தேசியக்கீதம் அவமதிப்பு.. கிராமசபை கூட்டத்தில் எழாத திராவிடர் கழக நபர்? கோவையில் பரபரப்பு- வீடியோ
கோவை: கோவை சூலூர் அருகே கிராம சபை கூட்டத்தில் தேசியக்கீதம் இசைக்கப்பட்டபோது திராவிட கழகத்தை சேர்ந்த ஒருவர் எழுந்து நிற்க மறுத்ததாக வீடியோ ஒன்று வேகமாக பரப்பப்பட்டு வரும் நிலையில் போலீசார் விசாரணையை தீவிரப்படுத்தி உள்ளனர்.
தமிழ்நாட்டில் சுதந்திர தினம், குடியரசு தினம், உழைப்பாளர் தினம், காந்தி ஜெயந்தி உள்பட முக்கிய நாட்களில் ஒவ்வொரு ஊராட்சிகளிலும் கிராம சபை கூட்டம் என்பது நடத்தப்பட்டு வருகிறது.

அதன்படி ஆண்டுக்கு 6 கிராம சபை கூட்டங்கள் நடக்கிறது. ஆண்டுக்கு 4 கிராம சபை கூட்டங்கள் மட்டும் நடந்து வந்த நிலையில் அதன் எண்ணிக்கையாக 6 ஆக முதல்வர் ஸ்டாலின் உயர்த்தினார்.
இந்நிலையில் தான் காந்தி ஜெயந்தியையொட்டி நேற்று தமிழகம் முழுவதும் 12,525 கிராம ஊராட்சிகளிலும் கிராம சபை கூட்டங்கள் நடந்தது. இந்த கிராம சபை கூட்டங்களை நேற்று முதல்வர் ஸ்டாலின் காணொலி காட்சி மூலம் தொடங்கி வைத்தார். அதன்பிறகு கிராம சபை கூட்டங்கள் மாநிலம் முழுவதும் தொடங்கி நடந்தது. பெரும்பாலான இடங்களில் இந்த கிராம சபை கூட்டங்கள் அமைதியாக நடந்து முடிந்தன. கிராம ஊராட்சிகளின் பிரச்சனைகள் குறித்து கூட்டத்தில் விவாதிக்கப்பட்டு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
இந்நிலையில் தான் நேற்றைய கிராம சபை கூட்டத்தில் தேசியக்கீதம் இசைக்கப்பட்டபோது கருப்பு சட்டை அணிந்திருந்த முதியவர் ஒருவர் எழுந்து நிற்காமல் இருப்பதாக வீடியோ ஒன்று இணையதளங்களில் பரவியது. மேலும் அவர் திராவிட கழகத்தை சேர்ந்த பழனிச்சாமி என்பதும், கோவை மாவட்டம் சூலூர் அருகே பீடம்பள்ளி கிராம சபை கூட்டத்தில் பங்கேற்ற அவர் தேசியகீதம் இசைக்கப்பட்டபோது எழுந்து நிற்காமல் இருந்ததாகவும் தகவல்கள் பரவியது.

இதுபற்றி சூலூர் போலீசார் விசாரணையை தொடங்கி உள்ளனர். இந்நிலையில் தான் பழனிச்சாமி தரப்பில், கிராம சபை கூட்டத்தில் கோரிக்கையை வைத்தேன். அதனை பரிசீலனை செய்து விவாதிக்க வாய்ப்பு கேட்டேன். ஆனால் மறுத்துவிட்டனர். அதோடு தனக்கு தெரியாமலே தேசியக்கீதம் இசைக்கப்பட்டு தவறான தகவல் பரப்பப்பட்டு வருவதாக கூறியுள்ளார்.
இதையடுத்து கிராம சபை கூட்டத்தில் நடந்தது என்ன? தேசியக்கீதத்தை அந்த நபர் அவமதித்தாரா? சம்பவத்தின் உண்மை நிலை என்ன? என்பது பற்றி விசாரணையை தீவிரப்படுத்தி உள்ளனர். மேலும் இந்த விவகாரம் குறித்து வதந்தி பரப்புவோர் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் சூலூர் போலீசார் எச்சரித்துள்ளனர்.












Click it and Unblock the Notifications