கோவை தெற்கு தொகுதியில் பணப்பட்டுவாடா..கரூர் ஆட்களை கையும் களவுமாக பிடித்த அதிமுக.. நள்ளிரவு பரபரப்பு
கோவை: கோவை தெற்கு தொகுதியில் திமுகவினர் வாக்காளர்களுக்கு பணம் கொடுப்பதாக அதிமுக புகார் எழுப்பியது. காரில் வந்து பணப்பட்டுவாடா செய்ததாக கரூரைச் சேர்ந்தவர்களை அதிமுகவினர் கையும், களவுமாக பிடித்து தாக்குதல் நடத்தினர். கார் கண்ணாடியை உடைத்து அதிமுகவினர் சாலை மறியலில் ஈடுபட்டனர். நள்ளிரவு திமுக - அதிமுக 2 கட்சிகளிலும் நூற்றுக்கணக்கானோர் திரண்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். நடந்தது என்ன
சட்டசபை தேர்தலுக்கான இறுதிகட்ட பிரச்சாரம் நடைபெற்று வருகிறது. கோவை மாவட்டத்தில் திமுக, அதிமுக இரண்டு கட்சிகளும் வாக்காளர்களுக்கு பணப்பட்டுவாடா செய்தாக புகார் எழுந்துள்ளது. சிங்காநல்லூர், கோவை தெற்கு, தொண்டாமுத்தூர் தொகுதிகளில் பணப்பட்டுவாடா அதிகாலை முதல் இரவு வரை நடைபெற்றதாக பல்வேறு புகார்கள் எழுந்தன.

பணப்பட்டுவாடா புகார்
கோவை தெற்கு தொகுதியில் திமுக நேற்று இரவு பணப்பட்டுவாடா செய்ததாக அதிமுகவினர் குற்றம் சாட்டி வருகிறார்கள். ராமநாதபுரம் 80 அடி வீதியில் கரூரை சேர்ந்தவர்கள் திமுக வேட்பாளர் செந்தில் பாலாஜிக்கு ஆதரவாக ஒரு வாக்காளருக்கு ரூ.5,000 பட்டுவாடா செய்ததாக அந்தப் பகுதி அதிமுகவினருக்கு தகவல் சென்றுள்ளது.
சம்பவ இடத்திற்கு சென்ற அதிமுகவினர் பட்டுவாடா செய்த கரூரைச் சேர்ந்தவர்களை பிடித்து தாக்குதல் நடத்தியுள்ளனர். அவர்கள் வந்த காரை சுற்றுவளைத்தும் அதிமுகவினர் தாக்குதல் நடத்தியதாக புகார் எழுந்தது. இதுகுறித்து பறக்கும் படை அதிகாரிகள் மற்றும் காவல்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர்கள் கார் முழுவதும் சோதனை நடத்தினார்கள்.
பதற்றம்
இதனிடையே கோவை தெற்கு தொகுதி வேட்பாளர் அம்மன் அர்ஜுனன் தலைமையில் 100க்கும் மேற்பட்ட அதிமுக, பாஜக நிர்வாகிகள் அங்கு திரண்டு திமுகவுக்கு எதிராக கோஷம் எழுப்பினார்கள். நள்ளிரவில் அவர்கள் சாலை மறியலிலும் ஈடுபட்டனர். இதையடுத்து திமுக மாவட்ட செயலாளர் செந்தமிழ்செல்வன் சம்பவ இடத்திற்கு விரைந்து திமுகவினர் தாக்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்தார்.
ராமநாதபுரம் காவல்துறையினர் அந்த காரில் வந்த திமுக நிர்வாகிகளை காவல் நிலையம் அழைத்து சென்று விசாரணை நடத்தினார்கள். அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அதிமுகவினர் ராமநாதபுரம் காவல் நிலையத்தை முற்றுகையிட்டுள்ளனர். இதையடுத்து திமுகவினரும் அங்கு சென்று காவல்நிலையத்தை முற்றுகையிட்டனர்.
தடியடி
திமுக, அதிமுக இரு தரப்பிலும் கடுமையான வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் அந்த இடத்தில் பெரும் பதற்றம், பரபரப்பு ஏற்பட்டது. காவல்துறையினர் 2 கட்சியினர் மீதும் தடியடி நடத்தி கூட்டத்தை கலைத்தனர். இந்த சம்பவம் குறித்து ராமநாதபுரம் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.












Click it and Unblock the Notifications