சசிகலாவுக்கு எடப்பாடி செய்த துரோகம்.. இத கேளு! அதிமுக தொண்டரிடம் ஆறுகுட்டி ஆவேசம்! லீக்கான ஆடியோ
கோவை: சமீபத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் இணைந்த அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ. ஆறுகுட்டி, அதிமுக தொண்டர் ஒருவரிடம் காட்டமாக பேசும் செல்போன் உரையாடல் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
கடந்த 2011 முதல் 2021 ஆம் ஆண்டு வரை அதிமுக சட்டமன்ற உறுப்பினராக இருந்து வந்தவர் ஆறுகுட்டி. கடந்த ஆட்சிகாலத்தில்
அதிமுக நிகழ்ச்சிகளில் நடனமாடியே ஊடகங்களில் கவனம் ஈர்த்தவர் ஆறுகுட்டி.
ஓ.பன்னீர்செல்வம் சசிகலாவுக்கு எதிராக தர்மயுத்தம் நடத்தியபோது, அவரது அணியில் இருந்த ஆறுகுட்டி, பின்னர் எடப்பாடி பழனிசாமியின் அணிக்கு தாவினார். 2021 சட்டமன்றத் தேர்தலில் தோல்வியடைந்த ஆறுகுட்டி, எடப்பாடி அணியில் தொடர்ந்து இருந்து வந்தார்.

திமுகவுக்கு தாவிய ஆறுகுட்டி
இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பாக பொள்ளாச்சியில் நடைபெற்ற திமுகவின் மாநாட்டில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் அதிமுகவிலிருந்து விலகி திமுகவில் இணைந்தார் ஆறுகுட்டி. அவர் மீது அதிமுகவினர் பல்வேறு விமர்சனங்களை முன்வைத்த நிலையில், ஆறுகுட்டியை வேடந்தாங்கல் பறவை என எடப்பாடி பழனிசாமி சாடினார்.

அதிமுக தொண்டர் பேச்சு
இந்த நிலையில் நாகராஜ் என்ற அதிமுக தொண்டர் ஆறுகுட்டியை தொடர்புகொண்டு பேசிய உரையாடல் ஆடியோ சமூக வலைதளங்களில் அதிகளவில் பகிரப்பட்டு வருகிறது. அதில், "உங்களுக்கு ஜெயலலிதா 2 முறை சட்டமன்ற தேர்தலில் போட்டியிட வாய்ப்பு கொடுத்தார்கள். உங்களுக்காக நாங்கள் உயிரை கொடுத்து உழைத்தோம்.

ஆவேசமடைந்த ஆறுகுட்டி
ஜெயலலிதாவுக்கு இப்படி துரோகம் செய்து விட்டீர்களே. நீங்கள் ஜெயலலிதாவுக்கு நயவஞ்சகம் செய்து விட்டீர்கள்." என்று கூறினார். இதற்கு பதிலளித்த ஆறுகுட்டி, "நான் என்ன துரோகம் செய்தேன். சசிகலாவுக்கு எடப்பாடி பழனிசாமி செய்த துரோகத்தை பற்றி கேள்." என்று காட்டமாக பதிலளித்தார்.

தூண்டிவிட்டுள்ளார்கள்
ஆறுகுட்டி, நாகராஜ் இடையிலான இந்த ஆடியோவை சமூக வலைதளங்களில் பலர் அதிகளவில் பகிர்ந்து வருகின்றனர். இது தொடர்பாக விளக்கமளித்து இருக்கும் ஆறுகுட்டி, "நாகராஜ் எனக்கு தெரிந்த நபர்தான். செல்போனில் பேசாமல் நேரில் பேசிக்கொள்ளலாம் என்று அவரிடம் தெரிவித்தேன். யாரோ தூண்டிவிட்டு அவரை பேச வைத்து இருக்கின்றனர்." என்றார்.












Click it and Unblock the Notifications