் படம், மேயரின் உதவியாளர் இருக்கைக்கு மேல் சிறியதாக தொங்கவிடப்பட்டிருக்கிறது.
நடந்து முடிந்த தமிழக சட்டமன்ற தேர்தலில் பெரிய மாற்றம் ஏற்பட்டிருக்கிறது. ஏறத்தாழ 60 ஆண்டுகால திராவிட ஆட்சியை வீழ்த்தி விஜய் தலைமையிலான தவெக மிகப்பெரிய வெற்றியை பெற்றிருக்கிறது. தற்போது கூட்டணி கட்சிகளின் உதவியால் விஜய் முதலமைச்சராக பதவியில் அமர்ந்திருக்கிறார்.

கோவை மேயரின் பிடிவாதம்
மறுபுறம் திமுக இந்த தோல்வியை கொஞ்சம் கூட எதிர்பார்க்காததால், கடும் அதிருப்தியில் இருக்கிறது. இந்த அதிருப்தி ஆட்சியாளர்களிடமும் எதிரொலித்திருக்கிறது.
அதாவது கோயம்புத்தூர் மேயர் ரங்கநாயகி தன்னுடைய அறையில் முதலமைச்சர் விஜய்யின் படத்தை மாட்ட மாட்டேன் என்று மறுத்திருக்கிறார். கோவையை பொறுத்தவரை, மேயர், துணை மேயர், நிலைக்குழு தலைவர்கள், மண்டல தலைவர்கள் என அனைவரும் திமுகவை சேர்ந்தவர்கள். இதில் துணை மேயர் வெற்றிச்செல்வன் மட்டும் தனது அறையில் முதலமைச்சர் விஜய்யின் படத்தை வைக்க எந்த மறுப்பும் தெரிவிக்கவில்லை. ஆனால் மேயர், தனது அறையில் படத்தை மாட்ட கடும் எதிர்ப்பு தெரிவித்திருக்கிறார்.
விஜய் படத்திற்கு பதில் மு.க.ஸ்டாலின் படம்
நீண்ட போராட்டத்திற்கு பின்னர், மேயரின் உதவியாளர் இருக்கைக்கு மேல் சிறிய படமாக முதலமைச்சரின் படம் தொங்கிவிடப்பட்டிருக்கிறது. ஆனால், முன்னாள் முதலமைச்சர்களான கலைஞர் கருணாநிதி, மு.க.ஸ்டாலின் மற்றும் முன்னாள் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் ஆகியோரின படங்கள், மேயர் அறையில் பெரியதாக தொங்கவிடப்பட்டிருக்கிறது. இது தவிர முன்னாள் அமைச்சர்களான கே.என்.நேரு, செந்தில் பாலாஜி ஆகியோரின் படங்களும் இடம்பெற்றிருக்கின்றன.
முடியவே முடியாது
இது குறித்து மேயர் ரங்காநயகியிடம் செய்தியாளர்கள் விளக்கம் கேட்டிருக்கிறார்கள். அதற்கு, முதல்வரின் படம் அறைக்கு முன் வைத்திருக்கிறேன் என்றும், 2027 வரை எனக்கு பதவி காலம் இருக்கிறது, அதுவரை என் அறைக்குள் அந்த படத்தை வைக்கமாட்டேன் என்று சொன்னதாக தெரிகிறது. இதனால் தவெக-திமுவினரிடையே மோதல் வெடிக்கும் சூழல் உருவாகியிருக்கிறது.
யார் இந்த ரங்கநாயகி
கோவை மேயராக இருந்த கல்பனா மீது தொடர்ந்து ஏராளமான புகார்கள் எழுந்ததால், அவர் கடந்த 2024ம் ஆண்டு மேயர் பதவியிலிருந்து ராஜினாமா செய்திருந்தார். இதனையடுத்துதான் புதிய மேயராக ரங்கநாயகி நியமிக்கப்பட்டார். கல்பனா கவுண்டர் சமூகத்தை சேர்ந்தவர் என்பதால், அவருக்கு மாற்றாக அதே சமூகத்தை சேர்ந்தவர் நியமிக்கப்பட வேண்டும் என்றும், தலைமைக்கு உயரிய விசுவாசமாக இருப்பவராக இருக்க வேண்டும் என்பதான் அடிப்படையில், 29வது வார்டு கவுன்சிலரான ரங்கநாயகி மேயராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.
சாதாரண எளிய குடும்ப பின்னனிதான். ஆனால், கட்சிக்கு விசுவாசமாக இருப்பார் என்பதால் செந்தில்பாலாஜியின் பரிந்துரையின் பேரில் இவர் மேயராக தேர்ந்தெடுக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications