"தங்கத்தை" முட்டையாகயிடும் கோழிகள்! நாமக்கல்லில் வரலாறு காணாத உச்சத்தில் கொள்முதல் விலை
நாமக்கல்: நாமக்கல்லில் முட்டை கொள்முதல் விலை உயர்ந்துள்ளதாக பண்ணையாளர்கள் தெரிவித்துள்ளனர். இது வரலாறு காணாத அளவுக்கு உயர்வு என்கிறார்கள். இதனால் கோழி பண்ணையாளர்கள் மகிழ்ச்சியில் உள்ளனர். ஆனால் கோழிக் கறி, ஆட்டுக் கறிகளின் விலை உயர்ந்துள்ள நிலையில் முட்டையின் கொள்முதல் விலை உயர்வு, சில்லறை விலையில் எதிரொலித்துவிடுமோ என்ற அச்சம் பொதுமக்களுக்கு இருக்கிறது.

நாமக்கல், சேலம், ஈரோடு, பெருந்துறை, கோவை உள்ளிட்ட நாமக்கல் மண்டலத்தில் மொத்தம் 1300 கோழிப் பண்ணைகள் உள்ளன. இங்கு 7.50 கோடி முட்டையிடும் கோழிகள் உள்ளன. இவற்றின் மூலம் தினமும் 6.50 கோடி முட்டைகள் உற்பத்தி செய்யப்படுகின்றன.
இங்கு உற்பத்தியாகும் முட்டைகளுக்கான விலையை நாமக்கல்லில் உள்ள தேசிய முட்டை ஒருங்கிணைப்புக் குழு நாள்தோறும் நிர்ணயம் செய்து வருகிறது. தமிழக அரசின் சத்துணவுத் திட்டத்திற்கும் வெளிநாட்டிற்கும் ஏற்றுமதி செய்வது போக மீதமுள்ள முட்டைகள், கேரளா உள்ளிட்ட வெளிமாநிலங்களுக்கும் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களுக்கும் விற்பனைக்காக தினசரி லாரிகளில் அனுப்பி வைக்கப்படுகின்றன.
இந்த நிலையில் முட்டைக்கான கொள்முதல் விலையை நாமக்கல்லைத் தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் தேசிய முட்டை ஒருங்கிணைப்புக் குழு (NECC) தினசரி அறிவித்து வருகிறது.
நாமக்கல் மண்டலத்தில் முட்டை கொள்முதல் விலை ரூ. 5.90 காசுகளாக இருந்து வந்தது. இந்த நிலையில் நாமக்கல்லில் நடந்த என்இசிசி கூட்டத்தில் முட்டையின் விலையை 5 காசுகள் உயர்த்த முடிவு செய்யப்பட்டது.
இதனால் முட்டை கொள்முதல் விலை ரூ 5.95 காசுகளாக அதிகரித்துள்ளது. இதன் மூலம் நாமக்கல் மண்டலத்தில் முட்டை கொள்முதல் விலை வரலாறு காணாத வகையில் புதிய உச்சம் தொட்டுள்ளது.
முட்டையின் கொள்முதல் விலை கடந்த சில தினங்களாக உயர்ந்து கொண்டே வருவதால் கோழி பண்ணையாளர்கள் மகிழ்ச்சி அடைந்து வருகிறார்கள். வடமாநிலங்களில் முட்டையின் தேவை அதிகரிப்பு காரணமாக முட்டையின் கொள்முதல் விலை அதிகரித்துள்ளது. இந்த விலை மேலும் உயர வாய்ப்புள்ளதாக சொல்லப்படுகிறது. சில்லறை விற்பனை கடைகளில் முட்டை ஒன்றின் விலை ரூ 7-க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
கொள்முதல் விலை உயர்வால் சில்லறை விலை உயருமா என்ற அச்சம் எழுந்துள்ளது. ஏற்கெனவே கோழி, ஆட்டிறைச்சிகளின் விலை அதிகமாக இருக்கிறது. புரத சத்துமிக்க முட்டையை குழந்தைகள், வயதானவர்கள், நோயாளிகள் எடுத்துக் கொள்கிறார்கள். இந்த கொள்முதல் விலை உயர்வு சாமானியர்களை பாதிக்காத வண்ணம் இருக்க வேண்டும் என்பதுதான் அனைவரின் கோரிக்கையாக இருக்கிறது.












Click it and Unblock the Notifications