மின் கட்டணம் உயர்வுக்கு சிறு, குறு தொழில் நிறுவனங்கள் கடும் எதிர்ப்பு.. முதல்வருக்கு பறந்த கடிதம்
கோவை: தமிழ்நாட்டில் சென்னைக்கு அடுத்தபடியாக பெருநகரமாக உள்ள கோவையில் தான் அதிகமான சிறு குறு நிறுவனங்கள் இயங்கி வருகின்றன. தென்னிந்தியாவின் மான்சிஸ்டர் என்று போற்றப்படும் கோவை ஒரு காலத்தில் மின்வெட்டு பிரச்சனையால் தவித்தது. இப்போது அந்த நிலை இல்லை.. எனினும் மின் கட்டண உயர்வு பிரச்சனை அவர்களை தொடர்ந்து பாதித்து வருகிறது. இந்நிலையில் அடுத்த மாதம் முதல் உயர்த்த உள்ள 6 சதவீதம் மின்கட்டண உயர்வால் சிறு, குறு தொழில் நிறுவனங்கள் பாதிக்கப்படும் என்று கடும் எதிர்ப்பு எழுந்தள்ளது.
கோவை என்றாலே ஜவுளி என்று தான் பலருக்கும் நியாபகம் வரும். ஆனால் உண்மையில் ஜவுளி நிறுவனங்கள் எல்லாம் திருப்பூர், ஈரோடு பகுதிகளில் இப்போது கோவையை விட அதிகமாக உள்ளன.கோவை முழுக்க முழுக்க தொழில் நகரமாக மாறி உள்ளது. ஸ்ரீபெரும்புதூர், ஒரகடம், மறைமலைநகர், எண்ணூர் என சென்னையின் புறநகர்கள் எப்படி தொழில் மயமாக உள்ளதோ, அதுபோல் மொத்த கோவை மாநகரமும், புறநகர் பகுதிகளும் தொழிற்சாலைகள் மிகுந்த நகரமாக மாறி உள்ளது.

கோவையில் ஆட்டோமொபைல் உதிரிபாகங்கள், பம்ப்செட், வார்ப்படம், கிரைண்டர் போன்ற தொழில்கள் பிரதானமாக மாறிவிட்டன. குறிப்பாக இந்தியா முழுவதற்கும் என்ஜினியரிங் பொருட்கள் உற்பத்தி செய்யும் இடமாக கோவை உள்ளது.
கோவையில் பதிவு செய்த குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் எண்ணிக்கை மட்டுமே 1.5 லட்சத்துக்கும் மேல் உள்ளன. இதன்மூலம் நேரடியாகவும் மறைமுகமாகவும் 4 லட்சம் தொழிலாளர்கள் வேலைவாய்ப்பு பெற்று வருகிறார்கள். இந்த சிறு குறு நிறுவனங்கள் தான் கோவையின் முதுகெலும்பாக உள்ளது. இந்நிலையில் மின்கட்டணஉயர்வு பெரும் பாதிப்பை ஏற்படுத்தும் என்று கவலை தெரிவிக்கிறார்கள்.
தமிழ்நாடு கைத்தொழில் மற்றும் குறுந்தொழில் முனைவோர்கள் சங்க (டேக்ட்) தலைவர் ஜேம்ஸ், தமிழக முதல்-அமைச்சருக்கு அனுப்பிய மனுவில் கூறுகையில், "தமிழகத்தில் கடந்த 2022-ம் ஆண்டு மின்சார ஒழுங்குமுறை ஆணையத்தின் உத்தரவை ஏற்று மின்வாரியம் சிறு, குறுதொழில் முனைவோர்கள் பயன்படுத்தும் மின்சாரத்திற்கான கட்டணத்தை பல மடங்கு உயர்த்தியது. நிலைகட்டணம் 450 சதவீதம் வரை உயர்த்தப்பட்டது. இதனால் உற்பத்தி செலவில் பெரும் தொகையை மின்கட்டணத்துக்கே செலுத்த வேண்டிய நிலை ஏற்பட்டு உள்ளது.
ஆண்டுக்கு 6 சதவீதம் உயர்த்தப்படுவதால் சிறு, குறு தொழில் நிறுவனங்கள் தொடர்ந்து பாதிக்கப்பட்டு வருகிறது. அடுத்த மாதம் முதல் உயர்த்த உள்ள 6 சதவீதம் மின்கட்டண உயர்வை வாபஸ் பெற வேண்டும். நிலை கட்டணத்தை குறைக்க வேண்டும். 12 கிலோ வாட்டுக்கு கீழ் மின் இணைப்பு பெற்றவர் களுக்கு 3 பி-யில் இருந்து 3 ஏ1 ஆக மாற்றி அமைக்க உத்தரவிட்ட அரசின் உத்தரவு இன்னும் செயல்படுத்தப்படாமல் உள்ளது. அதை செயல்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications