ஈரோடு, சேலம், கோவை ரூட்டில் ஸ்பெஷல் வந்தே பாரத்.. இன்று முதல் எர்ணாகுளம் டூ பெங்களூருக்கு எக்ஸ்பிரஸ்
கோவை: எர்ணாகுளத்திலிருந்து பெங்களூருக்கு சிறப்பு வந்தே பாரத் ரயில் சேவை அறிவிக்கப்பட்டுள்ளது.. கோவை ஈரோடு சேலம், வழியாக இந்த வந்தே பாரத் சேவை இன்று முதல் இயக்கப்படுகிறது.
கேரளா - தமிழ்நாடு - கர்நாடகா ஆகிய மூன்று மாநிலங்களை இணைக்கும் வந்தே பாரத் சேவை இன்னும் செயல்பாட்டுக்கு வராமல் இருந்தது.. எனவே, கோவை - பெங்களூரு கன்டோன்மென்ட் வந்தே பாரத் ரயிலை பாலக்காடு வரை நீட்டிக்க வேண்டும் என்று பல்வேறு தரப்பினரும் கோரிக்கை வைத்தபடி இருந்தனர்..

இந்த சூழலில் தெற்கு ரயில்வே நிர்வாகம் புதிதாக ஒரு சிறப்பு ரயில் சேவையை அறிவித்துள்ளது. அதன்படி, எர்ணாகுளம் - பெங்களூரு வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் சேவை இன்று முதல் ஆரம்பமாகிறது..
தமிழகம்: தமிழகத்திற்கு புதிதாக ஒரு வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் வரப்போகும் நிலையில், இந்த அறிவிப்பானது, தமிழக மக்களுக்கும் மிகுந்த மகிழ்ச்சியை தந்துள்ளது.. காரணம், கேரள மாநிலம் எர்ணாகுளத்தில் தொடங்கி தமிழகத்தின் கொங்கு மண்டலம் வழியாக கர்நாடகா மாநிலத்தின் பெங்களூரு நகரை சென்றடைகிறது.
அதன்படி, கொச்சியில் இருந்து பெங்களூரு செல்லும் பயணிகளுக்காக அதிவேக ரயில் சேவை என்றும் சொல்லலாம். 06001 என்ற எண் கொண்ட எர்ணாகுளம் - பெங்களூரு வந்தே பாரத் ரயில் இன்று ஜூலை 31ம் தேதி முதல் பயன்பாட்டிற்கு வந்துள்ளது.. சிறப்பு ரயில் என்பதால் ஆகஸ்ட் 25ம் தேதி வரை இந்த அதிரடி அறிவிப்பு மட்டும் அறிவிக்கப்பட்டுள்ளது.

எர்ணாகுளம்: இந்த ரயிலானது எர்ணாகுளத்தில் இருந்து பெங்களூருவிற்கு சிறப்பு ரயிலாக வாரத்தில் புதன், வெள்ளி, ஞாயிறு ஆகிய மூன்று நாட்கள் இயக்கப்பட உள்ளது. அதேபோல் மறு மார்க்கமாக பெங்களூருவில் இருந்து எர்ணாகுளத்திற்கு இயக்கப்பட உள்ளது. இந்த வந்தே பாரத் ரயில் எர்ணாகுளம், திருச்சூர், பாலக்காடு, கோவை போத்தனூர், திருப்பூர், ஈரோடு, சேலம் மற்றும் பெங்களூர் ரயில் நிலையங்களில் நிறுத்தப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. முதல்கட்டமாக 12 சேவைகள் மட்டும் அறிவிக்கப்பட்டுள்ளன.
இதுகுறித்து வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பில், "எர்ணாகுளம் - பெங்களூரு வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் வாரத்தில் மூன்று நாட்கள் இயக்கப்படும். இதற்கான முன்பதிவு தொடங்கி நடைபெற்று வருகிறது.
வந்தே பாரத்: ஐஆர்சிடிசி இணையதளத்திற்கு சென்று பார்த்தால் இன்று காலை நிலவரப்படி 300க்கும் மேற்பட்ட டிக்கெட்கள் இருக்கின்றன. எனவே ஆகஸ்ட் 25 வரை பயணம் செய்ய விரும்புபவர்கள் தங்கள் பயணத்தை வந்தே பாரத் ரயிலில் திட்டமிட்டு கொள்ளலாம். 06001 என்ற எண் கொண்ட எர்ணாகுளம் - பெங்களூரு கன்டோன்மென்ட் வந்தே பாரத் ரயில் ஜூலை 31, ஆகஸ்ட் 2, 4, 7, 9, 11, 14, 16, 18, 21, 23, 25 ஆகிய நாட்களில் இயக்கப்படும்.
வாரத்தில் புதன், வெள்ளி, ஞாயிறு என மூன்று நாட்கள் மட்டும் இயக்கப்படுகிறது. எர்ணாகுளத்தில் நண்பகல் 12.50 மணிக்கு புறப்பட்டு இரவு 10 மணிக்கு பெங்களூரு கன்டோன்மென்ட் ரயில் நிலையத்தை சென்றடையும். மறுமார்க்கத்தில் 06002 என்ற எண் கொண்ட பெங்களூரு கன்டோன்மென்ட் - எர்ணாகுளம் வந்தே பாரத் ரயில் ஆகஸ்ட் 1, 3, 5, 8, 10, 12, 15, 17, 19, 22, 24, 26 ஆகிய நாட்களில் இயக்கப்படும். வாரத்தில் வியாழன், சனி, திங்கள் ஆகிய மூன்று நாட்கள் மட்டும் இயக்கப்படுகிறது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
சிறப்பு ரயில்: இந்த எர்ணாகுளம் - பெங்களூரு கன்டோன்மென்ட் வந்தே பாரத் ரயில் தமிழகத்தின் கொங்கு மண்டல பயணிகளுக்கு மிகுந்த பயனுள்ளதாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இன்றைய தினம் இந்த சிறப்பு ரயில், பயன்பாட்டுக்கு வந்துள்ள நிலையில், பயணிகளின் வரவேற்பை பொறுத்து இதன் சேவை விரிவாக்கம் செய்யப்படும் என்கிறார்கள்.
அதுமட்டுமல்ல, கேரளாவில் ஏற்கனவே 2 வந்தே பாரத் ரயில்கள் இயங்கி வரும் நிலையில் வரும், 3வது வந்தே பாரத் ரயில் சேவை தொடங்கப்பட்டுள்ளது, அம்மாநில மக்களுக்கும் கூடுதல் மகிழ்ச்சியை தந்து வருகிறது.












Click it and Unblock the Notifications