சென்னையே பரவாயில்லையே.. கோவையில் போற இடமெல்லாம் டேக் டைவர்சன்.. இனி கேரளாதான்
கோவை: சென்னையில் தான் எங்கு பார்த்தாலும் மெட்ரோ ரயில் பணிகளும், பாதாள சாக்கடை பணிகளும் அமைப்பதற்காக சாலைகள் தோண்டப்படுகிறது என்றால், கோவையிலும் குடிநீர், சாக்கடை கால்வாய் பணிக்காக பல இடங்களில் சாலைகள் தோண்டப்பட்டுள்ளது.
கோவையில் நடைபெறும் இந்த பணிகள் மிகவும் தாமதமாக நடப்பதாகவும், மக்கள் கடும் அவதிப்படுவதாக பலரும் குற்றம்சாட்டி உள்ளனர். எங்கு பார்த்தாலும் டேக் டைவர்சனாகவே இருப்பதாகவும் கோவைவாசிகள் குமுறுகிறார்கள்.

சென்னையின் இதயப்பகுதி அண்ணா சாலை என்றால், கோவையின் இதயப்பகுதி அவினாசி சாலை தான். அங்கு தான் பெரும்பாலான வணிக நிறுவனங்கள் உள்ளன. இந்த சாலை தான் சேலம், பெங்களூரு, சென்னை, கேரளாவை இணைக்கும் பகுதியாகும். இந்த சாலையில் ஏற்படும் போக்குவரத்து நெரிசலை வார்த்தைகளால் விவரிக்க முடியாது என்கிறார்கள் கோவை மக்கள். பீக் அவர்ஸில் உக்கடத்தில் பஸ் ஏறி கருமத்தம்பட்டி வர விரும்பினால், 1.30 மணி நேரம் வரை ஆகிறது என்கிறார்கள்.
கோவையில் பல இடங்களில் போக்குவரத்து நெரிசல் ஒருபுறம் எனில் , நகரின் பல்வேறு பகுதிகளில் பாலம் அமைக்கவும். குடிநீர், சாக்கடை கால்வாய் அமைக்கவும், சில இடங்களில் கேஸ் பைப்லைன் அமைக்கவும் சாலைகளில் குழிகள் தோண்டப்படுகின்றன.
தோண்டப்பட்ட இடங்கள் மோசமான நிலையில் இருப்பதால் வாகனங்களில் செல்ல முடியாத அளவிற்கு அவல நிலை இருக்கிறதாம். அத்துடன் சாலைகளில் பணிகள் ஆமை வேகத்தில் பணிகள் மேற்கொள்ளப் படுவதால் நகரின் மையப் பகுதிகள் கூட மிகவும் மோசமான நிலையில் காட்சியளிக்கின்றன. இதனால் வாகன ஓட்டிகள் தினமும் போக்குவரத்து நெரிசலில் சிக்க வேண்டிய அவல நிலை ஏற்பட்டுள்ளது.
இது ஒரு புறம் எனில் பல இடங்களில் 'டேக் டைவர்சன்' என்ற போர்டு வைக்கப்பட்டுள்ளதாகவும், அவர்கள் கூறுவது படி சென்றால், கேரளாவிற்குள் போய்விடுவோம் என்று கோவை மக்கள் வேதனையை கிண்டலாக வெளிப்படுத்துகிறார்கள்.
பணிகள் முடிந்த பல இடங்களில் சாலைகள் இன்னும் சீரமைக்கப்படாததை சுட்டிக்காட்டி குமுறும் கோவை மக்கள், எப்போதுதான் சாலைகளை சரி செய்வீர்கள் என்று கேட்கிறார்கள்.
ஒலம்பஸ் அருகே திருச்சி சாலை மோசமான நிலையில் இருக்கிறது. நஞ்சுண்டாபுரம் டூ ராமநாதபுரம் 80 அடி சாலை பணியால் மக்கள் வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளனர். இது ஒருபுறம் எனில் கோவையில் சில இடங்களில் பணிகள் முடிந்து மூடப்பட்ட இடத்தில் மீண்டும் மீண்டும் சாலைகள் தோண்டப்படுவதாகவும் புகார் எழுந்துள்ளது.
இதனால் விபத்துகளும் ஏற்படுவதாக மக்கள் கூறுகிறார்கள். மேம்பாலம், சாக்கடை கால்வாய் என எங்கு பார்த்தாலும் கோவையில் சாலைகள் தோண்டப்பட்டிருப்பதால் சாலைகளை போர்க்கால அடிப்படையில் சரி செய்ய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோவை மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.












Click it and Unblock the Notifications