கோவை அம்பிகா.. ஏட்டம்மா பெயரில் எக்குத்தப்பான வேலை.. போலீஸ் ஸ்டேசனுக்கு அல்வா.. பெரிய ட்விஸ்ட்
கோவை: கோவையில் போலீஸ் சீருடை அணிந்து வாகன சோதனையில் ஈடுபட்ட அம்பிகா குறித்து திடுக்கிடும் தகவல்கள் வெளியாகி உள்ளது. ஸ்கூட்டர் வாங்கிவிட்டு பணம் தாராமல் ஏமாற்றியவரை போலீஸ் ஸ்டேசனில் போய் விசாரித்த போது தான் போலி போலீஸ் என்பது தெரியவந்துள்ளது.
கோவையை அடுத்த பேரூரை சேர்ந்த 57 வயதாகும் அம்பிகா கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் செல்வபுரம் பகுதியில் உள்ள ஒரு ஷோரூமுக்கு சென்று ரூ.20 ஆயிரம் செலுத்தி ஸ்கூட்டரை ஒன்றை வாங்கி உள்ளார். அதற்கு மாதம் இஎம்ஐ தொகையாக 1,300 ரூபாய் செலுத்த வேண்டும். அந்த வாகனத்தை வாங்கும்போது தான் வெரைட்டிஹால் ரோட்டில் உள்ள போலீஸ் நிலையத்தில் போலீஸ் ஏட்டாக பணியாற்றுவதாக கூறியதுடன், அதற்கான அடையாள அட்டையையும் அம்பிகா காட்டி உள்ளார்.

பின்னர் ஸ்கூட்டரை வாங்கி சென்ற அம்பிகா அதற்கான தவணை தொகையை முறையாக செலுத்தவில்லை என்று கூறப்படுகிறது. அவருடைய செல்போனுக்கு தொடர்பு கொண்டு பேசியபோது ஷோரூம் ஊழியர்களுக்கு மிரட்டலும் விடுத்தாராம். இதனால் ஊழியர்கள் வெரைட்டிஹால் ரோடு போலீஸ் காவல் நிலையத்திற்கு சென்று ஏட்டம்மா அம்பிகா யார் என்று விசாரணை நடத்தினர்.
அப்போதுதான் அம்பிகா போலீஸ் ஏட்டு இல்லை என்றும், போலீஸ் என்றுக்கூறி ஸ்கூட்டர் வாங்கிவிட்டு அதற்கான தவணை தொகையை செலுத்தாமல் மோசடி செய்ததும் ஷோரும் நிறுவனத்திற்கு தெரியவந்தது. இது குறித்த புகாரின் பேரில் செல்வபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து அம்பிகா மற்றும் அவருடன் வந்த ரவி ஆகியோரை கைது செய்தார்கள்.
பின்னர் அவர்கள் 2 பேரையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி கோவை மத்திய சிறையில் அடைத்தனர். அம்பிகா, போலீஸ் சீருடையில் வேறு யாரிடமாவது மோசடி செய்து உள்ளாரா என்பது குறித்து போலீசார் விசாரித்தனர். விசாரணை குறித்த தகவல்கள் வெளியாகி உள்ளது.
போலீசார் வெளியிட்ட தகவலின் படி, சிறுவயது முதலே போலீஸ் ஆகி குற்ற செயல்களில் ஈடுபடுபவர்களை தட்டிக்கேட்க வேண்டும் என அம்பிகா ஆசைப்பட்டாராம். ஆனால் அவர் குடும்ப சூழ்நிலை காரணமாக 8-ம் வகுப்புக்கு மேல் படிக்க முடியாமல் போயிருக்கிறது. இதன் காரணமாக அவருக்கு போலீஸ் கனவு நிறைவேறாமல் போயிருக்கிறது.
எனவே தான் எப்படியும் போலீஸ் சீருடை அணிய வேண்டும் என்பதற்காக கடைக்கு சென்று துணி வாங்கி, போலீஸ் சீருடையை தைத்து வாங்கி உள்ளார். ஒரு நாடகத்தில் போலீஸ் வேடம் அணிகிறேன் என்று பொய் சொல்லி போலீஸ் சீருடையை தைத்து வாங்கி உள்ளார். அதை அணிந்து போலீஸ் போன்றே அம்பிகா பலமுறை இருசக்கர வாகனத்தில் வலம் வந்திருக்கிறார்.
பின்னர் தனக்கு தெரிந்த ரகு என்பவருடன் சென்று பல இடங்களில் வாகன சோதனையில் ஈடுபட்டு பணமும் பறித்து உள்ளாராம். அம்பிகா கோவையில் வேறு எந்த பகுதியிலாவது போலீஸ் என்றுக்கூறி மோசடி செய்து உள்ளார் என்பது குறித்து விசாரணை நடத்தி வருகிறோம் என போலீசார் தெரிவித்தனர்.












Click it and Unblock the Notifications